Sunday, May 10, 2009

இப்படிக்கு... அம்மா!

இரவுபகலறியாமல்
கருவறையிலிருந்த குழந்தை
நள்ளிரவில் அழுதவுடன்
சட்டென விழித்து
பாலூட்டியமர்த்துவாள்...
இரவுபகலறியாமல்!
------------------

நான்
நித்தம் காணும் நிலவு
இன்றுவரை
கறை துடைக்கப்படாமல்
அப்படியே இருக்கிறது...
யாரோவொரு தாய்
இன்றும்கூட
நிலாச்சோறு ஊட்டியிருக்கிறாள்!
------------------

மழலையிடம் மொழி பழக
தவழுகையில் துள்ளிக்குதிக்க
புன்னகையைப் படம்பிடிக்க
வீதியிலிறங்கிச் சோறூட்ட
வாரக்கடைசி வரத்திற்காக
ஒவ்வொருநாளும் வேண்டியபடி...
பணிக்குச் செல்லும் அம்மா!
------------------

உருண்டு புரண்டு விளையாடி
அழுக்காக்கிய உடையுடன்
வீடு திரும்பியவனை
அதட்டி அடித்தவளின்
வீட்டுக் கொடியில்
மறுநாள்
பளிச்செனக் காயும் உடைகள்...
மீண்டும் அழுக்காகத் தயாராய்!
------------------

மகளுக்கு முதல் தோழியாய்
உலகைப் புரியவைத்து
செல்லமாய் கண்டித்து
சிலநேரம் கண்காணித்து...
தலை நரைத்தபின்னும்
தொடர்கிறது
தலைமுறை தாண்டிய பய(ண)ம்!

No comments: