Saturday, December 4, 2010

வாழ்வின் விபத்து!

விபத்திலடிபட்ட உடலின்

சிதைந்த மூளைச்சிதறல்களில்
இறந்துபட்டிருந்தது
வருங்காலக் கனவுகளும்
குடும்ப எதிர்பார்ப்புகளும்;
கட்டியழக்கூட
அடுக்கிக் கோர்த்தால்தான்...
ஆகப்போவது ஏதுமில்லை
கூடியிருக்கும் கூட்டத்திற்கு;
எட்டியெட்டிப்பார்த்து
உச்சுக்கொட்டி,
ஒருசில தலைகிறுகிறுத்து
நகர்ந்தபடி...
அள்ளிச் செல்லுகையில்
கசியுது ரத்தம்
குழந்தைகள் நினைவால்!



Thursday, August 5, 2010

வறுமை!


வேற்றுக்கிரகத்திலல்ல,

என்னுலகில் தான்
இவர்களும்!

பூமிக்கு இருதுருவமென்று படித்திருக்கிறேன்
தவறு
இரு உருவங்கள்!

உடல் இளைத்த நாகரீகமும்
மறுபுறம்
உடல் இளைக்கும் நாகரீகமும்!

உலகம் சுருங்குகிறதாம்;
உடற்சுருக்கங்கள் சிரிக்கின்றன
எனைப் பார்த்து!

வறுமை தான்
தின்று கொண்டிருக்கிறது...
தினம் இவர்களை!

இனி
சிதறும் உணவுப் பருக்கைகளில்
இவர்கள் முகம் தெரியட்டும்!

படமெடுத்தவர்களைப் பார்த்தால்
கேட்க வேண்டும்
உணவளித்தீர்களா என்று!

புகையும் அடுப்படி!


நள்ளிரவு வானமாய்
கரிப்பிடித்த அடுப்படிகள்
விடிஞ்சு போச்சு!

திரிகையும், அம்மியும்
உரலும், குழவியும்கூட
உருமாறிப்போச்சு!

புகைக்கூண்டுகளும்
உசுப்பேத்தும் ஊதுகுழலும்
ஒழிஞ்சே போச்சு!

சமையல் வெந்ததை சத்தமிட்டு
சமையலே சொல்லும்
காலம் வந்துடுச்சு...

"இன்னுமா ஆகல?"
அதட்டுவது ஆணாகவும்
"இதோ ஆயிடுச்சு!"
படபடப்பது பெண்ணாகவும்
இன்னும் அப்படியே!

காமராஜர் என்றொரு அரசியல்வாதி!

நான் பிறக்குமுன்பே இறந்துபோன
காமராஜரைப் பற்றித்தான்
இன்றுகூட என் அப்பா
பெருமை பேசிப்பேசி
மாய்கிறார்!

ஒரு பினாமி இல்லை
புறம்போக்கு நிலமுமில்லை
பள்ளி கல்லூரி
எதுவுமில்லை
பட்டாசு கொளுத்திப் போடக்கூட
பட்டாளமில்லை!
பிறகெப்படி நம்புவேன்
இவர் அரசியல்வாதியென்று!

இவர் படிக்காத மேதையாம்!
அரசியலிலிருந்தும்
ஒரு டிகிரி கூட 'வாங்க'த் தெரியாத
இவர் அரசியலில் பேதையென்பேன்!
மதிய உணவு கொடுத்து
பள்ளிக்கு அழைத்தாராமே பிள்ளைகளை?
படிக்காத கூட்டமிருக்கும்வரையே
பதவி நிலைக்குமென்ற
அரிச்சுவடி கூட தெரியாத
இவரெல்லாமா அரசியல்வாதி?!

ஒருமுறை கூட
திருமணமாகவில்லை
வாரிசும் இல்லை
சொத்துமில்லை, பத்துமில்லை
சொந்தபந்தத்திற்கு
ஒரு பதவியுமில்லை!
இவரைப் போய்
"கிங் மேக்கர்" என்கிறார்கள்!

இன்றோ
இவர் ஆட்சியை அமைக்க
கோஷ்டிகளுக்குப் பஞ்சமில்லை
கொள்கையைப் பின்பற்றத்தான்
எவருமில்லை!
இவரணிந்த கதராடையை,
பாதயாத்திரை பக்தர்களின்
சீருடைபோல்
அவ்வப்போது மட்டுமே அணிகிறார்கள்
அடையாளத்திற்கு!

என் அப்பாவிடம் சொன்னேன்
இவர் அன்று
ஒருமுறைதான் தோற்றார்...
இன்றுவரை இருந்திருந்தால்
எல்லாத் தேர்தல்களிலும்
சொல்லிவைத்தாற்போல்
தோற்றுக்கொண்டே இருந்திருப்பார்!
விருந்து வைக்கத்தெரிந்தும்
'மருந்து' வைக்கத் தெரியாத
இவர் அரசியல்வாதியல்ல,
அரசியல் அப்பாவி!

Friday, June 18, 2010

இலவசமாய்!

