Tuesday, December 8, 2009

அதிபர்களின் அரசாங்கம்

உரிமை கேட்ட கூட்டத்தை
கொன்று தின்றதுபோக
மிஞ்சியதை
காலுடைத்து, கையுடைத்து
முள்வேலிக் கொட்டிலுக்குள்
சாகடிக்கும் அரசாங்கம்!
உச்சுக்கொட்டும் ஐநா சபை
விசாரிக்க வக்கற்று
வக்காலத்து வாங்குது
"பேஷ்! பேஷ்!" என்று!

சீனா, பாகிஸ்தானோடு
போட்டி போட்டு
ராணுவ பலத்தையெல்லாம்
கூட்டிக் கொடுத்த
கூட்டுக் களவாணி இந்தியா
கோடிகோடியாய்
கொட்டிக் கொடுக்குது...
இன்னும் புடுங்கப்போவதாய்
பேசித் திரியுது!
கண்ணி வெடிகளைப்
புடுங்கப்போவதாய் பேசித் திரியுது!
காஷ்மீரில்
எல்லை தாண்டிய தீவிரவாதமென்றால்
காலடியில்
ஈழத்தமிழரை கொன்றொழிப்பது
பௌத்த காருண்யமா?!

தன்னாட்டு மக்களை
கொன்றொழித்த பாவத்தை
திருப்பதி உண்டியலில்
கொட்ட வந்தவனுக்கு
அதிரடிப் பாதுகாப்பு!
அப்பாவி மீனவருக்கோ
துப்பாக்கிச்சூடு தான்
தினசரிப் பரிசு!

வரி ஏய்ப்பு செய்பவர்கள்
வருமானம் பெருக்க
'வடக்கின் வசந்தம்" வீசுது!
தொழிலதிபர் துயர்நீக்க
நற்சான்றிதழ் கொடுப்பதற்கே
இன்பச்சுற்றுலா சென்றுவந்தது
எம்பிக்கள் குழு!

இனி
சன் நெட்வொர்க்கில்
சிங்களமும் சேரும்!
குடும்பத்துக்கொரு
அமைச்சர் பதவி கேட்டு
கொழும்பிலும் கொட்டமடிக்கும்!
'பட்சே" சகோதரர்களுக்கு
'கொலைமாமணி"
விருது கொடுத்து குதூகலிக்கும்!

எதையோ சாதித்ததற்காக
நாளொரு பட்டமும்
பொழுதொரு பாராட்டுவிழாவுமாய்
சுற்றித் திரிபவர்
உலகத் தமிழ் மாநாட்டில்
ஒருவேளை அறிவிக்கலாம்...
ரகசிய முகாம் பற்றி
ஏதோவொரு வாரப் பத்திரிக்கையில்
படித்துப் பதைபதைத்ததாய்!
செம்மறித் தமிழறிஞர் கூட்;டம்
மன்னிக்கவும்,
செம்மொழித் தமிழறிஞர் கூட்டம்
'உச்சு"க் கொட்டி உருகலாம்!

Monday, December 7, 2009

உறவுகள்

அவரைப் போலொரு அப்பா;
இவரைப் போலொரு அம்மா;
அவனைப் போலொரு மகன்;
ஏங்கச் செய்யும் உறவுகள்
எதிர்ப்படும் வேளைகளில்
பிறவிப்பிழை
இலைவிட்டுக் கிளைவிட்டு
விருட்சமாய் விரியும்;
உறவுகள்
தேடிக் களைத்த வேர்கள்
ஓரிடத்தே நிலைப்பெற,
எங்கிருந்தோ வந்தமர்ந்த
ஏக்கப் பறவைகள்
சற்றே இளைப்பாறி,
கலைந்து செல்லும்
கனிசூழ் விருட்சத்தின்
உறவு தேடி!

Sunday, November 15, 2009

கனவுகள் தொலைப்பவன்!

நான் தேடிக்கிடைக்காத நிம்மதி
என்னைத் தேடிவரும் வரம்
கனவு!
ஒவ்வோர் இரவிலும்
சில
கனவுகளைத் தொலைத்துவிட்டுத்தான்
விழிக்கிறேன்
கசங்கிய படுக்கையை
உதறிவிட்டு மடிக்கும் போதும்
அகப்படுவதில்லை!

அள்ளக்குறையாத
தங்கக்குவியலை
ஏறிமிதித்து
சரித்து விளையாடுகையில்
கடித்த கொசுவை
நசுக்கும் நொடியில்
கனவு தொலைத்த சோகத்தை
யாரிடம் சொல்வேன்?!

உறக்கத்தின் பயணத்தில்
சிலநேரம் வானவில்லாய்
சிலநேரம் கானலாய்
எல்லாமே கணநேரமே!
ஆம்
அதிகபட்ச ஆயுசே
20 நிமிடம் தானாம்...
குறும்படம் போல்!

மனதை அரித்த நினைவுகள்
எக்கச்சக்க அச்சுப்பிழையுடன்
மறுபிரசுரமாவதை வியந்திருக்கிறேன்!
புகைப்படத்தில் சிரிக்கும் அப்பா
எப்போதாவது பேசிச் செல்வார்...
சாவின் வலியை
அவர் சொன்னதில்லை
வரும் வழியை
நான் கேட்டதுமில்லை
பேசிக் கொள்வோம்
வழக்கம்போல்
இன்றைய செய்தியையும்!

ஆசை முளைத்த நாள்முதலாய்
உறவு களைந்த உறவும்
வயது மரத்த மனமும்
காலம் கடந்த காலத்திலும்
உறுத்தாமல்...
நிறுத்தாமல்...
இந்திரனுக்கு இணையாக!
யார் தடைபோட்டது
கனவுக்கன்னியென்று?!

ஒற்றைக்கொம்பு சிறுத்தை
தொற்றிப் படரும் தென்னை
வற்றிய கிணற்றில்
தலைகுப்புற விழுந்தும்
அடிபடாத நான்!
இப்படி
எத்தனையோ ஆச்சர்யங்களை
அடுக்கலாம்...
என் கனவு அருங்காட்சியகத்தில்!

மன்னிக்கவும்
இதைப் பார்வையிட
என்னைத் தவிர
யாருக்கும் அனுமதியில்லை...
உங்களுக்காக
பயணக்கட்டுரை எழுதுவேன்
படித்துச் செல்லுங்கள்
யாரேனும் பிரசுரித்தால்!

Thursday, August 20, 2009

பிரிக்கப்படாத புத்தகங்கள்

வாடகை வீடு மாறியதும்
புத்தகங்களை
அலமாரியில் அடுக்குவதில்
அதிக ஆர்வம்...
பெரும்பாலும்
மூளைக்கொத்துக்கிடையே
இடம்பிடிக்காத
பிடிக்காத புத்தகங்களே!

அடுக்குகளில் சில
பரிசாக வந்தவை:
பல
கட்டாயம் படித்தாகவேண்டி
வாங்கியவை:
விரும்பி வாங்கிய
ஒன்றிரண்டு மட்டுமே
என் கைரேகைகளை
அவ்வப்போது பதியமிட்டபடி!

ஒருசில புத்தகங்களை
நான் தொட்டதேயில்லை
குழந்தைகளையாவது
தொட விட்டிருக்கலாம்...
என் வீட்டுக் கறையானுக்கும் கூட
இதே வருத்தம்தான்!

கல்லூரிவரை கால்பதித்தும்
அடையாளமாக
அடுக்கில் ஏதுமில்லை!
ஆம்:
புத்தகங்கள் மீதான
சிறிதான ஆர்வமும்
அற்றுப்போக விருப்பமில்லை!

அறிவுசார் புத்தகங்கள்
வாங்கும் பழக்கம்
அதிகரித்துள்ளதாக
கேள்விப்பட்டிருக்கிறேன்
படிக்கும் பழக்கமும்
பெருகியுள்ளதாக
எதிலும் படித்த நினைவில்லை!

என்றாவது ஒருநாள்
படிக்கும் ஆர்வம் வரும்...
என் பேரனுக்காவது!
அன்றுவரை
கல்வெட்டுக்காக
கால்கடுக்க நிற்கும்
தலைவர்கள் சிலைபோல்
புத்தகங்களை
அடுக்கிக்கொண்டே!

Tuesday, August 18, 2009

உன் நினைவுகள்!

மழை ஓய்ந்த பின்னும்
மரத்தடியில் சொட்டும் இலைநீராய்
அவ்வப்போது உன் நினைவுகள்!
இரவின் அமைதி கிழித்து
கடித்துக் குதறும்
நாய்களின் இரைச்சல்
மனதினுள் ரணமாக...
தூரத்து விளக்கு வெளிச்சத்தை
துரத்தும் ஈசல்கள்;
சில
இறகுகள் முறிந்து
உயிர் வடிந்தபடி
முடமான நம் உறவாய்!
திருப்பத்தில்
நீரை வாரியிறைத்த வாகனம்
நனைந்த சட்டையை
மீண்டும் நனைத்தது...
இனியொன்றும் ஆகப்போவதில்லை
இருந்தும்
நம்பிக்கை மட்டும் துளிர்த்தபடி...
ஒவ்வொரு
மழை இரவின் விடியலிலும்!

Saturday, August 15, 2009

இது எங்க சுதந்திர தினம்!

இது
முதலாளிகள் மாற்றத்தை
அடிமைகள் கொண்டாடும்
திருநாள்!

குண்டு துளைக்காத
கண்ணாடி கூண்டுக்குள்
வீராவேசமாக பிரதமர்!
வேடிக்கை பார்க்கும்
வெளிநாட்டுத் தலைவர்கள்!
பதட்டத்துடன்
பட்டொளிவீசிப் பறக்கும்
தேசியக்கொடி!

உணர்வு கொப்பளிக்க
கொடியட்டையை
சட்டையில் குத்துமுன்பே
காவி மேல் வருமா?
பச்சை மேல் வருமா?
என்ற குழப்பம்
மனதை "சுருக்"கென்று குத்தும்!
ஆண்டுக்கு இருமுறை மட்டுமே
தொங்கவிடும்
அடையாள அட்டையல்லவா?!

இலவசமாக
வம்பளந்த குறுஞ்செய்தி…
இன்று மட்டும்
தேச பக்தர்கள்
அம்பானி, டாட்டா,
ஏழ்மையை விரட்ட
இருபத்தைந்து பைசா
பிடுங்கப்படும்!

பள்ளிகளில்
சாலையோரங்களில்
கொடியேற்றுமிடமெல்லாம்
இனிப்பு மிட்டாய்க்காக
கத்திருக்கும் குழந்தைகள்!
காந்தி நோட்டுக்களால்
கோட்டை பிடித்தவர்கள்
கொடியேற்றி
காந்தியின் பெருமை பேசி
கையாட்டி விட்டு
காரிலேறிச் சென்றபடி...
அடுத்த ஊரில் பெருமை பேச!

விடுமுறையை முன்னிட்டு
தாமதமாக எழுமுன்னே
தேசபக்திப் பாடல்களை
முடித்துவிட்டு
நமீதாவுடன் ஒருநாளைச்
செலவிடத் தொடங்கும்
உலகத் தொலைக்காட்சிகள்!
குடும்பமே
தொலைக்காட்சி முன்னே
தவமிருக்க...
தலைவி மட்டும்
சுதந்திரமின்றி
அடுக்களைக்கும் இங்குமாய்
அலைபாய்ந்தபடி!

Thursday, May 28, 2009

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் அப்துல்கலாம்!

டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் எவ்வளவோ முயற்சித்தும் இலங்கை பிரச்சனையில் யாராலும் மூக்கை நுழைக்க முடியவில்லை! ஈழத்தமிழர்களை நாங்கள் பார்த்துக் கொள்(ல்)வோம்... அவர்கள் செத்தாலும் பிழைத்தாலும் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டது இந்திய வல்லரசு!

ஈராக்கினுள் நுழைந்த அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு சற்றும் குறையாமலும், உலக நாடுகளை தனது கைக்குள் போடும் விவேகத்திலும் சற்றும் அசராமலும் தான் நினைத்ததை சாதித்து முடித்துள்ளது இந்தியா! இந்த வல்லரசுத் தன்மையைத்தானே கடவுளுக்கு நிகராக இந்திய மீடியாவினால் தூக்கி நிறுத்தப்பட்ட அப்துல்கலாமும் எதிர்பார்த்தார்! இப்போது கண்டிப்பாக பூரித்துப் போயிருப்பார்!

இந்த நேரத்தில் அப்துல்கலாமை தேவையில்லாமல் சுட்டிக்காட்டவில்லை. இலங்கைப் பிரச்சனையை, தனது எழுத்து சரியான விதத்தில் வெளிக்கொணரவில்லை என்று வருத்தத்துடன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் எழுத்தாளர் அருந்ததிராய். தனது கட்சியின் தமிழர் விரோதப்போக்கு பிடிக்காமல் பதவியை உதறிவிட்டு இன்றுவரை ஈழத்தமிழனுக்காக தனியொருவனாகக் குரல் கொடுக்கிறார் தமிழருவி மணியன். எந்தவகையிலாவது ஈழத்தமிழனுக்கு விடிவு வராதா என்று திரையுலகிலிருந்து, யாரையும் எதிர்பார்க்காமல் சீமான் என்ற தனிமனிதன் போராடுகிறான். இவர்களுக்கு இருக்கும் அக்கறையில் சிறிதளவாவது, இலங்கைக்கு வெகு அருகில், ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல்கலாமுக்கு இருக்க வேண்டுமென நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு? ஒரு வார்த்தை போதாதா ஒட்டுமொத்த இந்தியர்களையும் சரியான பாதையில் சிந்திக்க வைக்க? பஞ்சாபிகளுக்காக பிரதமர் குரல் கொடுக்கும்போது தமிழர்களுக்கு எதிரான மனிதநேயப் படுகொலையை கண்டிக்கும் பொறுப்பு அப்துல்கலாமுக்கு இல்லையா?

அட, தமிழர்கள் என்று கூட வேண்டாம். நமது அருகிலுள்ள நாட்டில் நடைபெறும் படுகொலைகளுக்கு இந்தியா ஆதரவாக இருப்பது சராசரி இந்தியர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், முப்படைகளையும் நிர்வகித்த ஒரு முன்னாள் ஜனாதிபதிக்குமா தெரியாமல் போகும்? ஒரு மனிதநேயத்துடனாவது இதை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டாமா? இவர் எதிர்பார்க்கும் வல்லரசு இதுவென்றால் அப்படி ஒரு வல்லரசுக் கனவு அமெரிக்காவோடு ஒழிந்து போகட்டும்!

Tuesday, May 19, 2009

பொய்யாகிப் போகாதோ?

பொய்யாகிப் போகாதோ?
உன் மரணம்
பொய்யாகிப் போகாதோ?
நீ
பக்கத்திலிருந்த தைரியத்தால்
வீரம் பேசித் திரிந்தோமே...
வீணாய்ப் போனதே
அத்தனையும்!
வீணாய்ப் போனதேன்
அத்தனையும்?

இறுதிவரை நீ
ஈழ மண்ணை விட்டு
ஓடவில்லை!
உன் உறுதி
கர்வப்பட வைக்கிறது...
நீ ஓடி
உயிர்தப்பியிருக்கக்கூடாதா?
என்
உள்மனம் ஏங்குகிறது!

மெய் சிலிர்த்துக் கிடந்தோமே!
தமிழனுக்கென்று அரசாங்கம்
தமிழனுக்கொரு ராணுவம்
தமிழனுக்கொரு தலைவன்
பொய்யாகிப் போனதே
அத்தனையும்!

இனப்படுகொலையின்
வலியை உணர்ந்தாய் நீ...
வலியை உணர்ந்தவர்கள்
உன் பின்னால் சேர
வலிமையானாய் நீ!
தமிழனைக் காக்கத்தானே
நீ
துப்பாக்கி தூக்கினாய்?
உன் பின்னால்
பீரங்கியே அணிவகுத்ததே
பின்னாளில்!
இன்று
எட்டி நின்று
வேடிக்கை பார்க்கும் தமிழகம்
அன்று உன்னை
தட்டிக் கொடுத்ததே!

உலகத்தின் சுழற்சியால்
சூழ்ச்சியால்
இனப்போராளி உன்னை
தீவிரவாதியென்றல்லவா
தடை செய்தது!
அடிமேல் அடி விழுந்தாலும்
"ஓயாத அலை"யாக
சுழன்றடித்த நீ
இன்று அமைதியானாயே!

பதுங்கு குழிகள்
பாதுகாப்பு வளையமென
தமிழரைக் கொன்றொழித்து
உன்னைப் பழியாக்கி
பலியாக்கிய
உலகத்தின் சூழ்ச்சியை
எப்படிச் சொல்வேன்?
வெட்கக்கேடு!

எழுதப்படும் வரலாறுகள்
உன்னை
எப்படி வேண்டுமானாலும்
சொல்லட்டும்...
உன் உறுதியை
உன் வலிமையை
உன் பெருமையை
என் பேரனுக்கும்
சொல்லிக்கொடுத்து உரமேற்றுவேன்...
அதுபோதும் எனக்கு!

Saturday, May 16, 2009

தேர்தல் முடிவுகள்- 2009 - ஒரு கண்ணோட்டம்

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏதாவதொரு சிறப்பு சொல்லப்படும். அந்தவகையில் பார்த்தால், இந்த தேர்தல், ஈழம் உள்ளிட்ட அனைத்துலக தமிழர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் வாழ்நிலையின் துயர் துடைக்கும் வழிகோலாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்தும் இருந்தது. அந்த வகையில் பார்த்தால் பெருத்த ஏமாற்றம் மிஞ்சியதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

மணிசங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் பெருந்தலைகள் உருண்டாலும் வைகோவின் தோல்விதான் இருதரப்பிலும் பெருத்த அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.அவரவர் நிலைப்பாட்டைப் பொறுத்து பெருத்த சோகமாகவோ, பெருத்த மகிழ்ச்சியாகவோ ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தலை தப்பியது இறுதிக்கட்ட திருப்பம்! நிழல் அரசியல்வாதியாகவே அனைவராலும் அறியப்பட்ட மு.க. அழகிரியின் பிரம்மாண்ட வெற்றி, பணநாயகத்தின் வெற்றி என்று மட்டும் சொல்லித் தட்டிக் கழித்துவிட இயலாது. தேர்தலுக்குக்காகத் தரப்படும் பணத்தையும் பொருட்டாக மதித்து வாக்கினை அளிக்கும் மனநிலைக்கு மாறி வருவதையும், வழக்கமாக உணவகங்களில் தரப்படும் "டிப்ஸ்" போல இப்பணம் மதிக்கப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, அதிரடி "ஒட்டு மாங்கனி" பாமாகாவின் தோல்வி குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டு சேர்வதும், பெரியண்ணன், அன்புச்சகோதரி எனப் புகழ்ந்து சில தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதுமாக அரசியல் செய்து, மத்திய அமைச்சர் பதவியை தனது மகனுக்கு வாங்கிக் கொடுத்து அழகு பார்த்த ராமதாஸுக்கு மக்கள் தந்த "சவுக்கடி"தான் இத்தேர்தல் முடிவு! தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கும் பாமாகாவுக்கு, இனியாவது கூட்டணித் தலைவர்கள் அளந்து அளந்து தொகுதிகளை அளிப்பார்கள் என நம்பலாம்! தொகுதிப் பங்கீட்டில் அசிங்கப்படுத்தப்பட்ட வைகோவாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விட்டார்!

எம்ஜியாரின் இரட்டை இலை இனியும் அதிமுகவை கைதூக்கி விடுமா என்பது சந்தேகம்தான். தற்போதய திமுகவின் ஆட்சியில் பேருந்துக் கட்டண உயர்வு, மின்வெட்டு, காவிரி, ஒகெனக்கல் பிரச்சனை என எத்தனையோ பிரச்சனைகள் எழுந்தபோதும், எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவி ஜெயலலிதா, செயல்படாத தலைவர் போலவே அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டார். தேர்தலின்போது இரண்டு மாதம் அரசியல் பண்ணினால் மட்டும் போதுமென்று யாராவது "பத்திரிக்கை நண்பர்கள்" ஆலோசனை கொடுத்திருக்கலாம்! அதன்படியே செயல்பட்டு, அல்லல்பட்டு, இப்போது கூட்டணி பலத்தால் அடைந்திருக்க வேண்டிய பிரமாண்ட வெற்றியைக் கோட்டை விட்டு நிற்கிறார்! இப்படியே தொடர்ந்தால் கோட்டையையும் இவர் விடுவது நிச்சயம்! தேர்தலின்போது இவர் எழுப்பிய திடீர் ஈழ ஆதரவு கோசத்தை, தமிழுணர்வாளர்களைத் தவிர மற்ற எவரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் தொடர்ச்சியாக எழுதி வைத்து ஒப்பித்தும், கேள்வி கேட்டும் இவர் செய்த பிரச்சாரம் கேலியாகவே மக்களால் பார்க்கப்பட்டுள்ளது!
ஜெயலலிதாவிற்கு ஒரு கேள்வி: இனியும் இப்படியே மந்தமாக அரசியல் செய்வீர்களா?!

நம்ம விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார் உள்ளிட்ட அனைவருமே காங்கிரஸ் கூட்டணிக்கு தங்களால் இயன்ற அளவு "கைமாறு" செய்திருக்கிறார்கள். அதற்கு கைமாறாக தொடர்சியாக இவர்களின் படங்களை சன் தொலைக்காட்சி குழுமத்தில் கண்டு ரசிக்கலாம்! வைகோவின் தோல்விக்கும், கார்த்திக் பெற்ற வாக்குக்கும் நேரடித் தொடர்பே இருக்கிறது. மற்ற தொகுதிகளில் விஜயகாந்த்தின் பங்கு எவ்வளவென்று, அவர் கூட்டணி வைப்பதற்காக டெல்லியில் மன்றாடிய தெய்வத்திற்குத்தான் தெரியும்!

இவ்வளவையும் சொல்லியாச்சு, கலைஞரைப் பற்றியும் சொல்லாமல் விடலாமா? கடந்த பொதுத்தேர்தலில் இவர் எழுப்பிய நாளை நமதே! நாற்பதும் நமதே! என்ற கோஷம், தற்போது ஜெயலலிதாவாலும் காப்பியடிக்கும் அளவிற்கு பரபரப்பான கோஷமாக அமைந்து விட்டது. அப்போது திமுக பெற்ற பிரமாண்ட வெற்றி போலவே, இம்முறையும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றிருக்கிறது. திமுகவின் வெற்றியால் தேர்தலுக்குப் பின்னால் அதிமுகவும், பாமகவும் கூட்டணி மாறும் குளறுபடிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளுக்கு நிகராகத் தனது தனிப்பட்ட செல்வாக்கை, திமுக மேலும் உயர்த்தியுள்ளது. மாநிலத்திலும் மத்தியிலும் நிலையான ஆட்சிக்கு இனி பாதிப்பில்லை. இதோ, கில்லி மாதிரி கிளம்பி விட்டார் டெல்லிக்கு... விரும்பிய அமைச்சர் பதவியை பேசி வாங்கி வர. வாழ்த்துகள்! இந்த வேகத்தைத் தான் ஈழப் பிரச்சனையிலும் அனைவரும் எதிர்பார்ப்பது. தந்தி அனுப்பி விட்டு, இங்கேயே குந்தியிருந்தால் நினைத்த தொகுதியைப் பெற முடியாதென்பது, தந்திக்கு மதிப்பில்லை என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன?

மத்திய காங்கிரஸின் அசைக்க முடியாத வெற்றி, பாஜகாவையும், செம்படைத் தோழர்களையும் அதள பாதாளத்துக்கே தள்ளி விட்டது உண்மை! அத்வானியின் பிரதமர் கனவு, பகற்கனவாகி வருகிறது. இதோ, மோடி தயாராகி விட்டார், கனவு காண! கனவு காணுங்கள், தூங்காமல் கனவு காணுங்கள்! இனிவரும் தேர்தலில், கூட்டணித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வருவதும், வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்க விருப்பமில்லாதவர்களுக்கான பொத்தானும் மாறுதலாக மலர வேண்டும். காலம் மாறும்போது ஜனநாயகப் பாதையிலும் மறுமலர்ச்சி வேண்டாமா?

Sunday, May 10, 2009

இப்படிக்கு... அம்மா!

இரவுபகலறியாமல்
கருவறையிலிருந்த குழந்தை
நள்ளிரவில் அழுதவுடன்
சட்டென விழித்து
பாலூட்டியமர்த்துவாள்...
இரவுபகலறியாமல்!
------------------

நான்
நித்தம் காணும் நிலவு
இன்றுவரை
கறை துடைக்கப்படாமல்
அப்படியே இருக்கிறது...
யாரோவொரு தாய்
இன்றும்கூட
நிலாச்சோறு ஊட்டியிருக்கிறாள்!
------------------

மழலையிடம் மொழி பழக
தவழுகையில் துள்ளிக்குதிக்க
புன்னகையைப் படம்பிடிக்க
வீதியிலிறங்கிச் சோறூட்ட
வாரக்கடைசி வரத்திற்காக
ஒவ்வொருநாளும் வேண்டியபடி...
பணிக்குச் செல்லும் அம்மா!
------------------

உருண்டு புரண்டு விளையாடி
அழுக்காக்கிய உடையுடன்
வீடு திரும்பியவனை
அதட்டி அடித்தவளின்
வீட்டுக் கொடியில்
மறுநாள்
பளிச்செனக் காயும் உடைகள்...
மீண்டும் அழுக்காகத் தயாராய்!
------------------

மகளுக்கு முதல் தோழியாய்
உலகைப் புரியவைத்து
செல்லமாய் கண்டித்து
சிலநேரம் கண்காணித்து...
தலை நரைத்தபின்னும்
தொடர்கிறது
தலைமுறை தாண்டிய பய(ண)ம்!

Wednesday, May 6, 2009

திமுகவை விட்டுப் பிரிந்துவிட்ட திரு.மு.க!

எம்ஜியார் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த வேளையில் நடைபெற்ற தேர்தலின்பொது எம்ஜியார் மறைந்துவிட்டார் என்றும், எம்ஜியாரின் மரணத்தை மறைத்துவைத்து தேர்தலில் போட்டி போடுகிறார்கள் என்றும் எம்ஜியார் பற்றி வதந்தியை பரப்பி விட்டு அன்றைய காலகட்டத்தில் கருணாநிதி அரசியல் செய்தார். அந்தோ பரிதாபம்! இப்போது தான் நல்லநிலையில் இருந்தபோதும், தனக்கு நோவு வந்ததென தனக்குத்தானே கூறிக் கொண்டு மருத்துவமனைக்கட்டிலில் தொடர்ந்து இருந்தபடி பரிதாபத்தைச் சம்பாத்தித்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை.

ஏன் இந்த இழிநிலை?

தன்னை காலங்காலமாக தமிழினத்தலைவராக தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய திமுக தொண்டர்களையே மனம் நொந்துபோகும்படியல்லவா காங்கிரசோடு இவர் பின்னிப் பிணைந்துள்ளார். தமிழ் உணர்வு, ஈழத்தமிழர் ஆதரவு என்பது ஒவ்வொரு திமுகவினருக்கும் இவரால் ஊட்டப்பட்ட உணர்வு என்றால் மிகையாகாது. ஆனால் அந்த உணர்விற்கே இவர் துரோகம் செய்வதை திமுகவினராலேயே தாங்கிக் கொள்ள முடியாத நிலை. ஆம், கருணாநிதியைப் போல அனைவராலும் உணர்வுகளை மழுங்கச் செய்ய இயலாதல்லா? அவருக்கும் ஒருகாலத்தில் உணர்வு இருந்தது. ஆனால் தற்போது அவரது குடும்பத்தினர் அக்மார்க் வியாபாரிகளாக மாறிவிட்ட சூழலில் உணர்வாவது, மண்ணாங்கட்டியாவது என்ற கருணாநிதியின் நிலையை அவரது ஒவ்வொரு நாடகமும் தோலுரித்துக் காட்டத் தொடங்கி விட்டது!

இப்போது, திமுகவின் ஆதரவாளராக அறியப்பட்ட சீமானே ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வீதி வீதியாக பிரச்சாரம் செய்கிறார். இவர் ஜெயலலிதா ஆசியுடனும், பணத்துடனும் பிரச்சாரத்தில் இறங்கவில்லை. கம்பம் ராமகிருஷ்னன் போன்றவர்களை, ஜெகத்ரட்சகன் போன்றவர்களை சீமானோடு ஒப்பிடக்கூடாது. அவர்கள் கருணாநிதி பணம் கொட்டியதால் சேர்ந்தவர்கள்... சீமானோ, கருணாநிதியின் குணம் கெட்டதால் விலகியவர். இவரைப் போல பல திமுக தொண்டர்களும் மனதளவில் கருணாநிதியை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று விட்டார்கள் என்பது தான் இப்போதய நிலை.

எம்ஜியார் பிரிந்தபோது கருணாநநிதியின் அரசியல் பிடிக்காமல் எம்ஜியாரோடு ஒரு பெரும் பிரிவினர் எம்ஜியார் பக்கம் சேர்ந்தார்கள். அதன்பிறகு வைகோ பிரிந்தபோதும் ஓரளவு அந்த மாதிரி நிலை ஏற்பட்டது. இப்போது யாரும் கருணாநிதியை விட்டுப் பிரியவில்லை, இருந்தும் இப்போதும் பல திமுகவினர் கருணாநிதியை விட்டு விலகி ஜெயலலிதாவையோ, விஜயகாந்தையோ ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எதனால்???

ஆம்! கருணாநிதி இப்போது திமுகவைவிட்டு, திமுகவின் கொள்கையை விட்டுப் பிரிந்துவிட்டார்!

Monday, April 27, 2009

இப்படியும் உண்ணாவிரதம்!

கருணாநிதியின் 7 மணி நேர உண்ணாவிரதம் பற்றி அவருக்கு மிகவும் பிடித்த வடிவேலு பாணியில் சொல்வதானால், ஸ்டார்ட்டிங்கு நல்லாதான் இருந்துச்சு, பினிஷிங்கு சரியில்லயேப்பா! மிகக் குறுகிய நேர உண்ணாவிரதம் என்றவகையில் கின்னஸ் சாதனை படைத்திருகும் இந்த உண்ணாவிரதத்தின் அவசர அவசியம்தான் என்ன?.

ஜெயலலிதா, தனி ஈழம் அமைவதை ஆதரித்தது கருணாநிதிக்கு உண்மையில் பயங்கர அதிர்ச்சி வைத்தியமாகத்தான் இருந்திருக்கும்! இதைவிட ஒருபடி அதிகமாக என்ன அரசியல் ஸ்டண்ட் அடிப்பது என்று இரவு முழுக்க தூங்காமல் யோசித்திருப்பார்! "நான் இரவு முழுவதும் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசின் அறிவிப்பு வருமென்று எதிர்பார்த்து விழித்திருந்தேன் என்பதில், விழித்திருந்ததற்கான காரணம் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை!


அதுபோகட்டும்... கருணாநிதியின் உண்ணாவிரதம் நம்முள் பல்வேறு கேள்விகளை எழுப்புவதை தவிர்க்க இயலாது. அவற்றை கீழே தந்துள்ளேன்.

1. கருணாநிதியின் வீட்டினருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட உண்ணாவிரத முடிவு, கடந்த ஜூனியர் விகடன் இதழில் அப்படியே கவர் ஸ்டோரியாக வந்திருந்தது எப்படி?

2. திடீரென நினைத்த இடத்தில் உண்ணாவிரதம் இருப்பவர், இதே இலங்கைப் பிரச்சனைக்காக தொடர் உண்ணாவிரதமிருந்த தாய்மார்களை, நாயினும் கேவலமாக போராட்டத்திற்கு இடம்தேடி அலைய வைத்தது நியாயமா?

3. கருணாநிதி தந்தியனுப்பியும், தீர்மானம் போட்டும், கதறியழுதும் திரும்பிப் பார்க்காத மத்திய அரசு, இப்போது சுறுசுறுப்பாக பேச்சுவார்த்தை நடப்பதுபோல காட்டிக் கொள்வதும், அதற்கு இலங்கை இசைவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைவதும் பெரிய அரசியல் சதியை வெளிப்படுத்துகிறதே? அது என்னவென்றால், கிட்டத்தட்ட, பெரும்பான்மை ஈழப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தபிறகு, போர் நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டு வரும் தருணத்தில், நீ அடிக்கிற மாதிரி அடி! நான் அழுவுற மாதிரி அழுவுரேன்! என்று கருணாநிதி, மத்திய அரசு, இலங்கை அரசு ஒரு கூட்டு நாடகத்தில் நடிப்பது போலவும், அதற்கும் நாமறிந்த வசனகர்த்தாவே இதனை இயக்கி இருப்பது போலவும் தெரிகிறதே?

4. மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் இலங்கை கேட்டு நடக்கும் என்பது உண்மையாகி விட்டது அல்லவா? இப்பொது எங்கே போனது இலங்கையின் இறையாண்மை?

5. கருணாநிதி நினைத்தால் மத்திய அரசை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஆட்டிவிக்க முடிகிறது. அப்படியானால் இத்தனை காலம், இவ்வளவு படுகொலைகள் நடந்து முடிவதற்காகத்தான் காத்திருந்தாரோ?

6. இப்போது, போர் நிறுத்தமெல்லாம் கிடயாது என்று இலங்கை அரசு மீண்டும் மறுத்திருக்கிறது. இனி, அடுத்ததாக யார், எங்கே உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்?

7. கருணா - கருணாநிதி; இருவருமே கிட்டத்தட்ட ஒன்றுதானா?

எப்படியோ, காங்கிரஸ் கூட்டணியின் அழிவுக்கு கருணாநிதியே தனது பங்கை தொடங்கி வைத்திருக்கிறார்! இன்னும் தொடரும்...

Saturday, April 25, 2009

கூஜ பக்க்ஷே Vs கேனன் & கோ


இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த அனுப்பபட்ட சிறப்பு தூதுவர்கள் என்று "கவிதை சுனாமி" வருணாநிதியால் பாராட்டப்பட்ட சிறப்பு தூதுக்கிளிகள் “கேனனும், சாராயணனும்” "அகிம்சைப் பேரொளி" கூஜ பக்ஷேவுடன் அப்படி என்னதான் பேசி இருப்பார்கள்? இதோ அங்கு நடந்த உரையாடலை என்னுடய "ரா!ரா! சரசக்கு ரா!ரா!" அமைப்பு துப்பறிந்து அப்படியே வழங்குகிறது!

கூஜ பக்க்ஷே: என்ன இது திடீர்னு இந்தப்பக்கம்? வாக்கிங் போறப்ப வழிதவறி வந்துட்டிங்களா?

கேனன் & கோ: (தலையைச் சொறிந்தபடி) வழியெல்லாம் தவறல... நம்ம தன்மோகன்கிங்குதான் சும்மா உங்கல பார்த்து வரச்சொன்னாரு...

