Thursday, August 20, 2009

பிரிக்கப்படாத புத்தகங்கள்

வாடகை வீடு மாறியதும்
புத்தகங்களை
அலமாரியில் அடுக்குவதில்
அதிக ஆர்வம்...
பெரும்பாலும்
மூளைக்கொத்துக்கிடையே
இடம்பிடிக்காத
பிடிக்காத புத்தகங்களே!

அடுக்குகளில் சில
பரிசாக வந்தவை:
பல
கட்டாயம் படித்தாகவேண்டி
வாங்கியவை:
விரும்பி வாங்கிய
ஒன்றிரண்டு மட்டுமே
என் கைரேகைகளை
அவ்வப்போது பதியமிட்டபடி!

ஒருசில புத்தகங்களை
நான் தொட்டதேயில்லை
குழந்தைகளையாவது
தொட விட்டிருக்கலாம்...
என் வீட்டுக் கறையானுக்கும் கூட
இதே வருத்தம்தான்!

கல்லூரிவரை கால்பதித்தும்
அடையாளமாக
அடுக்கில் ஏதுமில்லை!
ஆம்:
புத்தகங்கள் மீதான
சிறிதான ஆர்வமும்
அற்றுப்போக விருப்பமில்லை!

அறிவுசார் புத்தகங்கள்
வாங்கும் பழக்கம்
அதிகரித்துள்ளதாக
கேள்விப்பட்டிருக்கிறேன்
படிக்கும் பழக்கமும்
பெருகியுள்ளதாக
எதிலும் படித்த நினைவில்லை!

என்றாவது ஒருநாள்
படிக்கும் ஆர்வம் வரும்...
என் பேரனுக்காவது!
அன்றுவரை
கல்வெட்டுக்காக
கால்கடுக்க நிற்கும்
தலைவர்கள் சிலைபோல்
புத்தகங்களை
அடுக்கிக்கொண்டே!

No comments: