Thursday, May 28, 2009

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் அப்துல்கலாம்!

டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் எவ்வளவோ முயற்சித்தும் இலங்கை பிரச்சனையில் யாராலும் மூக்கை நுழைக்க முடியவில்லை! ஈழத்தமிழர்களை நாங்கள் பார்த்துக் கொள்(ல்)வோம்... அவர்கள் செத்தாலும் பிழைத்தாலும் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டது இந்திய வல்லரசு!

ஈராக்கினுள் நுழைந்த அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு சற்றும் குறையாமலும், உலக நாடுகளை தனது கைக்குள் போடும் விவேகத்திலும் சற்றும் அசராமலும் தான் நினைத்ததை சாதித்து முடித்துள்ளது இந்தியா! இந்த வல்லரசுத் தன்மையைத்தானே கடவுளுக்கு நிகராக இந்திய மீடியாவினால் தூக்கி நிறுத்தப்பட்ட அப்துல்கலாமும் எதிர்பார்த்தார்! இப்போது கண்டிப்பாக பூரித்துப் போயிருப்பார்!

இந்த நேரத்தில் அப்துல்கலாமை தேவையில்லாமல் சுட்டிக்காட்டவில்லை. இலங்கைப் பிரச்சனையை, தனது எழுத்து சரியான விதத்தில் வெளிக்கொணரவில்லை என்று வருத்தத்துடன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் எழுத்தாளர் அருந்ததிராய். தனது கட்சியின் தமிழர் விரோதப்போக்கு பிடிக்காமல் பதவியை உதறிவிட்டு இன்றுவரை ஈழத்தமிழனுக்காக தனியொருவனாகக் குரல் கொடுக்கிறார் தமிழருவி மணியன். எந்தவகையிலாவது ஈழத்தமிழனுக்கு விடிவு வராதா என்று திரையுலகிலிருந்து, யாரையும் எதிர்பார்க்காமல் சீமான் என்ற தனிமனிதன் போராடுகிறான். இவர்களுக்கு இருக்கும் அக்கறையில் சிறிதளவாவது, இலங்கைக்கு வெகு அருகில், ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல்கலாமுக்கு இருக்க வேண்டுமென நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு? ஒரு வார்த்தை போதாதா ஒட்டுமொத்த இந்தியர்களையும் சரியான பாதையில் சிந்திக்க வைக்க? பஞ்சாபிகளுக்காக பிரதமர் குரல் கொடுக்கும்போது தமிழர்களுக்கு எதிரான மனிதநேயப் படுகொலையை கண்டிக்கும் பொறுப்பு அப்துல்கலாமுக்கு இல்லையா?

அட, தமிழர்கள் என்று கூட வேண்டாம். நமது அருகிலுள்ள நாட்டில் நடைபெறும் படுகொலைகளுக்கு இந்தியா ஆதரவாக இருப்பது சராசரி இந்தியர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், முப்படைகளையும் நிர்வகித்த ஒரு முன்னாள் ஜனாதிபதிக்குமா தெரியாமல் போகும்? ஒரு மனிதநேயத்துடனாவது இதை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டாமா? இவர் எதிர்பார்க்கும் வல்லரசு இதுவென்றால் அப்படி ஒரு வல்லரசுக் கனவு அமெரிக்காவோடு ஒழிந்து போகட்டும்!

Tuesday, May 19, 2009

பொய்யாகிப் போகாதோ?

பொய்யாகிப் போகாதோ?
உன் மரணம்
பொய்யாகிப் போகாதோ?
நீ
பக்கத்திலிருந்த தைரியத்தால்
வீரம் பேசித் திரிந்தோமே...
வீணாய்ப் போனதே
அத்தனையும்!
வீணாய்ப் போனதேன்
அத்தனையும்?

இறுதிவரை நீ
ஈழ மண்ணை விட்டு
ஓடவில்லை!
உன் உறுதி
கர்வப்பட வைக்கிறது...
நீ ஓடி
உயிர்தப்பியிருக்கக்கூடாதா?
என்
உள்மனம் ஏங்குகிறது!

மெய் சிலிர்த்துக் கிடந்தோமே!
தமிழனுக்கென்று அரசாங்கம்
தமிழனுக்கொரு ராணுவம்
தமிழனுக்கொரு தலைவன்
பொய்யாகிப் போனதே
அத்தனையும்!

இனப்படுகொலையின்
வலியை உணர்ந்தாய் நீ...
வலியை உணர்ந்தவர்கள்
உன் பின்னால் சேர
வலிமையானாய் நீ!
தமிழனைக் காக்கத்தானே
நீ
துப்பாக்கி தூக்கினாய்?
உன் பின்னால்
பீரங்கியே அணிவகுத்ததே
பின்னாளில்!
இன்று
எட்டி நின்று
வேடிக்கை பார்க்கும் தமிழகம்
அன்று உன்னை
தட்டிக் கொடுத்ததே!