கூஜ பக்க்ஷே: அந்தாளுக்கு வேற வேலயே கிடயாதா? ஹார்ட் ஆபரேசன் பண்ணியிருக்காறேன்னு பார்க்கறேன்.. இல்லைன்னா அசிங்க அசிங்கமா திட்டிடுவேன்!

கேனன் & கோ: ஏன் எங்க மேல எறிஞ்சு விழுறீங்க? நாங்கதான் உங்களுக்கு இன்னைக்குவரைக்கும் ஹெல்ப் பண்ணிட்டு இருக்கோம்கறத மறந்துடாதிங்க!

கூஜ பக்க்ஷே: நீங்க என்கிட்ட இப்ப சொல்றத மட்டும் இன்னும் கொஞ்சம் சத்தமா சொன்னீங்க, தமிழ்நாட்டுக்கே தெரிஞ்சிடும்! அப்புறம் தேர்தல்ல நீங்க நாமம்தான் போட்டுக்கணும்!

கேனன் & கோ: அதுவிஷயமாத்தான் உங்களைப் பார்க்க வந்தோம்..

கூஜ பக்க்ஷே: அது விசயமாவா? எந்தமாதிரி நாமம் போடுறதுன்னா?

கேனன் & கோ: அதில்லைங்க, தமிழ்நாட்டு தேர்தல்ல ஜெயிக்கிறது விசயமா...

கூஜ பக்க்ஷே: யோவ், அதுக்குத்தான் அங்கயும் ஒரு வருணாவை வச்சிருக்கோம்ல? எதிர்க்கட்சிகளை ஒண்ணுசேர விடாம போராட்டத்தை அமுக்குறதுதான அவருக்கு நாம குடுத்த அசைன்மென்ட்டு? சரியா பண்ண மாட்டிங்கிறாரோ?

கேனன் & கோ: அதெல்லாம் சரியாத்தான் நடக்குது... "தமிழ்நாட்டு புலி" “குருமா”வையே புல்லைத் திங்க வச்சுட்டார்னா பாருங்களேன்!

கூஜ பக்க்ஷே: பின்ன என்னைய்யா பிரச்சனை?

கேனன் & கோ:அரசியல்கட்சிகளை அடக்கியாச்சி... ஆனா, இன்னொருபக்கம் கொஞ்சம் பொம்பளைங்க ஒண்ணு சேர்ந்துக்கிட்டு சாகும்வரை உண்ணாவிரதம்னு சொல்லிட்டு பிரச்சனையை கிளறிவிடுறாங்க... அந்தப்பக்கம் சாரதிராஜான்னு ஒரு டைரக்டர், "என் இனிய தமிழ் மக்களே"ன்னு கெளம்பிட்டாரு!

கூஜ பக்க்ஷே: என்னய்யா பண்றாரு வருணாநிதி? சாரதிராஜாவையும் தூக்கி உள்ளபோட வேண்டியதுதான? எங்க நாட்டுல உள்ள போட மாட்டோம்.. மொத்தமா போட்டுத்தள்ளிடுவோம்!

கேனன் & கோ: அதான் "அசந்த"க்கு என்ன நடந்ததுன்னு தெரியுமே! அதிருக்கட்டும்... நீங்களும் கொஞ்சம் எங்களுக்கு ஹெல்ப் பண்ணணுமே...(திரும்பவும் தலையைச் சொறிகிறார்கள்)

கூஜ பக்க்ஷே: (கேனனைப் பார்த்து) உன் தலைல என்ன இருக்குதுன்னு இந்த சொறி சொறியுற?

கேனன் & கோ: அதில்லைங்க, கொஞ்சனாளைக்கு போரை நிறுத்துற மாதிரி அறிக்கை விட்டிங்கன்னா, தேர்தல் முடிஞ்சதும் அன்னைக்கு நைட்டே மொத்தமா ஒரே குண்டுல அவனுங்கள போட்டுத்தள்ளிடலாம்...

கூஜ பக்க்ஷே: போர நிறுத்துறதா? அதான் சுத்தி வளைச்சாசுல்ல? திரபாகரன் ஒருத்தந்தான் பாக்கி... நாளைக்கே அவன் கதையும் க்ளோஸ்!

கேனன் & கோ: என்ன இது? பத்திரிக்கைக்காறங்களுக்கு பேட்டி குடுக்குற மாதிரியே எங்க கிட்டயே பொய் சொல்றீங்க? அதான் திரபாகரன் அங்க இருக்கானா இல்லையான்னே நமக்கு ஒரு மண்ணும் தெரியாது... சும்மானாலும் அதை பிடிச்சாச்சு, இதைப் பிடிச்சாச்சு, அவன் மாட்டிக்கிட்டான், இவன் மாட்டிக்கிட்டான்னு கதை விட்டுக்கிட்டிருக்கோம்...

கூஜ பக்க்ஷே: நாம சொல்றதத்தான் ஐநா சபைல இருந்து அத்தனை பேரும் நம்புறாங்கல்ல? பிறகென்ன?

கேனன் & கோ: அதுசரி, இருந்தாலும் ரெண்டு நாளுக்குள்ள ஒரு லட்சம் மக்களும் வெளியேறி வந்துட்டங்ககறத யாரும் நம்ப மாட்டாங்கலே? அப்படியே நம்பினாலும், அத்தனை பேரையும் எங்க தங்க வச்சிருக்கீங்கன்னு கேட்டா என்ன சொல்றது?

கூஜ பக்க்ஷே: (கடுப்புடன்) உன் வீட்டுல தங்க வச்சிருக்கேன்னு சொல்லு! யோவ்! நீங்க என்ன முடிவோட வந்திருக்கீங்கய்யா? என்னையே குழப்பிடுவீங்க போல!

கேனன் & கோ: அதில்லை நண்பா, ரெண்டுகட்ட தெர்தல் முடிஞ்சுடுச்சு, அடுத்து தமிழ்நாட்டுக்கும் தேர்தல் பிரச்சாரம் பண்ண “போனியா” வந்தாகணும். அவங்க வந்தாலும் 40தொகுதியில் ஜெயிக்க முடியாதுங்கறது வேற விசயம்... ஆனா கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது ஜெயிக்கணும் இல்லயா? அவங்க ஜெயிச்சுவந்தாதான வழக்கம்போல உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்? என்ன நான் சொல்றது?

கூஜ பக்க்ஷே: அதுசரி, அவங்க தமிழ்நாட்டுக்கு வர நான் என்ன பண்ணனும்? "அன்னை போனியாவே! வருக வருக!"னு போஸ்டர் அடிச்சு ஒட்டணுமா?

கேனன் & கோ: அடக்கடவுளே! அப்படி போஸ்டர் அடிக்கத்தான் ஏற்கனவே மாங்கிரசுக்குள்ளயே ஆயிரத்தெட்டு கோஷ்டி இருக்குதே! இதுல நீ வேறயா?! கொஞ்ச நாளைக்கு போரை நிறுத்தறோம்னு ஒரே ஒரு அறிக்கை மட்டும் விடு.. அது போதும் இப்போதைக்கு!

கூஜ பக்க்ஷே: என்னப்பா இது! உங்க இந்திய அரசியல்வாதிகளோட ஒரே அக்கப்போரா இருக்கு! இங்கபாரு, சொந்த நாட்டு மக்கள் மேலயே குண்டு போட்டு தினமும் ஆயிரக்கணக்குல கொன்னுக்கிட்டு இருக்கேன்... அத்தனை கட்சிக்காரங்களும் கம்முன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்காங்க... உங்க நாட்டுல என்னடான்னா, ஆளாளுக்கு அறிக்கை விடுறானுங்க! எங்களை மாதிரி அதிபர் ஆட்சிதான் உங்களுக்கும் லாயக்கு!

கேனன் & கோ: உங்க நாட்டுல அதிபர் ஆட்சி நடக்குது... எங்க நாட்டுல எங்களை மாதிரி அதிகாரிங்க ஆட்சி நடக்குது! அவ்வளவுதான் வித்தியாசம்! பிரதமரா இருந்தாலும் நான் சொல்ற யோசனயத்தான் கேட்டு நடக்கணும்!

கூஜ பக்க்ஷே: இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல, நீங்க சொல்றதுல்லாம் புரியுது. எதுக்கும் என் சகோதரர்ககிட்ட கலந்து பேசிட்டு நான் அறிக்கை விட முடியும்.

கேனன் & கோ: அப்போ சம்மதம்தான்னு எடுத்துக்கலாமா? அப்படியே போற வழியில வருணாநிதிகிட்ட சொல்லிட்டுப்போனா, அடுத்த நாள் காலைப் பேப்பருக்கு ஒரு கவிதை ரெடி பண்ணிடுவாரு! அப்படியே உங்களுக்கு "அகிம்சைப் பேரொளி" பட்டமும் குடுத்தாலும் குடுப்பாரு!

கூஜ பக்க்ஷே: அந்த பட்டத்தை அப்படியே காத்துல எங்க நாட்டுப் பக்கமா பறக்க விடுங்க புடிச்சுக்கறேன்!

(ஜோக்குக்கு சிரித்தபடி கைகுலுக்கி விடை பெறுகிறார்கள்!)

விடைபெற்றபின்...
------------------
கூஜ பக்க்ஷே: இந்த கோமாளிகள் இப்படி எதாவது சொல்லிக்கிட்டேதான் இருப்பானுங்க... இறுதித் தமிழன் இருக்கும்வரை நம்மளோட படுகொலைப் பொழுதுபோக்கை நிறுத்தவே கூடாது!

Sunday, April 19, 2009

அரசியல் அதிரடிச் சிரிப்புகள்!

"இந்த தொகுதியில கள்ள ஓட்டு பதிவாகியிருக்கலாம்னு சந்தேகப்படுறாங்களாமே?"

"பின்ன, இங்க மட்டும் நூற்றிநாற்பது சதவீதம் வாக்கு பதிவாகி இருக்குதே!"
-----------------------------------------------------------------------------------

"செத்தவங்க ஓட்டெல்லாம் போடாதடான்னு என் பையன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்!"

"ஏன், போலீஸ்ல மாட்டிக்கிட்டானா?"

"இல்ல, பேய்ங்ககிட்ட மாட்டி, அறை வாங்கிட்டு பேச்சு மூச்சில்லாம படுத்திருக்கான்!"
-----------------------------------------------------------------------------------

"தலைவரோட தேர்தல் ஸ்டண்ட் அளவுக்கதிகமா போகுது!"

"எப்படி சொல்ற?"

"பிரச்சாரத்துக்குப் போற வழியில, தரையில படர்ந்திருந்த பூசணிக் கொடிக்காக தன்னோட பிரச்சார வேனையே நிறுத்திட்டு இன்னொரு வேன்ல கிளம்பிட்டாரே!"
-----------------------------------------------------------------------------------

"தலைவரோட பிரச்சாரம் சூடு பிடிச்சுடுச்சு!"

"எப்படி சொல்ற?"

"இப்பல்லாம் அடிக்கடி டாய்லெட் போறாரே!"
-----------------------------------------------------------------------------------

"எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால் நமது கட்சிப் பொதுக்கூட்டங்களில் அதிக அளவு பிக்பாக்கெட் நடப்பதால், பேச்சைக் கவனிப்பதோடு பாக்கெட்டையும் கவனித்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ள்கிறேன்!"

Monday, April 13, 2009

குறி தப்பாத காலணிக் கவிதைகள்!

குப்பையில்
காலணிகளை வீசுங்கள்
குறி தப்பாமல்!
------------------------

குறி தப்பிய காலணியில்
புதைந்து கிடந்தது
வரலாற்று சோகம்!
------------------------

முடிவு கட்ட வேண்டாம்
இந்த
காலணி ஆதிக்கத்திற்கு!
------------------------

ராமாயணக் கதையில்
ஆட்சி செய்த காலணிகள்
புரட்சியில் இன்று!
------------------------

நசுக்க நசுக்க
புரட்சி வெடிக்குமாம்...
புரியவைத்தது காலணி!
------------------------

காலணிக்குத் தடை வந்தால்
எறிகணையாகுமோ
எழுதுகோல்கள்?

Saturday, March 28, 2009

கர்வப்படு; கறுப்பாய் பிறந்ததற்கு...

கறுப்பு...
நிறங்களின் தாய்
மற்றதெல்லாம் சேய்!

வண்ணக்கலவையின்
உச்சமிது
மற்றதெல்லாம் மிச்சமே!

நிறமிகளின் நிறையே
கறுப்பு
குறைபாடே வெண்மை!

இல்லாமையின் நிறம்
கறுப்பு
எல்லாமிருப்பதின் நிறமும்
கறுப்புதான்!

துக்கத்தின் நிறமென்று
யாரிதைச் சொன்னது?
தூக்கத்தின் நிறமென்றால்
அதில் உண்மையிருக்கும்!
தூக்கம் வந்தாலே
கரு'மை" பூசிய இமைகள்
கண்களுக்கு
கருமை போர்த்தும்!

வெண்மேகம்
கருமை சூடினால்
பூமியெங்கும்
பூப்பூக்கும்!

கருவண்டு
சுவைத்திடவும்
மலர்களெல்லாம்
தேன் வடிக்கும்!

கருமை மூடிய
இரவில்தான்
அடுத்த தலைமுறைக்கான
தேடல் நடக்கிறது!
கருவறை தொட்டு
உலகைக் காணும்வரை
கறுப்பின் கதகதப்புதான்
பாதுகாப்பே!

இயற்கையின்
தொலைக்காட்சியில்
பிறை நிலவும்
நட்சத்திரமும்
கருமை தந்த
அலுக்காத
நெடுந்தொடரல்லவா?!

வெண்மையை
ஆதிக்கமாகவும்
கருமையை
அடிமையாகவும்
வரலாறு பேசுகிறது!
இன்றோ
வெண்மையை
ஆதிக்கம் செய்கிறது
கறுப்பு!

கறுப்பாய் பிறந்ததற்கு
வருத்தப்பட்டால்
புன்னகை தொலைத்திருக்கும்
வைரம்!

கர்வப்படு;
கறுப்பாய் பிறந்ததற்கு...
சில நிமிடங்களாவது!

Thursday, March 26, 2009

தேர்தல் வந்திடுச்சு! - மூன்றாம் பாகம்!

கொத்துக் குண்டுகளால்
செத்து மடியுது
தமிழினம்...
முதுமையைச்
சொறிந்துவிட்டு
அறிக்கைமேல் அறிக்கையாய்
அனுதாபம் தேடுது
சாணக்கியத்தனம்!
---------------------------

அரசியலில்
தலையெடுப்பதற்காக
தலையெடுப்பதாக
மூன்றாந்தர அரசியலில்
நேருவின்
மூன்றாவது தலைமுறை!
எதையெதையோ இடிப்பவர்கள்
இடித்துக் கூறாமல்
குழப்பத்துடன்!
---------------------------

தமிழுணர்வாளர்கள்,
தேர்தலுக்காக
மரத்துக்கு மரம்
தாவியபடி...
சற்று
பொறுமை காக்கட்டும்
முத்துக்குமரன்கள் ஆவி!
---------------------------

காந்தி கடிகாரமும்
மூக்குக் கண்ணாடியும்
பேசிக்கொண்டன...
ஏலத்திலெடுக்கப்பட்ட
டோனிக்கும்கூட
இந்தியாவில்
பாதுகாப்பில்லையாமே!
---------------------------

சென்றமுறை
வெளிநாட்டு வீரர்களை
விலைக்குவாங்கிய ஐ.பி.எல்,
அடுத்தமுறை
தென்னாப்பிரிக்காவை
விலைக்கு வாங்கும்
அதே கிரிக்கெட்டுக்காக!

Wednesday, March 18, 2009

தேர்தல் வந்திடுச்சு! - இரண்டாம் பாகம்!

கூடி வாழ்ந்தால்
'கோடி" நன்மை
உண்மை உணர்ந்தவன்
அரசியல்வாதி!
உணராத ஜனமோ
அப்பாவி!
-----------------------------

கொள்கைச் சட்டையை
உரித்துப் போட்ட
நிர்வாணப் பாம்புகள்
இன்னமும் புற்றுக்குள்ளேயே...
பேச்சுவார்த்தை முடியாமல்!
-----------------------------

காத்து 'கருப்பு" பட்டதோ?
'கறுப்பு" எம்ஜியார்
தேய்ந்து
'கறுப்பு" ஆடாக
கசாப்புக் கடையில்!

Sunday, March 15, 2009

தேர்தல் வந்திடுச்சு!

வெள்ளித்திரை விலக்கி
"பிரச்சார பீரங்கி" பவனி!
கையசைக்கிறார்...
புன்னகைக்கிறார்...
வியர்வை துடைக்கிறார்...
சூட்டிங் முடிந்ததும்
கூட்டம் கலைகிறது
"நல்ல கலருடா!"
கொள்கை பேசியபடி!
------------------------

ஈழப் பிரச்சனைக்காக
தெருவில் நின்று
போராடிய பட்டியல்
போகுமிடமெல்லாம்
பறையடிக்கப்படும்!
தானே தமிழனென்றும்
தானைத் தலைவனென்றும்
திரும்பத்திரும்ப
நினைவுபடுத்தப்படும்!
------------------------

தேர்தல் பிரச்சாரத்தில்
யாராவதொரு
"அடுத்த பிரதமர்"
"நன்றி வணக்கம்"
என்று தமிழில் பேச,
ஒரு வரி மட்டும் புரிந்ததில்
புல்லரித்துப் போகும்
கூட்டி வந்த கூட்டம்!
------------------------

தேர்தல் கமிஷனின்
கடுமையான விதிகள்...
கெடுபிடிகள்...
கட்டுப்பாடுகளையெல்லாம்
உடைத்தெறிந்துவிட்டு
எப்பாடுபட்டாவது
காப்பாற்றப்படுகிறது
இந்திய இறையாண்மை!
------------------------

சுவற்றில் இடம்பிடிக்க
போட்டா போட்டி!
யாருக்கும் நம்பிக்கையில்லை...
மக்கள்
மனதில் இடம்பிடிக்க!
------------------------

வரிசையாகப் பலரும்
தேடித்தேடி
பொத்தானை அழுத்தினாலும்
சரியான பொத்தான்
இன்றுவரை
யாருக்கும் அகப்படவேயில்லை!
------------------------

தேர்தலன்று
நாம் செய்யும் தவறு
சில நாட்களாவது உறுத்துகிறது
கரும்புள்ளியாக!
சிலர்
வெட்கமில்லாமல்
துடைத்தபடி...
மீண்டும் கரும்புள்ளி குத்த!
------------------------

காந்தி
மறைந்தும் வாழ்கிறார்...
மறைந்து மறைந்து
வாழ்கிறார்;
ஆரத்தித் தட்டிலும்
வாழை இலைக்கடியிலுமாக!
அர்த்தம் புரிகிறது
காந்தியின் புன்னகைக்கு!

Wednesday, March 11, 2009

கூட்டணி கூத்துக்கள்!

"எங்களுக்குள்ள 'கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆனதால கூட்டணிக்கு ஒத்துக்கிட்டேன்னு தலைவர் சொல்றாரே, அதென்ன கெமிஸ்ட்ரி?"

"ஒத்துக்கலைன்னா 'ஆசிட்' ஊத்திடுவோம்னு அவங்க மிரட்டினதத்தான் சொல்றாரு!"
------------------------------------------------------
"அதென்ன கூட்டணி ஜோசியர்?"

"கிரக ராசிப்படி கூட்டணியில எத்தனை கட்சிகள் இருக்கணும், எத்தனை சீட்டு கொடுக்கணும், எந்தெந்த சீட் கொடுக்கணும், கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கணும்னு எல்லாத்தியும் புட்டுபுட்டு வைப்பாராம்!"
------------------------------------------------------
"கூட்டணி அமைக்கமாட்டேன்னு சொன்ன நம்ம தலைவரை குண்டர் சட்டத்துல கைது பண்ணிட்டாங்களாமே?"
பின்ன? இந்திய இறையாண்மைக்கு எதிரா செயல்பட்டா சும்மா விட்டுடுவாங்களா?!!"

"இவரு கூட்டணி அமைக்கிறதுக்காகவே கட்சி ஆரம்பிச்சிருக்காருன்னு எப்படி சொல்ற?
கட்சியோட பெயரே 'கூட்டணி முன்னேற்றக் கழகம்"னு தான வச்சிருக்காரு!"
------------------------------------------------------
"எதிர்கட்சித் தலைவர், செல்போன்ல ரொம்ப நேரமா உங்ககிட்ட எதுக்காகவோ கெஞ்சிக்கிட்டிருந்தாரே, ஏன்?"

"இருக்கிற எல்லாக் கட்சிகளையும் நாமளே விலைபேசிட்டதால அவரு மட்டும் தனியா போட்டியிட வெட்கமா இருக்குதாம்... வேணும்னா ஃப்ரியாவே அவரும் நம்ம கூட்டணியிலேயே சேர்ந்துக்கலாமான்னு கேக்குறாரு!"
------------------------------------------------------

Sunday, February 1, 2009

புரட்சியாளன் முத்துக்குமாருக்குக் காணிக்கை!

(ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்திற்காக 29.1.2009 அன்று, சாஸ்திரி பவன் முன்பாக, தன்னுயிரையே தீக்கிரையாக்கிய புரட்சியாளன் முத்துக்குமாருக்கு இந்த கவிதை காணிக்கை!

என்னால் இயன்றவரை முத்துக்குமாரின் எழுத்துக்கள் அனைத்தையும் நகலெடுத்து மக்களுக்குப் பரவச் செய்யும் பணியை முத்துகுமாரின் இறுதி நிகழ்ச்சியிலேயே தொடங்கி விட்டேன். இதனை நமது கடமையாக நினைத்து அனைவரும் தொடர வேண்டுகிறேன்.)

முத்துக்குமார்!
ஈழ ஆதரவுப்போரில்
தமிழரின் தன்மானத்தை
ஏளனம் செய்தோரை
தன் மரணத்தால்
வாயடைக்கச் செய்தவன் நீ!

ஈழத்தமிழரின்
படுகொலைகள் கண்டு
மனம் பதறினாய்
இந்தியாவின்
பயங்கரவாத முகங்கண்டு
மனம்புழுங்கினாய்
உன் புழுக்கம் தீரவே
நீ குளித்தாயோ?
தீயில்
உன்னை நனைத்தாயோ?

உன்
கருகிய முகம் கண்டேன்
மூடாத உன் விழிகள்
ஒருகணம்
என்னோடும் பேசியது
"என்முன்னே
கூட்டத்தைப் பார்" என்றது...

ஆம்;
தன் வீட்டுத் துக்கமென
தூக்கம் தொலைத்த
மாணவர் கூட்டம் கண்டேன்!

உன்னைத் துருப்புச்சீட்டாக்க
உன் இருப்பையே
ஒருநாள் நீட்டித்த
மாணவர்தம்
ஆவேச முகமும் கண்டேன்!

நீ விரும்பிய தமிழர்கள்
இறுதியாய் உனைக்காண
அடக்கிய தமிழுணர்வெல்லாம்
வெடித்துச் சிதறக் கண்டேன்!

பிரபாகரன் எங்கோ இல்லை...
இங்கே இருக்கிறோமென
இறுமாப்போடு
பிரபாகரன் படந்தாங்கி
பெருமைபேசி
தமிழர்கள் உலவக் கண்டேன்!
எல்லாம்
நீ கொடுத்த தைரியம்தான்!

கட்சிக் கொடிகள்
தன் அடையாளந்தொலைத்து
கருமை பூசிக்கொண்டன
உனக்காக!

துதிபாடிகள் புடைசூழ
தன்னைத் தமிழனென்றும்
தானைத் தலைவனென்றும்
தம்பட்டமடித்து
தமிழால் பிழைத்தவர்கள்
தப்பிப் பயந்தோடிய
நிகழ்வு கண்டேன்!

காந்தியின் பெயராலே
தமிழனிடம் ஓட்டுவாங்கி
தமிழனுக்கே வேட்டுவைக்கும்
இந்திய இறையாண்மை
மயிர்களெல்லாம்
பிடுங்கி எறியப்பட்டு
பொசுக்கப்பட்ட
புரட்சி கண்டேன்!
தேர்தல் வரட்டும்
நேரில் வரட்டும்
செருப்படி நிச்சயம்!

வாக்களிக்கப்
பணம்வாங்கியே
பழகிப்போன தமிழ்ஜாதி
முதல்முறையாக
வெட்கப்பட்டது...
விலைபோக மறுத்த
உன் தந்தையைப் பார்த்து!

நீ
பற்ற வைத்த நெருப்பு
உன் தந்தையை மட்டுமா?
தமிழுலகம் முழுதுமன்றோ
தொற்றிவிட்டது!

உன்னை மட்டுமா பொசுக்கியது?
ஜாதிமதமென்றும்
கட்சியென்றும்
தமிழனைப் பிரித்தாண்ட
சூழ்ச்சியனைத்தையுமன்றோ
பொசுக்கியது!

திலீபனைப்போல்
ஈழத்தமிழர் வரலாற்றில்
உனக்கும்
ஓர் இடம் உண்டு!

Friday, January 30, 2009

தியாகி முத்துக்குமரனின் மரண வாக்குமூலம்... உங்கள் பார்வைக்கு!

ஈழத்தமிழர் போராட்டத்திற்காக தன்னுயிரை, 29-01.2009 அன்று மாய்த்துக்கொண்ட தமிழன், தியாகி முத்துக்குமரன் வினியோகித்த துண்டறிக்கையைப் பதிந்துள்ளேன். இதில் பொதிந்துள்ள உண்மை, அனைவரையும் எழுப்பும் என்ற நம்பிக்கையுடன்...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.

அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.

தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள்.
உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?

ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).

பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், “இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல” என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.
உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதி தான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!

விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!

ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.

'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.
என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?
சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.

ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை “ஐயா” என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.
மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.

டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விகளுக்கப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி, தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.

தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.

ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?

ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.

சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.
ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரனையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?

புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்?

தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.

ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.

ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு “பாராசெட்டமால்” மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.
அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார்,
கொளத்தூர், சென்னை-99

அருமைத்தமிழ் மக்களே,

அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

கு.முத்துக்குமார்,
கொளத்தூர், சென்னை-99

Wednesday, January 28, 2009

உலை கொதிக்குது உள்ளே!

அகில இந்திய
கட்சித் தலைமைகாட்டும்
மாநிலத் தலைவனை
ஏற்க மறுக்கும்
கோஷ்டிகளின் கூடாரம்
பேசுகிறது
இந்திய இறையாண்மையை!

தினம்தினம்
செத்துமடியும் தமிழனுக்கு
அய்யகோ! போட்டுவிட்டு
ஆஸ்பத்திரியில் ஓய்வெடுக்கும்
ஒப்பற்ற தலைவரோ
பொறுத்திருக்கச் சொல்கிறார்
செயற்குழு கூடும்வரை!

இருப்பைக் காட்டிக்கொள்ள
கறுப்பு பேட்ச்
அணிய ஆணையிட்ட
கறுப்பு எம்ஜியாரோ
சுறுசுறுப்பாக
டூயட் ஆடியபடி!

வெளியுறவுத்துறை
செல்லுமுன்னே
விளையாட்டுத்துறை
சென்றுவிட்டது...
ஒருபக்கம்
ஓரணியில் நின்று
குண்டுவீசிவிட்டு
மறுபக்கம்
எதிரெதிராய் நின்று
வேடிக்கை காட்டுது!

இத்தனைக்கும் நடுவே
அடிக்கடி
அடிதடிக்குப் பழியாகும்
சட்டக்கல்லூரி மாணவர்கள்
இம்முறை
அஹிம்சைக்குப் பலியாக
திலீபனை நினைவுபடுத்தியபடி...

உலை கொதிக்கத்
தாளமிடும் தட்டுபோல்
கூப்பாடு மட்டும் தமிழகத்தில்
கொள்ளி
இன்னும் எரிகிறது...
உலை கொதிக்குது உள்ளே!

Monday, January 26, 2009

ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்...

இன்று (ஜனவரி 26,09) மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் சார்பு இயக்கங்கள் இணைந்து நடத்திய ஈழத்தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை அரசுக்கும், அதற்கு முழுக்க பக்கபலமாக இருந்து ஆயுத உதவி செய்யும் இந்திய அரசுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக வந்த குறுஞ்செய்தியையடுத்து நானும் அதில் கலந்துகொள்ளச் சென்றேன். சைதாப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கைப் பிரச்சனையில் மற்ற தமிழகக் கட்சிகளிலிருந்து சற்று மாறுபட்ட கொள்கை கொண்டவர்களாக என்னால் புரிந்துகொள்ளப்பட்ட மகஇகவினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன்மூலம், இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசின் செயல்பாடு குறித்து சரியான கோணத்தில் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நான் தெரி(ளி)ந்துகொண்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது என் கடமையென்பதால் இந்த கட்டுரை.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்.மருதையன் அவர்களின் உணர்ச்சிகரமான பேச்சிலிருந்து நான் புரிந்துகொண்ட செய்திகள்:
இந்திய அரசு வர்த்தகரீதியாக இலங்கை அரசை ஆதரிக்கும் நிலைப்பாட்டைப் போட்டுடைத்தார். தமிழக அரசியல்கட்சிகளால் பரவலாகப் பேசப்படும், தவறான வழிகாட்டுதலால்தான் மன்மோகன்சிங் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற கருத்து தவறென்பதை எடுத்துரைத்தார்.

இந்தியப் பணமுதலைகள் அம்பானி, டாடா போன்றவர்களின் தேயிலைத் தோட்டம், சிமெண்டுத் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்கள் பிரச்சனையேதுமின்றி தொடர இலங்கை அரசை அனுசரித்து, அதனைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பது என்ற இந்திய அரசின் வெளியுறவுக் கொள்ளையே இதற்கான் மூலகாரணம் என்ற விசயத்தை விளக்கினார். இதற்குச் சரியான உதாரணமே, சமீபத்தில் பணமுதலைகளுக்கு ஆதரவாக சிங்கூரில் இந்திய மக்களின்மீதே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு. தனது கட்டுக்குள் வராத ஒரே காரணத்தினால் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழ்ப் போராளிகள்மீது நடத்திய தாக்குதலையும், அதையொட்டி தமிழக மக்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த, தமிழ்ப் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றுகுவித்த ராணுவ வெறியாட்டத்தையும் நினைவுபடுத்தினார்.

இன்றுவரை இந்திய அரசின் ஆயுத உதவியுடன் நடைபெற்றுவரும் தமிழ்ப் போராளிகள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தச் சொல்லி வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பச் சொல்வது கேலிக்கூத்தான விசயமென்றும், இதுவிசயமாக மன்மோகன்சிங் இலங்கைக்குச் சென்றாலும் போரைத் தொடர்ந்து நடத்தத்தான் வலியுறுத்துவார் என்ற எதார்த்தத்தைப் புரியவைத்தார். எனவே இந்திய அரசுக்கு எதிராகப் போராடும் அனைவரும், இந்திய அரசை இலங்கைப் பிரச்சனையில் தலையிடக்கூடாதென வலியுறுத்திப் போராடுவதே சரியான நிலைப்பாடு என்பதை எடுத்துரைத்தார். இதைத் தமிழகக் கட்சிகள் புரிந்துகொண்டால் சரி.

ஈழ மக்களுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ராணுவத்தின் வெற்றியைப் பெருமிதத்தோடு செய்தி வெளியிடும் இந்துராம், ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கருத்துக் கொண்ட சோ, போரில் ராணுவத்தாக்குதலால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கமுடியாதது எனக்கூறி ஈழத்தமிழர்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதும் ஜெயலலிதா, அமெரிக்க ஏஜெண்ட் சு.சாமி, ராஜீவ்காந்தியின் மரணத்தால் சென்டிமென்ட் அரசியல் நடத்தும் காங்கிரஸ் என அனைவரின் முகத்திரையையும் கிழித்தார்.

விடுதலைப் போராட்டம் என்பது தேதி குறிப்பிட்டுத் தொடங்குவதல்ல, தேதி குறிப்பிட்டு நிறைவுசெய்யப்படுவதுமல்ல என்றும், தங்களது போராட்டமும் தொடருமென அறிவித்தார். ஆம், கிளிநொச்சி வீழ்ந்தாலும், முல்லைத்தீவு வீழ்ந்தாலும், ஏன், பிரபாகரனுக்குப் பிறகும்கூட அங்குள்ள மக்களின் உரிமைப்போராட்டம் என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்குமென்ற உறுதியான நம்பிக்கையுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

இத்தனையும் சொன்ன நான், மகஇக தோழர்கள் பற்றிக் குறிப்பிடாமல் இருந்தால் சரியாக இருக்காது. இவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு முதல்நாள், மாநாடு நடைபெற்றதால் அதிலும் கலந்து கொள்வதற்காக தங்கள் உடுப்புகளடங்கிய கைப்பையோடு வந்திருந்த அனைவர் முகத்திலும் ஏழ்மையை மீறிய இனஉணர்வு வெளிப்பட்டது. மிகவும் கட்டுப்பாட்டோடு, பொதுமக்களுக்கு மட்டுமென்றில்லாமல், காவல்துறையினருக்கும் எந்தவிதத்திலும் சிரமமுமில்லாமல் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். குடியரசு தினத்தன்று, இந்திய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் என்பதால் பரபரப்புடன் வந்திருந்த காவல்துறையினர், தோழர் கோவனின் இனஉணர்வுமிகுந்த, கணீரென்ற பாடல்களுக்கு மெய்மறந்து நின்றதைக் காணமுடிந்தது. தன் தந்தையின் தோள்மீது தூக்கி உட்காரவைக்கப்பட்டிருந்த பையனின் கையில் செங்கொடி, ஆண்களுக்குச் சரிநிகர்சமமாக பெண்களும் இனஉணர்வோடு முன்னின்று நடத்திய ஆர்ப்பாட்ட முழக்கம் அவ்வழியாகப் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் கடந்துசென்ற மக்களை வியக்க வைத்தது. அனைவரையும் கைதுசெய்ய வந்திருந்த காவல்துறை உயர்அதிகாரி ஒருவரே, தனது வியப்பினை தோழர்.மருதையனிடம் வெளிப்படுத்திய செய்தியும் என் காதுகளுக்கு எட்டியது.

Friday, January 23, 2009

உரசிய வார்த்தைகள்!

நன்றாகத்தான் போனது
அறிமுகமான கணங்களில்
அவிழ்த்துவிட்ட வார்த்தைகள் மட்டுமே
விலகி நின்று
ஒன்றையொன்று விசாரித்தவரையில்
வளவளத்த வார்த்தைகள்
இடையிடையே
உரசிக்கொண்டன ரகசியமாய்
இறுதிவரை தேயாமல்
கூடுதிரும்பிய சில
தங்களுக்குள் பேசிக்கொண்டன
"இவன் இன்னாளாகத்தான் இருக்குமென!"