Wednesday, July 8, 2015

பகலெங்கும்
நிரம்பி வழியும் வெயிலில்
நீந்தும் நிழல்கள்
------------
நிழலை உடுத்திக் கொண்டன
துவைத்துக் காயப்போட்ட
உடைகள்...
------------
மொட்டை மாடியில்
கொடியில் காயுது துணி
தரையில் காயுது நிழல்...
------------
வெயில் கொண்டு வந்தேன்
நிழல் கொண்டு வந்தாள்
அவள்
எனக்கும் மகனுக்குமான
ஒளிந்து விளையாட்டில்
ஒளியத் தெரியாமல் பிடிபடும்
என் பால்யம்...
வியர்வை வழிய வழிய
துடைத்தபடியேதான்
நேர்முகத் தேர்வுக்காக
அலைந்து கொண்டிருக்கிறார்கள்
வியர்க்காத ஓர் அறை வேண்டி...
வியர்வை வழிய வழிய
துடைத்தபடியேதான்
உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்
வியர்க்காத பெட்டியிலே
என்றோ ஓர்நாள்
உறங்கும்வரை...
வியர்க்காத அறையினுள்ளே
உழைப்பவர்களுக்கும்
வியர்க்க வியர்க்க
உழைப்பவர்களுக்குமான பணம்
ஆங்காங்கே
வியர்க்காத அறையில்
ஓய்வெடுத்தபடி...
வழிவதை இன்னமும் நிறுத்தவில்லை
வியர்வை...
நிலவு முளைக்கும்
நட்சத்திரங்கள் முளைக்கும்
உறக்கம் முளைக்கும்
கனவு முளைக்கும்
இரவு முளைக்கும்...
உன்னிடம் சிக்கிக்கொண்ட இரவுகள்
தொலைத்த தூக்கத்தை
தேடியபடியே விடிகின்றன

-----------------------
சுவரில் வரையப்பட்ட பூதத்தின் 
நீண்ட நாக்கில் 
பயமின்றி ஊர்கிறது பல்லி

----------------------
போக்குவரத்து நெருக்கடி நொடிகளில்
பீறிட்டுக் கிளம்பி
வழி கிடைத்ததும் வழிந்து ஓடிவிடுகிறது
சமுதாயச் சிந்தனை

Tuesday, July 3, 2012

சொகுசு கார்கள்!

மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசலில்
ஒற்றை மனிதர்களைச் சுமந்தபடி
குட்டி தேசங்களாக நகரும்
சொகுசு கார்கள்!
----------------------------



வெள்ளையடிக்கப்படாத சுவற்றை மறைத்தபடி
வெள்ளையடிக்கப்பட்ட முகங்கள்
புகைப்படத்தில்!

வாசம்!

டாஸ்மாக் பார் கடக்கையில்
புளிச்ச பீர் வாசம்
அடுக்களையிலிருந்து வரும்
அரைத்த மசாலா வாசம்
கோவில் பிரகாரத்தின்
விளக்கெண்ணெய் வாசம்
சாவு வீட்டில் போர்த்திய
ரோஜாப்பூக்களின் வாசம்
நேற்றைய மழையில்
கிளம்பிய மண்வாசம்
அத்தனையுமற்ற
வெறிச்சோடிய உலகம்
புதிதாயிருக்கிறது
ஜலதோஷம் பிடித்த எனக்கு! 

தாமரைக் குளம்







பகலிலும்
நிலவுகள் குளிக்கும்
தாமரைக் குளத்தில்!


---------------------------------


வற்றிக்கொண்டிருக்கும் கண்மாயில்
நிறைந்திருக்கக்கூடும்மீன்களின் கண்ணீர்...


---------------------------------

Tuesday, February 7, 2012

தரை வீழ்ந்த இலை

ஒரு காலத்தில்
பச்சையம் நிறைந்து
பளபளப்பாய் இருந்திருக்கும்...
கிளை தாங்கிய பறவைக்கு
குடைதாங்கி
களைப்பாற்றி இருந்திருக்கும்...
எச்சங்கள் கூட சுமந்திருக்கும்...
காற்றின் கரம் பற்றி
விண்ணை எட்டிப் பிடிக்கவும்
முயன்றிருக்கும்...
கலகலத்து கதைபேசி
களிப்போடு மகிழ்ந்திருக்கும்...
இப்போது பச்சையம்
பழுதாகி, பழையதாகி,
இத்தனை காலமாய்
பிடித்திருந்த கிளை
பிடிக்காமல் கை விரிக்க
பிடி நழுவி, நழுவி
தரை வீழ்ந்த இலை
இன்றோ நாளையோ
அப்புறப்படுத்தப்படலாம்...
அத்தனை காலமாய்
கதை பேசிக் கலகலத்த
ஏதோ ஒரு
காற்றலையின் கரம் பற்றி!

Monday, February 6, 2012

இலையுதிர்க்காலம்...

இலையுதிர்க்கால இரவில்
எலும்பும் தோலுமாய்
நிலவு!
*****
இலையுதிர் காலத்திலும்
உதிராத சருகுகள்
பறவையின் கூட்டில்!
*****

இலையுதிர்க்கால முடிவில்
பொறிக்ககூடும் இலைகள்...
அடைகாத்தபடி மரம்!
*****

விருந்தினரில்லாத
வீடாகிப் போனது
இலையுதிர்க்கால மரம்!