உலகத்தின் சுழற்சியால்
சூழ்ச்சியால்
இனப்போராளி உன்னை
தீவிரவாதியென்றல்லவா
தடை செய்தது!
அடிமேல் அடி விழுந்தாலும்
"ஓயாத அலை"யாக
சுழன்றடித்த நீ
இன்று அமைதியானாயே!

பதுங்கு குழிகள்
பாதுகாப்பு வளையமென
தமிழரைக் கொன்றொழித்து
உன்னைப் பழியாக்கி
பலியாக்கிய
உலகத்தின் சூழ்ச்சியை
எப்படிச் சொல்வேன்?
வெட்கக்கேடு!

எழுதப்படும் வரலாறுகள்
உன்னை
எப்படி வேண்டுமானாலும்
சொல்லட்டும்...
உன் உறுதியை
உன் வலிமையை
உன் பெருமையை
என் பேரனுக்கும்
சொல்லிக்கொடுத்து உரமேற்றுவேன்...
அதுபோதும் எனக்கு!

Saturday, May 16, 2009

தேர்தல் முடிவுகள்- 2009 - ஒரு கண்ணோட்டம்

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏதாவதொரு சிறப்பு சொல்லப்படும். அந்தவகையில் பார்த்தால், இந்த தேர்தல், ஈழம் உள்ளிட்ட அனைத்துலக தமிழர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் வாழ்நிலையின் துயர் துடைக்கும் வழிகோலாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்தும் இருந்தது. அந்த வகையில் பார்த்தால் பெருத்த ஏமாற்றம் மிஞ்சியதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

மணிசங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் பெருந்தலைகள் உருண்டாலும் வைகோவின் தோல்விதான் இருதரப்பிலும் பெருத்த அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.அவரவர் நிலைப்பாட்டைப் பொறுத்து பெருத்த சோகமாகவோ, பெருத்த மகிழ்ச்சியாகவோ ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தலை தப்பியது இறுதிக்கட்ட திருப்பம்! நிழல் அரசியல்வாதியாகவே அனைவராலும் அறியப்பட்ட மு.க. அழகிரியின் பிரம்மாண்ட வெற்றி, பணநாயகத்தின் வெற்றி என்று மட்டும் சொல்லித் தட்டிக் கழித்துவிட இயலாது. தேர்தலுக்குக்காகத் தரப்படும் பணத்தையும் பொருட்டாக மதித்து வாக்கினை அளிக்கும் மனநிலைக்கு மாறி வருவதையும், வழக்கமாக உணவகங்களில் தரப்படும் "டிப்ஸ்" போல இப்பணம் மதிக்கப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, அதிரடி "ஒட்டு மாங்கனி" பாமாகாவின் தோல்வி குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டு சேர்வதும், பெரியண்ணன், அன்புச்சகோதரி எனப் புகழ்ந்து சில தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதுமாக அரசியல் செய்து, மத்திய அமைச்சர் பதவியை தனது மகனுக்கு வாங்கிக் கொடுத்து அழகு பார்த்த ராமதாஸுக்கு மக்கள் தந்த "சவுக்கடி"தான் இத்தேர்தல் முடிவு! தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கும் பாமாகாவுக்கு, இனியாவது கூட்டணித் தலைவர்கள் அளந்து அளந்து தொகுதிகளை அளிப்பார்கள் என நம்பலாம்! தொகுதிப் பங்கீட்டில் அசிங்கப்படுத்தப்பட்ட வைகோவாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விட்டார்!

எம்ஜியாரின் இரட்டை இலை இனியும் அதிமுகவை கைதூக்கி விடுமா என்பது சந்தேகம்தான். தற்போதய திமுகவின் ஆட்சியில் பேருந்துக் கட்டண உயர்வு, மின்வெட்டு, காவிரி, ஒகெனக்கல் பிரச்சனை என எத்தனையோ பிரச்சனைகள் எழுந்தபோதும், எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவி ஜெயலலிதா, செயல்படாத தலைவர் போலவே அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டார். தேர்தலின்போது இரண்டு மாதம் அரசியல் பண்ணினால் மட்டும் போதுமென்று யாராவது "பத்திரிக்கை நண்பர்கள்" ஆலோசனை கொடுத்திருக்கலாம்! அதன்படியே செயல்பட்டு, அல்லல்பட்டு, இப்போது கூட்டணி பலத்தால் அடைந்திருக்க வேண்டிய பிரமாண்ட வெற்றியைக் கோட்டை விட்டு நிற்கிறார்! இப்படியே தொடர்ந்தால் கோட்டையையும் இவர் விடுவது நிச்சயம்! தேர்தலின்போது இவர் எழுப்பிய திடீர் ஈழ ஆதரவு கோசத்தை, தமிழுணர்வாளர்களைத் தவிர மற்ற எவரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் தொடர்ச்சியாக எழுதி வைத்து ஒப்பித்தும், கேள்வி கேட்டும் இவர் செய்த பிரச்சாரம் கேலியாகவே மக்களால் பார்க்கப்பட்டுள்ளது!
ஜெயலலிதாவிற்கு ஒரு கேள்வி: இனியும் இப்படியே மந்தமாக அரசியல் செய்வீர்களா?!

நம்ம விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார் உள்ளிட்ட அனைவருமே காங்கிரஸ் கூட்டணிக்கு தங்களால் இயன்ற அளவு "கைமாறு" செய்திருக்கிறார்கள். அதற்கு கைமாறாக தொடர்சியாக இவர்களின் படங்களை சன் தொலைக்காட்சி குழுமத்தில் கண்டு ரசிக்கலாம்! வைகோவின் தோல்விக்கும், கார்த்திக் பெற்ற வாக்குக்கும் நேரடித் தொடர்பே இருக்கிறது. மற்ற தொகுதிகளில் விஜயகாந்த்தின் பங்கு எவ்வளவென்று, அவர் கூட்டணி வைப்பதற்காக டெல்லியில் மன்றாடிய தெய்வத்திற்குத்தான் தெரியும்!

இவ்வளவையும் சொல்லியாச்சு, கலைஞரைப் பற்றியும் சொல்லாமல் விடலாமா? கடந்த பொதுத்தேர்தலில் இவர் எழுப்பிய நாளை நமதே! நாற்பதும் நமதே! என்ற கோஷம், தற்போது ஜெயலலிதாவாலும் காப்பியடிக்கும் அளவிற்கு பரபரப்பான கோஷமாக அமைந்து விட்டது. அப்போது திமுக பெற்ற பிரமாண்ட வெற்றி போலவே, இம்முறையும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றிருக்கிறது. திமுகவின் வெற்றியால் தேர்தலுக்குப் பின்னால் அதிமுகவும், பாமகவும் கூட்டணி மாறும் குளறுபடிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளுக்கு நிகராகத் தனது தனிப்பட்ட செல்வாக்கை, திமுக மேலும் உயர்த்தியுள்ளது. மாநிலத்திலும் மத்தியிலும் நிலையான ஆட்சிக்கு இனி பாதிப்பில்லை. இதோ, கில்லி மாதிரி கிளம்பி விட்டார் டெல்லிக்கு... விரும்பிய அமைச்சர் பதவியை பேசி வாங்கி வர. வாழ்த்துகள்! இந்த வேகத்தைத் தான் ஈழப் பிரச்சனையிலும் அனைவரும் எதிர்பார்ப்பது. தந்தி அனுப்பி விட்டு, இங்கேயே குந்தியிருந்தால் நினைத்த தொகுதியைப் பெற முடியாதென்பது, தந்திக்கு மதிப்பில்லை என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன?

மத்திய காங்கிரஸின் அசைக்க முடியாத வெற்றி, பாஜகாவையும், செம்படைத் தோழர்களையும் அதள பாதாளத்துக்கே தள்ளி விட்டது உண்மை! அத்வானியின் பிரதமர் கனவு, பகற்கனவாகி வருகிறது. இதோ, மோடி தயாராகி விட்டார், கனவு காண! கனவு காணுங்கள், தூங்காமல் கனவு காணுங்கள்! இனிவரும் தேர்தலில், கூட்டணித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வருவதும், வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்க விருப்பமில்லாதவர்களுக்கான பொத்தானும் மாறுதலாக மலர வேண்டும். காலம் மாறும்போது ஜனநாயகப் பாதையிலும் மறுமலர்ச்சி வேண்டாமா?

Sunday, May 10, 2009

இப்படிக்கு... அம்மா!

இரவுபகலறியாமல்
கருவறையிலிருந்த குழந்தை
நள்ளிரவில் அழுதவுடன்
சட்டென விழித்து
பாலூட்டியமர்த்துவாள்...
இரவுபகலறியாமல்!
------------------

நான்
நித்தம் காணும் நிலவு
இன்றுவரை
கறை துடைக்கப்படாமல்
அப்படியே இருக்கிறது...
யாரோவொரு தாய்
இன்றும்கூட
நிலாச்சோறு ஊட்டியிருக்கிறாள்!
------------------

மழலையிடம் மொழி பழக
தவழுகையில் துள்ளிக்குதிக்க
புன்னகையைப் படம்பிடிக்க
வீதியிலிறங்கிச் சோறூட்ட
வாரக்கடைசி வரத்திற்காக
ஒவ்வொருநாளும் வேண்டியபடி...
பணிக்குச் செல்லும் அம்மா!
------------------

