Thursday, February 21, 2008

தமிழக காங்கிரஸ் கட்சியையும் ஏலம் விடலாமே?

பிரபல எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் வரலாற்று நாவல்களில் பெண்களை ஏலத்தில் எடுக்கும் செய்தியை/கொடுமையை விளக்கமாகச் சொல்லியிருப்பார். அதற்கு ஏற்படும் பலத்த போட்டி படிக்கின்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்!

தற்போது IPL சார்பாக இந்திய வீரர்களின் ஏலம் பற்றிய செய்தியைப் படித்ததும் எனக்கும் அந்த நினைவுதான் வந்தது! இதற்கு முன்பு நடந்த அணி நிர்வாகிகளுக்கான ஏலமும் இதே ரகம்தான். இந்த அணி நிர்வாகிகள் பட்டியலில் பணத்தில் புரளும் விஜய் மல்லையா மாதிரி பிசினெஸ் காந்தங்கள்(!) மட்டுமல்லாது சாருக்கான் போன்ற கிரிக்கெட் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

கொல்கத்தா அணியை விலைக்கு வாங்கிய சாருக்கான், இந்திய அணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட கங்குலியின் திறமையை பாராட்டியதோடல்லாமல் அவரை அணிக்குத் தலைமையேற்கவும் வைத்துள்ளார். அவர் திறமைக்கேற்ப மதிப்பான சம்பளமும் வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் வீரர்களின் ஆட்டத்திறனை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை இப்போதே தொடங்கி விட்டனர். இதையெல்லாம் பார்க்கும்போது, சரியான தலைமை இல்லாமல் தவிக்கும் தமிழக காங்கிரசையும் ஏன் "வெளிப்படையான" ஏலத்தில் விடக்கூடாதென்ற யோசனை என்னுள் தோன்றியது.

2000ல் காமராஜர் ஆட்சி, 2006ல் காமராஜர் ஆட்சி, 2011ல் காமராஜர் ஆட்சி என்று தமிழக மக்களையும் காங்கிரஸ் தொண்டர்களையும் ஏமாற்றி வரும் காங்கிரஸ் தலைமைப் பதவியை "வெளிப்படையான" ஏலத்திற்கு விட்டால் என்ன? உண்மையில் கக்கன், காமராஜர் காலத்து காங்கிரஸ் தலைவர்கள் போல ஏழ்மை நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இப்போது இல்லை. தங்கள் பணத்தையெல்லாம் கொஷ்டி வளர்ப்பதிலேயே செலவழித்து வீணடிக்கிறார்கள். இந்நிலையை மாற்றி தமிழக காங்கிரஸை "வெளிப்படையான" ஏலத்திற்கு விட்டால் காங்கிரஸ் கட்சி பலப்பட நிறைய வாய்ப்புள்ளது!

* ஏலத்தின் மூலமாக ஒரு பெரிய தொகை காங்கிரஸ் தலைமைக்குக் கிடைக்கும!

* இன்னும் மூன்றாண்டுகளுக்கு தலைவர் பதவியை யாரும் பறிக்க மாட்டார்கள் என்ற நிம்மதி கிடைக்கும்!

* போட்ட பணத்தை எடுக்கவேண்டிய கட்டாயத்தின் காரணமாக தேர்தலின்போது மட்டும் விழித்துக்கொள்ளும் தூங்குமூஞ்சி அரசியலுக்கு முடிவுகட்டிவிட்டு முழுநேர அரசியலுக்கு காங்கிரஸ் திரும்பும்!

* கொஷ்டிகள் வைத்துக்கொள்வதற்குக் குறிப்பிட்ட பணத்தை கட்சித்தலைமைக்குக் கட்ட வேண்டுமென தடாலடி உத்தரவு போடலாம். ஒத்துவராதவர்களை கட்சியைவிட்டே கட்டம் கட்டலாம். இதனால் கொஷ்டி ஒழியவும், பணம் பெருகவும் வாய்ப்புள்ளது.

* கூட்டணிக்காக விஜயகாந்த் போன்ற புதுக்கட்சிகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்காமல் பணத்தாலேயே அடித்து வளைக்கலாம்!

* தனது தயவில் கூட்டணி ஆட்சி நடந்தாலும் வெறும் கூப்பாடு மட்டுமே தங்களால் போடமுடியும் என்ற நிலைமாறி பேரம்பேசி ஒன்றிரண்டு அமைச்சர் பதவிகளை, முடிந்தால் முதல்வர் பதவியையும் விலைபேசி தனது கனவான காமராஜர் ஆட்சியையும் எளிதில் அமைக்கலாம்!

என்ன நான் சொல்றது???

No comments: