Monday, July 9, 2007

ஜனனம்

காலடியில் பூமி பிளக்க

அதலபாதாளச் சறுக்கலில்

அடங்கா உயிர்வலியின் அலறல்...

பூமி விலகவிலகத்

தொடரும் உரசலில்

கீறல்களில் உயிர் கசிய...

முடிவில்லா ஆழத்தில்

இமை இறுக்கி உடல்குறுக்கி

இதயமும் சற்று சுருங்க...

இடைவிடாது அலறியபடி

முடிவிலாது விலகும்

புவியின் பாதம்வரை தொட்டு

மறுபக்கம் கீறி விண்ணில் வீழ,

மெல்லிய அழுகைச் சத்தம்

உலகம் நிரப்பும்!

வலியின் வீரியம் மரத்து

விழி நீர்பிரிக்க...

உதடுகள் விரிந்து மெல்லச் சிரிக்கும்!

மரணம் வென்ற ஜனனம்...

வலிமையின் அடையாளமே!