உருண்டு புரண்டு விளையாடி
அழுக்காக்கிய உடையுடன்
வீடு திரும்பியவனை
அதட்டி அடித்தவளின்
வீட்டுக் கொடியில்
மறுநாள்
பளிச்செனக் காயும் உடைகள்...
மீண்டும் அழுக்காகத் தயாராய்!
------------------

மகளுக்கு முதல் தோழியாய்
உலகைப் புரியவைத்து
செல்லமாய் கண்டித்து
சிலநேரம் கண்காணித்து...
தலை நரைத்தபின்னும்
தொடர்கிறது
தலைமுறை தாண்டிய பய(ண)ம்!

Wednesday, May 6, 2009

திமுகவை விட்டுப் பிரிந்துவிட்ட திரு.மு.க!

எம்ஜியார் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த வேளையில் நடைபெற்ற தேர்தலின்பொது எம்ஜியார் மறைந்துவிட்டார் என்றும், எம்ஜியாரின் மரணத்தை மறைத்துவைத்து தேர்தலில் போட்டி போடுகிறார்கள் என்றும் எம்ஜியார் பற்றி வதந்தியை பரப்பி விட்டு அன்றைய காலகட்டத்தில் கருணாநிதி அரசியல் செய்தார். அந்தோ பரிதாபம்! இப்போது தான் நல்லநிலையில் இருந்தபோதும், தனக்கு நோவு வந்ததென தனக்குத்தானே கூறிக் கொண்டு மருத்துவமனைக்கட்டிலில் தொடர்ந்து இருந்தபடி பரிதாபத்தைச் சம்பாத்தித்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை.

ஏன் இந்த இழிநிலை?

தன்னை காலங்காலமாக தமிழினத்தலைவராக தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய திமுக தொண்டர்களையே மனம் நொந்துபோகும்படியல்லவா காங்கிரசோடு இவர் பின்னிப் பிணைந்துள்ளார். தமிழ் உணர்வு, ஈழத்தமிழர் ஆதரவு என்பது ஒவ்வொரு திமுகவினருக்கும் இவரால் ஊட்டப்பட்ட உணர்வு என்றால் மிகையாகாது. ஆனால் அந்த உணர்விற்கே இவர் துரோகம் செய்வதை திமுகவினராலேயே தாங்கிக் கொள்ள முடியாத நிலை. ஆம், கருணாநிதியைப் போல அனைவராலும் உணர்வுகளை மழுங்கச் செய்ய இயலாதல்லா? அவருக்கும் ஒருகாலத்தில் உணர்வு இருந்தது. ஆனால் தற்போது அவரது குடும்பத்தினர் அக்மார்க் வியாபாரிகளாக மாறிவிட்ட சூழலில் உணர்வாவது, மண்ணாங்கட்டியாவது என்ற கருணாநிதியின் நிலையை அவரது ஒவ்வொரு நாடகமும் தோலுரித்துக் காட்டத் தொடங்கி விட்டது!

இப்போது, திமுகவின் ஆதரவாளராக அறியப்பட்ட சீமானே ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வீதி வீதியாக பிரச்சாரம் செய்கிறார். இவர் ஜெயலலிதா ஆசியுடனும், பணத்துடனும் பிரச்சாரத்தில் இறங்கவில்லை. கம்பம் ராமகிருஷ்னன் போன்றவர்களை, ஜெகத்ரட்சகன் போன்றவர்களை சீமானோடு ஒப்பிடக்கூடாது. அவர்கள் கருணாநிதி பணம் கொட்டியதால் சேர்ந்தவர்கள்... சீமானோ, கருணாநிதியின் குணம் கெட்டதால் விலகியவர். இவரைப் போல பல திமுக தொண்டர்களும் மனதளவில் கருணாநிதியை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று விட்டார்கள் என்பது தான் இப்போதய நிலை.

எம்ஜியார் பிரிந்தபோது கருணாநநிதியின் அரசியல் பிடிக்காமல் எம்ஜியாரோடு ஒரு பெரும் பிரிவினர் எம்ஜியார் பக்கம் சேர்ந்தார்கள். அதன்பிறகு வைகோ பிரிந்தபோதும் ஓரளவு அந்த மாதிரி நிலை ஏற்பட்டது. இப்போது யாரும் கருணாநிதியை விட்டுப் பிரியவில்லை, இருந்தும் இப்போதும் பல திமுகவினர் கருணாநிதியை விட்டு விலகி ஜெயலலிதாவையோ, விஜயகாந்தையோ ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எதனால்???

ஆம்! கருணாநிதி இப்போது திமுகவைவிட்டு, திமுகவின் கொள்கையை விட்டுப் பிரிந்துவிட்டார்!