Tuesday, February 7, 2012

தரை வீழ்ந்த இலை

ஒரு காலத்தில்
பச்சையம் நிறைந்து
பளபளப்பாய் இருந்திருக்கும்...
கிளை தாங்கிய பறவைக்கு
குடைதாங்கி
களைப்பாற்றி இருந்திருக்கும்...
எச்சங்கள் கூட சுமந்திருக்கும்...
காற்றின் கரம் பற்றி
விண்ணை எட்டிப் பிடிக்கவும்
முயன்றிருக்கும்...
கலகலத்து கதைபேசி
களிப்போடு மகிழ்ந்திருக்கும்...
இப்போது பச்சையம்
பழுதாகி, பழையதாகி,
இத்தனை காலமாய்
பிடித்திருந்த கிளை
பிடிக்காமல் கை விரிக்க
பிடி நழுவி, நழுவி
தரை வீழ்ந்த இலை
இன்றோ நாளையோ
அப்புறப்படுத்தப்படலாம்...
அத்தனை காலமாய்
கதை பேசிக் கலகலத்த
ஏதோ ஒரு
காற்றலையின் கரம் பற்றி!

Monday, February 6, 2012

இலையுதிர்க்காலம்...

இலையுதிர்க்கால இரவில்
எலும்பும் தோலுமாய்
நிலவு!
*****
இலையுதிர் காலத்திலும்
உதிராத சருகுகள்
பறவையின் கூட்டில்!
*****

இலையுதிர்க்கால முடிவில்
பொறிக்ககூடும் இலைகள்...
அடைகாத்தபடி மரம்!
*****

விருந்தினரில்லாத
வீடாகிப் போனது
இலையுதிர்க்கால மரம்!

உன்னோடு நிமிடங்கள்...

உன்னோடு பேசிக்கொண்டிருந்த
நிமிடங்களை
சுற்றிச் சுற்றி வருகிறது
கடிகாரம்!

இப்போது கேட்கும்
இந்த விமானச்சத்தம்
அப்போது எட்டவில்லை
என் செவிகளை!

நாம் அமர்ந்த இடத்தில்
இப்போது
வேறு யாரேனும்
அமர்ந்திருப்பார்கள்...
அவர்களாவது ரசிக்கட்டும்
அங்கு மலர்ந்த பூக்களை!

இன்றும்
நானே அதிகம் பேசினேன்
அதிகமாக சிரித்தேன்
எனோ
மவுனம் சுமக்கமுடியவில்லை...
ரசிப்பது நீயெனும்போது!

ஒளிந்து விளையாடிய
சிறுவர்களில் சிலர்
நம் பின்னாலும்
மறைந்திருந்து பிடிபட்டனர்...
இன்னமும் பிடிபடவில்லை
நம்முள் மறைந்துள்ள நாம்!