Monday, December 1, 2008

நிராகரிப்பு

நிராகரிப்பு
முதலில் வலி கொடுக்கும்
முடிவில் வழி கொடுக்கும்!

பிடிக்காததால் மட்டுமல்ல
வேறொன்று
பிடித்தாலும் இருக்கலாம்!

நிராகரிப்பின் காரணம்
நாமாகவும் இருக்கலாம்
தாமாகவும் இருக்கலாம்!

வெள்ளத்தில்
மழை வெறுத்த உள்ளம்
வறண்ட கண்மாயின்
வெடித்த நாக்கினை
மழைநீர் நனைக்கையில்
துள்ளிக் குதிக்கும்!

நிராகரிப்பில்
நிம்மதிகளும் உண்டு
பறவைகளின் நிராகரிப்புத்தான்
காடுகளாகவும்
பறவைகளின் கூடுகளாகவும்!

நிராகரிப்பு
பத்தியமாகும்போது
வைத்தியமாகிறது!

மூங்கில்
நிராகரித்த காற்றுதான்
கீதமாகிறது!

நம் நிலம்கூட
நீரின் நிராகரிப்புத்தான்!
கடலுக்கு
உப்பிட்டு வருவதால்
இன்றுவரை அபகரிக்காமல்!

கற்றுக்கொள்
நிராகரிப்பை நிறையாக்க
நிராகரிக்க!

Friday, October 17, 2008

கிறுக்கல்!

ஏபிசிடி எழுதத்தெரியாமல்
கிறுக்கியிருந்தது குழந்தை
எழுதிப் பார்த்தேன்...
என்னால் முடியவில்லை
அதுபோல கிறுக்க!

பேசாத வார்த்தைகள்...

உன்னிடம் பேசாத வார்த்தைகள்
மரித்துப்போன
என் கல்லறை தேசத்தில்
உனைப் பார்க்கும்போதெல்லாம்
உயிர்த்தெழுதல் நடக்கிறது...
உடனுக்குடன்
சிலுவையில் அறையப்படுகிறது!

ஹைகூ

வேலி மீது கோபமில்லை
கரட்டாண்டியை
காணும்வரை!

அமாவாசையன்று
பவுர்ணமியாக
வானம்!

மெல்லிது காமம்!

ஊடல் சாய்ந்து கூடலான பொழுதில்
தொடங்கிய என் தேடல்
இறுதிவரை முடியாது
ஓய்ந்தது உன் உடல் மீதே...
இன்னமும் நீ
சொல்லாமல்
கண்மூடி இருக்கிறாய்...
வெட்கத்தை இமைக்குள் ஒளித்தபடி!

Tuesday, September 23, 2008

இரவு

இது
உறக்கத்திற்காக மட்டுமல்ல
உறவுகளின் இறுக்கத்திற்காகவும்!

நிறங்கள் கலவி செய்யும்
நிறவேற்றுமையில்லா
நேரமிது!

நில்லாமல் சுழலும் வாழ்க்கையில்
இயற்கை
நமக்களிக்கும் நிழல்!

இரவின் வானத்தில்
வானவில்லாய்
கனவுகள்!

உடல்கள் உறங்க
கனவுகள்
கண்டபடி திரியும்!

இங்கு
எல்லைகள் ஏதுமில்லை
விடியலைத் தவிர!

Thursday, August 14, 2008

இன்னுமொரு சுதந்திர தினம்!

வருகிறது...
இன்னுமொரு சுதந்திர தினம்!
நாள்தொறும்
வன்முறையையும்
தீவிரவாதத்தையும்
கட்டவிழ்த்துவிடும்
அரசியல்வாதிகளால்
அன்றொருநாள் மட்டும்
மலர்கள் கட்டவிழ்த்துவிடப்படும்!
"வசூலித்த" பணத்திலிருந்து
மிட்டாய்கள் வழங்கப்படும்!

லஞ்சத்தில் ஊஞ்சலாடும்
அரசு அலுவலகங்களனைத்தும்
அன்று மட்டும்
தேசிய வர்ணத்தால்
வேசங்கட்டும்!
வடநாட்டவர்க்கு
ஹோலி பண்டிகை
இவர்களுக்கோ
இது ஒரு போலிப் பண்டிகை!

பள்ளிகளில்
மேலும் சில மணித்துளிகள்
கூடுதல் வழிபாடு நடக்கும்...
அனைவரின் சட்டைப்பையிலும்
கோடி குத்தப்பட்டிருக்கும்
காவிநிறம் மேல்வருமா?
பச்சை நிறம் மேல்வருமா?
பட்டிமன்றமும் நடக்கும்!
கால்கடுக்க நிற்கவைத்தாலும்
விடுமுறையை நினைத்தால்
வலி மறக்கும்!

இந்திய சுதந்திர வரலாறு
சொல்ல மறந்த தொலைக்காட்சிகள்
இந்தியத் திரைப்பட வரலாற்றில்
முதல்முறையாக
ஏதேனும் சாதனை செய்யும்!
உடையைத் தியாகம் செய்த
இறக்குமதி நடிகைகளும்
தயாரிப்பாளர்களை
"செக்"கிழுக்கவைத்த நடிகர்களும்
அவ்வப்போது தமிழ்பேசி
ஆச்சர்யப்படுத்துவார்கள்!
விளம்பரதாரர்களால்
சுதந்திரதின வாழ்த்துக்கள்
இரு நிமிடங்களுக்கு ஒருமுறை
கூவிக்கூவி விற்கப்படும்!

அன்றும்கூட சுதந்திரமின்றி
அடுப்படிக்கும் தொலைக்காட்சிக்குமாய்
அல்லாடியபடி
வீட்டில் "சும்மா" இருக்கும்
இல்லத்தரசிகள் இயங்கிவர,
சுதந்திரமாக ஆண்வர்க்கம்
வழக்கம்போல
இன்னுமொரு சுதந்திரத்தை
கொண்டாடி மகிழும்!

Friday, July 11, 2008

வெட்கமேயில்லை...
விளக்கைக்கூட அணைக்காமல்...
மின்மினிப்பூச்சிகள்!

ஊடல்!

கோபம் உன்னோடுதான்
என்னோடுகூட பேச மனமில்லாமல்
நான்!

உன்னோடு பேச்சடக்குவது
கடினமாயிருக்கிறது
நீருக்குள் மூச்சடக்குவதை விட!

நீ இருந்ததை உணரவில்லை
இப்போது உணர்கிறேன்
வெறுமையை!

மௌனப்பார்வை போதும்
என்
மௌனத்தை நொறுக்க!

Monday, June 30, 2008

நீ ஒன்றும் பேரழகியல்ல...
எப்படிப் புரிய வைப்பேன்
என் மனதிற்கு!

நாம் கனவிலிருக்கும்போது
கவனமாய் இரு...
கன்னத்தில் கொசுக்கடிகள்!

தினமும்
உன்னைச் சுற்றிச்சுற்றிப் பார்த்து
பொறாமைப்படுகிறது சேலை!

வந்து போகும் காதல்!

கூட்டுக் குடித்தனத்தில்
யாருமற்ற நேரம்பார்த்து
வந்து போகும் காதல்!

பரிவும் புரிதலும்
ஒதுங்கி நின்ற உரிமையும்
ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும்!

முன்னுரை முடிவுரை பேதமின்றி
கட்டுரை முடியும்...
நேரமின்றி!

சூரியன்

தினமும்தான் பார்க்கிறேன்...
இருந்தும்
ஏதோ ஒன்றை இழந்த தவிப்பு...
உன் மறைவைப் பார்க்கையில் மட்டும்!

தினம்தினம்
என் ஒருநாள் பொழுதை
எங்கே பதுக்குகிறாய்?
இடத்தைச் சொல்;
அள்ளி எடுத்துவந்து
நானாக ஒருமுறை
வாழ்ந்து பார்க்கிறேன்!

மின்சார ரயிலில்
பார்வையற்ற பாடகன்போல்
பயண நேரங்களில் மட்டும்
பார்வையில் படுகிறாய்...
பாவம்,
தினமும் உன்னை மட்டும்
திட்டியே பழகிவிட்டேன்!

தினமும்
நீ நடையாய் நடப்பது
ஏதேனும் வழக்கு விசயமா?
அல்லது
வழக்கமான விசயமா?

ஒரே பார்வையில்
மலர வைக்கவும்
உலர வைக்கவும்
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது?

இது டிஜிட்டல் யுகம்;
நள்ளிரவுவரை
சன்டிவிக்காக விழித்திருப்பதால்
சூரிய நமஸ்காரமெல்லாம்
இனி நடக்காது!
வேண்டுமானால்
செல்பேசி எண் கொடு,
குறுஞ்செய்தியில் அனுப்புகிறோம்!

நவக்கிரகங்களின்
உச்ச நட்சத்திரமே!
அச்சாணியாய் நீயிருப்பதால்
அச்சமின்றி சுற்றுகிறோம்!
எங்கள் வாழ்வில் ஒளியேற்றி
தன்னைத்தானே
எரித்துக்கொள்ளும்
உன்னுள் மிளிருது தாய்மை!

நீ
தூங்கப்போவதாகச் சொல்லி
தினமும் எங்களை ஏமாற்றுகிறாய்...
நாங்களும் ஏமாறி தூங்கப்போகிறோம்!

எனக்கு மட்டும் சக்தியிருந்தால்
உன்னையும் ஒருநாள்
இருளில் இழுத்துவந்து
தூங்க வைப்பேன்!

Monday, June 16, 2008

தொலைக்காத என் கவிதை!

தொலைக்காத கவிதையைத் தேடி
தெருவில் நடந்து சென்றேன்...

எண்ணை விடாத மிதிவண்டி
முனங்கியபடி
கடந்து சென்றது என்னை!

தெருவோரக் குப்பையில்
பால்கவர் பொறுக்கிய பெண்ணை
'தீண்டாமல்' திட்டின தெருநாய்கள்!

அறுந்து கிடந்த செருப்பில்
பலமுறை குத்தியிருக்கிறது...
தையல் ஊசி!
சற்று தூரத்தில்
'உடன் குப்பை' ஏறிய
மற்றொரு செருப்பு!

பாதியிலேயே வீடு திரும்பினேன்
குப்பையில் கிடைத்த
தொலைக்காத என் கவிதையோடு!

Tuesday, May 6, 2008

மின்சாரம் துண்டிக்கப்பட்ட
புழுக்கமான இரவில்
என் போலவே
பக்கத்து வீட்டுக்காரனும்
நிலவினை ரசித்துக் கொண்டிருந்தான்!
வெயில் கொடுமை...
மலருக்கு
குடை பிடித்தபடி வண்ணத்துபூச்சி!

Tuesday, April 22, 2008

இது ஒரு கோடைகாலம்!

கோடை விடுமுறையின்
உச்சகட்டக் கொண்டாட்டத்தில்
தெருவெங்கும்
பறக்கும் பந்துகளைத்
தடுக்கும் சிறுவர்கள்...
தயவுசெய்து
தெருவில் நடக்காதீர்கள்!

உழைக்கப் பயந்து
வீட்டினுள் முடங்கும்
சொம்பேறிகளையும்
உழைக்கமலேயே
உடல் வியர்க்க வைக்கும்;
நம்மை வியக்க வைக்கும்!

வியர்வையை ஒற்றி ஒற்றி
கைக்குட்டைகள்
நீர் நிரம்பிய
குட்டைகளாகச சொட்டியபடி!
சொட்டுநீர் சேகரித்தால்
வீராணத்தை நிரப்பலாம்!

வீட்டுத் தொலைக்காட்சிகளில்
ஷாருக்கான் முதல்
நம்மூர் திரிஷா வரை
வெயிலை விரட்டிட
யோசனை சொல்கிறார்கள்;
விஞ்ஞான ரீதியாக அல்ல,
விளம்பரரீதியாக!

ரேடியோ மிர்ச்சி மட்டுமல்ல
சூரியனும் கூட
இப்போ
செம ஹாட் மச்சி!

Wednesday, April 16, 2008

நிலா

இருட்டு உலகில்
சூரியனின் திருட்டு பார்வையே
நீ!
கவிஞர்கள் கூட்டத்தின்
முதல் காரணம் நீ!
அவர்கள் கண்பட்டதாலேயே
நீ கறைபட்டுப் போனாய்!

மாதத்தில் பாதிநாள்
அள்ளி அள்ளிக் கொடுக்கிறாய்
மீதிநாள்
மெல்ல மெல்ல நிறைகிறாய்...
அமுதசுரபியும் நீயே!

இங்கு
தினம் தினமுன்னை
பெருமூச்சுடன்
பார்ப்பவர் கோடி!
உடல் இளைக்கவும்
உடன் பருக்கவும்
சூட்சுமத்தை சொல்லாயோ?!

ராகுவும் கேதுவும்
உனைக் கொன்றதும்
தின்றதும்
இறுதியில் வென்றதும்
நீ
காணாமல் போனதால்
கிடைத்த கதையல்லவா?!

கற்பனாவாதி உன்னை
பெண்ணாக வர்ணிக்கிறான்!
ஆன்மீகவாதி உன்னை
கையெடுத்து கும்பிடுகிறான்!
குழந்தையோ உன்னை
கை நீட்டி அழைக்கிறது!
இருந்தும் ஏனோ
உன் முகத்தில் சோகம்?
ஓ!
அறிவியல் உன்னை
காலால் மிதித்து விட்டதோ?!

Thursday, April 10, 2008

ஒகெனக்கல் உனக்குச் சொந்தமா?

ஒகெனக்கல்
உனக்குச் சொந்தமா?
பஞ்சுப் பொதியென
குதித்தோடும் அருவியை
சற்று உற்று பார்!
விட்டால் போதுமென
தமிழகம் நோக்கி
தஞ்சம் தேடும் காவிரியின்
நெஞ்சு துடிக்கும் ஓசை கேள்!
எல்லை
உனக்கும் எனக்குமே...
இயற்கைக்கு எல்லையில்லை!

இதயங்களை
ஓட்டுப்பெட்டிக்குள்
பூட்டிவிட்டால்
வாக்குச் சீட்டுகளே
னாக்கினை ஆளும்!
ஒட்டுப்போட்ட இந்தியாவில்
ஓட்டு அரசியல்...
வாடிக்கையாளர்களாய்
மக்களை (ஏ)மாற்றி
வேடிக்கை பார்க்குது!

கட்டிக்கொடுத்த பெண்ணுக்கே
விருந்தழைப்பு
முதல் மூன்றாண்டுகள்
மட்டும் தான்...
ஆண்டாண்டு காலமாய்
அழைப்பதும்,
அலைக்கழிப்பதுமாய்...
ஏனிந்த புத்தி?
புரிந்துகொள்;
நாம் சம்பந்திகளல்ல,
பங்காளிகள்!