"இருக்கிறவங்கல்லாம் கையத் தூக்கு!"
யாரோ கேட்டதுபோல்
கைதூக்கிப் பெருமை பேசிய
மொட்டை மாடிகள்...
விடிவெள்ளிக்காக
இரவெல்லாம் காத்திருந்து
விடிந்த பொழுதில்
கூடுதலாய் காட்சியளித்த
ஒரு பாடலை ஒரு வாரம் முழுக்க
பேசிக் களித்த என் மூஞ்சியில்
ஒன்றரை டன் வெயிட்டான குத்துவிட்டு
ஐந்து நிமிடத்திற்கொருமுறை
அலறிக் குத்தாட்டமிட்டு
காட்சியளிக்குது நடுவீட்டில்!
போக்கிய பொழுதுகளை
ஆக்க முடியாத அவஸ்தையில்
அவ்விடம் அகன்று வாசல் திறந்தால்
இன்னொன்று இளித்து நிற்குது
இலவசமாய்!

அரிதார புருஷர்கள்!

கிழிந்து கந்தலான
நிர்வாணச் சாலைகள்
அவசர அவசரமாக
ஆடையணிந்து கொண்டன

சாலை நடுவே
பொறிக்கக் காத்திருந்த
கொசு முட்டைகளோடு
திறந்து கிடந்த
கழிவுநீர்ச் சமாதிகள்
கல் போட்டு மூடப்பட்டன

முகத்தில் பிளீச்சிங் பவுடர்
பூசிய மூத்திரச்சந்து
பளிச்செனச் சிரித்தது
வழிநெடுக

தங்க நகைகளின்
விலையேற்றம் பற்றி
சற்றும் கவலையின்றி,
நாய்ச்சங்கிலி மாட்டிய தலைகள்
டிஜிட்டலில் சிரித்தன
வரிசையாய்

பேனருக்குக் கீழே
காவலிருக்கும் காக்கிகள்
காத்திருந்தன
எந்நேரமும் கடக்கவுள்ள
கார்க்கண்ணாடிக்கு
விறைப்பான வணக்கம் சொல்ல

வெறிச்சோடிய சாலையில்
சைரன் ஒலிக்க
வெறிபிடித்தோடிய வாகனம்
கையாட்டியபடி
கணநேரத்தில் மறைந்தது...
மீண்டும் குப்பையானது சாலை!

Tuesday, April 27, 2010

கொஞ்சம் கவிதை!

புள்ளிகள் புணரப் புணர
பிறந்துகொண்டேயிருக்கிறது
கோடு!
----------------------------------

தேரோட்ட நெரிசலில்
சாமி பார்த்த சந்தோசம்...
சிக்னலில்
பச்சை விளக்கைப் பார்க்கும்போது!
----------------------------------

எதிர்வீட்டுத் தொலைக்காட்சிச் சத்தம்
இன்றும் உச்சத்தில்...
இறுதியில் குறைந்தது
விசும்பல் ஒலி!

Friday, March 19, 2010

இயற்கை

பனித்துளி கனக்கிறது...
விடியும்வரை வியர்த்துக்கொட்டியபடி
புல்வெளி!

சில்லரை

சிக்னல் விலகுமுன்பே
கைக்குழந்தையுடன்
என்னை நெருங்கிய
பிச்சைக்காரியின்
தவிப்பைவிடப் பெரியது
பையில் சில்லரையில்லாத
என் தவிப்பு!

Friday, January 15, 2010

வயக்காடு வாழ்த்துகிறது!

மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
யானை கட்டிப் போரடித்த கூட்டம்
இன்று
வீடு கட்டிப் போரடிக்கிறது
என் மேல்!

வயலும்
வயல் சார்ந்ததும் மருதம்...
தொழிலும்
தொழில் சார்ந்தோரும்
பிழைக்க
என் வயிற்றில்
'பாலை" வார்ப்பது
என்ன நியாயம்?

வறண்ட கோடுகளால்
இயற்கையன்னை வதைப்பது போதும்:
இல்லாத கோடுகளால்
தண்ணீர் இல்லாமல் செய்வது
என்ன கொடுமை?
அணைக்கட்டுகள்
என்னை அரவணைக்காததை
என்னவென்பது?
மொழிகளால்
பிரிந்த உங்களிடம்
எந்த மொழியில் வேண்டுவது?
என்னிடம்
ஆழப்பாய்ந்து நீரள்ளிப் பருகும்
வேரில்லை:
நீர்த்தாகம் தீர
உங்களை விட்டால்
கதி வேறில்லை!

பசுமை தந்தேன்
இன்று
சுமையாகிப் போனேன்!
என்னை
வருடிச் சென்ற தென்றல்
நெருடலாய் கேட்கிறது
ஏன் கம்பிகளாய்
மாறி வருகிறாயென்று!

ஏரு பூட்டி சேறு பூசி
என்னை
கிச்சுக்கிச்சுக்காட்டி
விளையாடிய நீங்களா
இன்று
உயிருடன் பிரேதப்பரிசோதனை செய்வது?

பெற்றவள் கைவிட்டாள்...
பெற்றவனோ
விற்றுவிற்று வெற்றிடமாக்கி
மீண்டும் விற்றுவிட்டான்!

இன்னமும் இருக்கிறேன்...
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்
சுடுகாடு இடுகாடுபோல்
தீண்டத்தகாத வயக்காடாக!

ஒரே ஆறுதல்:
பொங்கல் பண்டிகையை
இன்றுவரை
பெயர் மாற்றவில்லை...
செங்கல் பண்டிகையென்று!