காவிரி நீர் வற்ற வற்ற
வற்றிப்போகும் ஈரம்
பீறிட்டு வழியுதோ
வெள்ள நாட்களில்?
உள்ளபோது
தரமறுக்கும் உள்ளம்
ஏன் மாறுது
வெள்ள நாட்களில்?
தமிழகமென்ன கழிப்பிடமா?

மேகங்களின் முத்தமே,
மண் உமிழ்ந்த
மிச்சமே காவிரி...
உச்சத்திலிருப்பதாலேயே
உனக்குச் சொந்தமில்லை!
பிச்சை கேட்கவில்லை,
பயிர் வாடப் பார்த்திருந்தோம்;
உயிர் வாழவும் காத்திருப்பதோ?
பங்கினைக் கேட்கிறோம்!
உரிமையோடு எடுக்கிறோம்!
கொடுப்பதற்கும் எடுப்பதற்கும்
தேவை வீரமல்ல...
ஒரு துளி ஈரம்!

Tuesday, March 25, 2008

தப்பு தப்பாக!

(பேருந்து நிறுத்தம்)

பெரும்பாலும்
பேருந்துகள் நிற்பதில்லை...
புரியாத மனிதர்கள் மட்டும்!

தொலைக்காட்சியால் பேச மறந்ததை
செல்பேசியில்
பேசும் உறவுகள்!

பேருந்துகளை ஓரங்கட்டி ஓரங்கட்டி
மக்களால் ஓரங்கட்டப்பட்ட
பயணச்சீட்டு ஆய்வாளர்கள்!

நொடிக்கு நொடி
கடிகாரத்தில் முகம் பார்க்கும்
தாமதவாதிகள்!

சில்லரை மிச்சங்களை
ஏ(ஓ)லத்தில் எடுக்கும்
பிச்சைக்காரர்கள்!

Friday, March 14, 2008

திருமண மண்டபம்

திருமண மண்டபம்
ஒருநாள் கூத்துக்கு
வேடதாரிகளாக
பார்வையாளர்களும்!

செம்பு கலந்த பொன்நகை
வம்பு கலந்த
புன்னகைப் பெண்கள்!

பிரசவ வேதனையிலும்
சிரித்தபடி
மணப்பெண்ணின் தந்தை!

அட்சதை அரிசியை எறிந்தும்
விலகாத
புகைப்படக்காரர்!

பாட்டுக்கச்சேரி முடியவும்
சீட்டுக்கச்சேரி
விடிய விடிய!

கூட்டத்தின் பொய்யும் மெய்யும்
இறுதியில் அளக்கப்படும்
மொய்யாலே!

Friday, February 29, 2008

இப்படியும் கூட கவிதை எழுதுவோம்!

வட்ட நிலா
சுற்றி நிறைய நட்சத்திரம்
இரவு!

மலை
உடைச்சா சிலை
அதுதான் கலை!

நண்பா!
விடிந்தது உனக்கு!
விழித்தெழு!
எழுந்து நில்!
நிமிர்ந்து நில்!
விரைந்து செல்!
தொடர்ந்து செல்!
கவுரி கிளாசுக்குக் கிளம்பிட்டா!!

தோழா!
ஆத்திரப்படு...
ஆணவம் விடு!
தீப்பந்தம் எடு...
தீமையைச் சுடு!
தீக்குச்சி எடு...
சிகரெட்டைப் பத்தவை!

கண்ணே மதி!
நீ எந்தன் பாதி
நான் உந்தன் மீதி
உன் பேச்சைக் கேட்காட்டா
"நங்கு நங்கு"ன்னு மிதி!

நீ அடுப்பானால்
நான் குக்கராவேன்!
நீ துடுப்பானால்
நான் படகாவேன்!
நீ கடுப்பானால்
நான் "எஸ்கேப்" ஆவேன்!

Thursday, February 28, 2008

என் அலுவலகக் சிரிப்புகள்!

கல்லூரி நாட்களில் கடுப்படிக்கும் பாடவேளைகளில்தான் கவிதை ஊற்றெடுக்கும், உடனே எழுதத் தோன்றும்! அதுதான் அப்போதைய ஆறுதல்!


அதுபோலவே தற்போது கணிப்பொறி நிறுவனத்தில் வேலை பார்க்கும் எனக்கும், எல்லோரையும்போல காதில் தலைபேசி(head phone!) மாட்டிக்கொண்டு, மனதின் மூடுக்குத் தக்கபடி பாடலை ரசித்தபடி வேலை(!) செய்வது மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கும்! ஹெட்போனில் பாடலை அலறவிட்டபடி(அருகிலிருப்பவருக்கும் பாடல் கேட்கும்படியாக!) ரசிப்பதும் பழக்கமாகி விட்டது! இதனால் பிற்காலத்தில் காது கேட்பதில் கோளாறு வரலாமென சிலர் கோளாறு சொன்னாலும் மனம் கேட்க மறுக்கிறது!


இதுவே போகப்போக, ஹெட்போன் மாட்டினால் தான் வேலையே செய்ய முடியும் என்ற அளவிற்கு ஹெட்போனுக்குத் தலைவணங்கும் நிலை ஏற்பட்டு விட்டது! பாடல் கேட்க விரும்பாத நேரங்களிலும்கூட ஹெட்போன் எனது தலையிலேயே மாட்டியபடி இருக்கும்! ஹெட்போன் மாட்டி வேலை செய்யும்போது ஏதோ விமானத்தில் பறக்கும் பைலட்டின் நினைப்பு மனதினுள்!!


ஒருநாள், என் உடன் பணியாற்றும் நண்பர், விளையாட்டாக திடீரென எனது ஹெட்போனைப் பிடுங்கி தனது தலையில் மாட்டிக்கொண்டு நான் கேட்கும் பாடலை ரசிக்க முனைந்தார்... பெரிய பல்ப்!!! பாடல் ஒன்றுமே கேட்கவில்லை! குழப்பத்தோடு பார்க்க, ஹெட்போன் பாட்டு கேட்க மட்டுமல்ல, தலைக்கு ஒரு "கிரிப்" கிடைப்பதற்காகவும் மாட்டலாம் எனச் சொல்ல, அவர் நொந்து விட்டார்!


அலுவலகத்திற்கு வரும்போது ஹெல்மெட் மாட்டுவதும், அலுவலகத்தினுள் ஹெட்போன் மாட்டுவதும் வழக்கமாகி விட்டதால், அது இல்லாத நேரங்களில் கிரீடம் இழந்த மன்னனைப் போல மனம் வேதனைப்படுகிறது!!


இதுபற்றி யோசிக்கும்போது,"நீரு இல்லாத நெற்றி பாழ்" என்று, நெற்றியில் திருநீறு பூசாமல் இருந்தால் ஏதோ நிர்வாணமாக இருப்பதாக உணர்வதாக திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் சொன்னதாக பத்திரிக்கையில் படித்த செய்திதான் நினைவுக்கு வருகிறது!!!

Monday, February 25, 2008

போகிற போக்கில்...

தினமும் பைக்கில் அலுவலகத்திற்குச் செல்வது தான் வழக்கம். 12 கிலோ மீட்டர் பயணம். வேடிக்கை பார்த்தப்டி செல்வதால் அலுப்பு தட்டுவதில்லை, எனினும் டிராபிக் சிக்னல்களில் நிற்கும்போது மட்டுமே சற்று கடுப்பாக இருக்கும்.

இது பற்றி நான் எழுதிய கவிதை ஒன்று இப்போது நினைவிற்கு வருகிறது...

"ஒவ்வொரு நிறுத்தத்திலும்
ஏதோ ஒரு பெண்ணிருப்பாள்
கோபம் மறக்க!"

எப்படியோ தெரியவில்லை, கடந்த சில மதங்களாக ஒரு வித்தியாசமான பழக்கம் என்னைத் தொற்றிக்கொண்டது! ஆம், நெருக்கடியான நேரங்களிலும், சிக்னலில் நிற்க்கும்போதும் அப்படியே ஒரு நோட்டம் விடுவேன்... யார் யார் என்ன என்ன கம்பெனி ஹெல்மெட் அணிந்திருக்கிறார்கள் என்று!

பெரும்பாலும் நான் அணிகின்ற ரேங்குலர் ஹெல்மெட்டுகள்தான் முன்னிலையில் இருக்கும். (அதில் ஒரு பெருமை எனக்கு!) அடுத்ததாக வேகா, ஸ்டட்ஸ், கிமி வகை ஹெல்மெட்டுகள் பரவலாக உள்ளன. பொழுதுபோகாத பொம்மு போல இப்படி எண்ணிக்கை பார்ப்பது இப்போது வழக்கமாகவே ஆகி விட்டது! எங்கே நீங்களும் ட்ரை பண்ணிப் பாருக்களேன்!

கொசுறு தகவல்: கிமி வகை ஹெல்மெட்டுகளில் போலியாக கிவி என்ற பெயரில் சில ஹெல்மெட்டுக்களையும் பார்த்தேன்!

Thursday, February 21, 2008

தமிழக காங்கிரஸ் கட்சியையும் ஏலம் விடலாமே?

பிரபல எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் வரலாற்று நாவல்களில் பெண்களை ஏலத்தில் எடுக்கும் செய்தியை/கொடுமையை விளக்கமாகச் சொல்லியிருப்பார். அதற்கு ஏற்படும் பலத்த போட்டி படிக்கின்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்!

தற்போது IPL சார்பாக இந்திய வீரர்களின் ஏலம் பற்றிய செய்தியைப் படித்ததும் எனக்கும் அந்த நினைவுதான் வந்தது! இதற்கு முன்பு நடந்த அணி நிர்வாகிகளுக்கான ஏலமும் இதே ரகம்தான். இந்த அணி நிர்வாகிகள் பட்டியலில் பணத்தில் புரளும் விஜய் மல்லையா மாதிரி பிசினெஸ் காந்தங்கள்(!) மட்டுமல்லாது சாருக்கான் போன்ற கிரிக்கெட் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

கொல்கத்தா அணியை விலைக்கு வாங்கிய சாருக்கான், இந்திய அணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட கங்குலியின் திறமையை பாராட்டியதோடல்லாமல் அவரை அணிக்குத் தலைமையேற்கவும் வைத்துள்ளார். அவர் திறமைக்கேற்ப மதிப்பான சம்பளமும் வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் வீரர்களின் ஆட்டத்திறனை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை இப்போதே தொடங்கி விட்டனர். இதையெல்லாம் பார்க்கும்போது, சரியான தலைமை இல்லாமல் தவிக்கும் தமிழக காங்கிரசையும் ஏன் "வெளிப்படையான" ஏலத்தில் விடக்கூடாதென்ற யோசனை என்னுள் தோன்றியது.

2000ல் காமராஜர் ஆட்சி, 2006ல் காமராஜர் ஆட்சி, 2011ல் காமராஜர் ஆட்சி என்று தமிழக மக்களையும் காங்கிரஸ் தொண்டர்களையும் ஏமாற்றி வரும் காங்கிரஸ் தலைமைப் பதவியை "வெளிப்படையான" ஏலத்திற்கு விட்டால் என்ன? உண்மையில் கக்கன், காமராஜர் காலத்து காங்கிரஸ் தலைவர்கள் போல ஏழ்மை நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இப்போது இல்லை. தங்கள் பணத்தையெல்லாம் கொஷ்டி வளர்ப்பதிலேயே செலவழித்து வீணடிக்கிறார்கள். இந்நிலையை மாற்றி தமிழக காங்கிரஸை "வெளிப்படையான" ஏலத்திற்கு விட்டால் காங்கிரஸ் கட்சி பலப்பட நிறைய வாய்ப்புள்ளது!

* ஏலத்தின் மூலமாக ஒரு பெரிய தொகை காங்கிரஸ் தலைமைக்குக் கிடைக்கும!

* இன்னும் மூன்றாண்டுகளுக்கு தலைவர் பதவியை யாரும் பறிக்க மாட்டார்கள் என்ற நிம்மதி கிடைக்கும்!

* போட்ட பணத்தை எடுக்கவேண்டிய கட்டாயத்தின் காரணமாக தேர்தலின்போது மட்டும் விழித்துக்கொள்ளும் தூங்குமூஞ்சி அரசியலுக்கு முடிவுகட்டிவிட்டு முழுநேர அரசியலுக்கு காங்கிரஸ் திரும்பும்!

* கொஷ்டிகள் வைத்துக்கொள்வதற்குக் குறிப்பிட்ட பணத்தை கட்சித்தலைமைக்குக் கட்ட வேண்டுமென தடாலடி உத்தரவு போடலாம். ஒத்துவராதவர்களை கட்சியைவிட்டே கட்டம் கட்டலாம். இதனால் கொஷ்டி ஒழியவும், பணம் பெருகவும் வாய்ப்புள்ளது.

* கூட்டணிக்காக விஜயகாந்த் போன்ற புதுக்கட்சிகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்காமல் பணத்தாலேயே அடித்து வளைக்கலாம்!

* தனது தயவில் கூட்டணி ஆட்சி நடந்தாலும் வெறும் கூப்பாடு மட்டுமே தங்களால் போடமுடியும் என்ற நிலைமாறி பேரம்பேசி ஒன்றிரண்டு அமைச்சர் பதவிகளை, முடிந்தால் முதல்வர் பதவியையும் விலைபேசி தனது கனவான காமராஜர் ஆட்சியையும் எளிதில் அமைக்கலாம்!

என்ன நான் சொல்றது???

Thursday, February 14, 2008

காதல் உலாவும் வீதி!

நம் பாதச்சுவடுகளை
அழித்து அழித்து
களைத்துப் போயின அலைகள்!
வா! வீடு திரும்புவோம்!
.......................................................
மணிக்கணக்கில் பேசினாலும்
பேச மறந்த ஏதோ ஒன்று
மனதை உறுத்தும்!
.......................................................
உன்னைப் பிடிக்கும்;
உனக்குப் பிடித்ததால்
என்னையும் பிடிக்கும்!
.......................................................
நீ அனுப்பிய குறுஞ்செய்தியை
பலமுறை படித்திருக்கிறேன்;
மிகவும் அருமை" என்று
முதல்முறை பதில் அனுப்பினேன்!
.......................................................
காதல் அழகானது;
அதை அணிந்து கொண்டால்
நாமும்!
.......................................................
தாஜ்மஹால் கட்டுவது இருக்கட்டும்...
முதலில்
தாலி கட்டுங்கள்!

Tuesday, February 5, 2008

தொட்டாஞ்சிணுங்கி

தொட்டாஞ்சிணுங்கியை
தொடாமல் ரசித்தேன்...
அதுவும் என்னை ரசித்தது!

Tuesday, January 29, 2008

வடிவேலுவாக மாறிய ஹர்பஜன்சிங்!!!

ஹர்பஜன்சிங் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஹர்பஜன்சிங் விவகாரத்தில் நடந்த விசாரணையில் யாரும் அறியாத சில ரசிக்கத்தக்க(!) தகவல்களை இப்பகுதியில் கொடுத்துள்ளேன்! ரகசியமாக இருக்கட்டும்!!
-----------------------------------------------------------------------------------------------
நீதிபதி: நீ சைமெண்ஸ திட்டுனியா?
ஹர்பஜன்சிங்: என்ன திட்டுனியா?!
நீதிபதி: ஏப்பா, நீ சைமெண்ஸ திட்டுனியா இல்லியா?
ஹர்பஜன்சிங்: என்ன திட்டுனியா இல்லியா?!
நீதிபதி: ஏப்பா பாண்டிங்கு, நான் சரியாதானப்பா கேக்குறேன்?
ஹர்பஜன்சிங்: என்ன சரியாதானப்பா கேக்குறேன்?!
நீதிபதி: சொன்னதயே திரும்பத் திரும்ப பேசுற நீ!
ஹர்பஜன்சிங்: என்ன திரும்பத் திரும்ப பேசுற நீ?!
பாண்டிங்: நீதிபதிய கலாய்ச்சா பார்த்துக்கிட்டு நாங்க சும்மா இருக்க மாட்டோம்.
ஹர்பஜன்சிங்: சும்ம எதுக்கு இருக்குற? கைல பேட்டத் தூக்கிக்கிட்டு அலைய வேண்டியது தான?!
பாண்டிங்: இப்ப கரெக்டா பதில் சொல்றான் சார்! இப்போ கேளுங்க!
ஹர்பஜன்சிங்: என்ன இப்போ கேளுங்க?!(இதைப்பார்த்துக்கொண்டே இருக்கும்போது சைமெண்ஸ் முகத்தில் கடுப்பேறுகிறது)
சைமெண்ஸ்: டேய், உன்னை கிரவுண்டுலயே போட்டிருக்கணும். இவ்ளோ தூரம் உன்னைப் பேச விட்டது தப்பு!
ஹர்பஜன்சிங்: ஏய்! ஸ்டாப் இட் மேன்! நீ மட்டும் இவ்ளோ தூரம் முடிவளர்த்து சடை போட்டிருக்கியே, உன்னை எதாவது கேட்டமா?
(உடனே சைமெண்ஸ் அடிக்கப் பாய்கிறார். தெண்டுல்கர் குறுக்கே விழுந்து தடுக்கிறார். ஹர்பஜன்சிங் உடனே நீளமான கோடு ஒன்றைக் கிழிக்கிறார்!)
ஹர்பஜன்சிங்: இந்த கோட்டைத்தாண்டி நீயும் வரக்கூடாது... நாங்களும் வரமாட்டோம்! பேச்சு பேச்சோட இருக்கணும்!
சைமெண்ஸ்: கோட்டைத்தாண்டி அந்தப் பக்கம் வந்தா?
ஹர்பஜன்சிங்: வந்தா நீயும் எங்க பக்கம் இருப்ப! என்ன இது சின்னப்புள்ளத்தனமா?
தெண்டுல்கர்: பாஜ்ஜி அவனுங்கள கலாய்ச்சது போதும். விட்டுடு.(மீண்டும் நீதிபதி கேட்கிறார்)
நீதிபதி: இப்போ சொல்லு, நீ சைமெண்ஸ திட்டுனியா?
ஹர்பஜன்சிங்: ஆமா திட்டுனேன்!
நீதிபதி: எதுக்கு இவனை திட்டுன?
ஹர்பஜன்சிங்: நீங்களே பாருங்க இவனோட தலைய! எங்க "தல"யே தன்னோட கூந்தல 'கட்' பண்ணிட்டு அமைதியா இருக்குறப்ப இவனுக்கு இது தேவயா?
நீதிபதி: இதுக்கு தோனி தான கோபப்படணும்? உங்களுக்கு எதுக்கு கோபம் வருது?
ஹர்பஜன்சிங்: பெரிய மனுஷன் கேக்குற கேள்வியாய்யா இது? என்னோட தலைய பாருயா! எப்படி அடக்கமா மூடிப்போட்டு இருக்குறேன்! இவன் என்னடான்னா இப்படி பப்பரப்பான்னு விரிச்சிப் போட்டுக்கிட்டு இருக்கானே!!! கம்பளிப்பூச்சி மாதிரி முடியத்தொங்கப் போட்டுக்கிட்டு பேட்டிங் பண்ணினால் எவனுக்குதான்யா பந்து போட மனசு வரும்?!!
நீதிபதி: அதுசரி, இவரப் பார்த்து குரங்குன்னு எதுக்கு சொன்ன?
ஹர்பஜன்சிங்: யோவ்! இதெல்லாம் ஒரு வசவா? எங்க ஊருப்பக்கம் வந்து பாரு! கவுண்டமணி,கவுண்டமணின்னு ஒரு அண்ணண் இருக்காரு! அவரு வய்யாத வசவாய்யா?
நீதிபதி: அப்படி என்ன திட்டிட்டாரு?
ஹர்பஜன்சிங்: போடா கோமுட்டித்தலயா! அடுப்பவாயா! நாறவாயா! தீச்சட்டித்தலயா! மொள்ளமாரி... (இப்படியே விடாமல் திட்டிக்கொண்டேபோக... இறுதியில் நீதிபதி காதில் ரத்தம் வழிகிறது!)
சைமெண்ஸ்: பிளட்! சேம் பிளட்!(நீதிபதி கண்ணீர் விடுகிறார்!)
ஹர்பஜன்சிங்: ஏய்! என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?! விடு, விடு, இதுக்குத்தான் விசாரணை வைக்காதீங்கடானு பலதடவை சொன்னேன்! கேட்டால் தான!!
(இறுதியில், வேறு வழியில்லாமல் ஹர்பஜன்சிங் மீதான தடையை நீதிபதி நீக்குகிறார்.)
இதுதாங்க உண்மையில் நடந்தது!!!

Friday, January 25, 2008

காதலிக்கும் காலத்தில்...

காதலிக்கும் காலத்தில்
எனக்கான காதலியாய் மட்டுமே
உனைப் பார்த்தேன்...
உனை மட்டுமே பார்த்தேன்...
இன்று
என் பெற்றோரின் மருமகளாய்
உடன்பிறப்புக்கு அண்ணியாய்
நம் குழந்தைக்குத் தாயாய்
இத்தனையாய் பார்க்கிறேன்...
இத்தனைக்காகவும் பார்க்கிறேன்...
இடையிடையே
எனக்கான காதலியாகவும்!

சொல்ல மறந்த கதை!

ஆதாமும் ஏவாளும்
ஓடிப்பிடித்து
ஆடிக்கொண்டிருக்கிறார்கள்
நிர்வாணமாக...
பழத்தைக் கொடுக்க மறந்த பாம்பு
வேடிக்கை பார்க்கிறது
தின்றபடி!

Friday, January 11, 2008

ஜல்லிக்கட்டுக்குத் தடை! - "விவசாயி வதை தடைச் சட்டம்" வருமா?

பொங்கல் திருநாளில்
ஜல்லிக்கட்டுக்குத் தடை!
காளைகளுக்காக
கண்ணீர் சிந்தியது போதும்...
பெருமாள் கோவிலில்
பிச்சையெடுக்கும்
யானைகளுக்காகவும்
கொஞ்சம் அழுது தொலையுங்கள்!

தூர்வாராத ஏரிகளை
ஏறி மிதித்துப்
பல்லிளிக்கும் கட்டடங்கள்
ஒருபுறம்...
நிலத்தடி நீர் தேடி,
நீர் தேடி,
ஏர் மறந்த நிலங்களை
தேடி வளைக்கும்
சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
மறுபுறம்!
விவசாயிகளே!
பயிர் வளர்த்தது போதும்...
டாடா கம்பெனியிலே
டயர் துடைக்க வாருங்கள்!

கோதுமைக்கு குவிண்டாலுக்கு
ஆயிரத்திற்கு மேல்...
நெல்லுக்கு மட்டும்
ஆயிரத்தெட்டு யோசனைகள்!
பயிரிலும்கூட
வடநாடு தென்னாடு
பேதமிருக்கு!
ஆறுதலாக ஒரு செய்தி;
விவசாயிகள் தற்கொலையில் மட்டும்
வேற்றுமையில் ஒற்றுமையாய்!

உங்களுக்கு
என் பொங்கல் செய்தி...
மேனகா காந்தியிடம்
கேட்டுப் பாருங்கள்;
அடுத்த பொங்கலுக்குள்
"விவசாயி வதை தடைச் சட்டம்"
வந்தாலும் வரலாம்
உங்களையும் காப்பாற்ற!
பொங்கலோ பொங்கலென
பொங்கட்டும் சிந்தனை...
எல்லோர் மனதிலும்!

Thursday, January 10, 2008

உரசிப் பார்க்கப்படும் உண்மை!

கலந்தாய்வு முடிந்து
படுக்கையில் கவிழும்போதுதான்
இது
வெறும் சதைச்சூடென்ற
உண்மை உறைக்கிறது...
இருந்தும்
ஒவ்வொரு இரவிலும்
உரசிப்பார்க்கப்படுகிறது உண்மை!

Tuesday, January 8, 2008

சவேரா - சாவே வா! - புத்தாண்டுக் கொண்டாட்டம்!

சவேரா - சாவே வா! - புத்தாண்டுக் கொண்டாட்டம்!------------------------------------------------------
ஆடை சரிந்தாலும்

அலட்டிக்கொள்ளாமல்

ஆட்டம் போட்ட கூட்டம்

அலறியடித்தது...

மேடை சரிந்ததால்!

உள்ளேயும் தண்ணி...

வெளியேயும் தண்ணி...

பாடை கட்டப்பட்டது

மூவருக்கு!!


...............................


பதினாறும் பெற்று

பெருவாழ்வு வாழும்

கங்காருவின்

பயணம் தொடர்கிறது...

வயிற்றுப்பையில்

நடுவர்களைச் சுமந்தபடி!


.....................................


தஙத்தின் விலை

கிராமுக்கு ஆயிரத்தைத் தொட்டது!

சிலருக்கு

பொன்னாசை விட்டது!

பலருக்கு

திருமண ஆசை விட்டது!