Thursday, September 29, 2011

காதல் சொன்ன பருவம்!



முற்றிலும் அவள் நினைவாகவே
திரிந்து போனது என் மனது
நொதிக்கச் செய்த முதல் துளியை
தேடிச் சுவைக்கத் துடிக்கிறேன்!

அவள் என்ன பேசினாலும்
யோசிக்காமல் ரசிக்கப் பிடிக்கிறது
இந்த ரசனை வந்து அப்பிக்கொண்ட
முதல் வரியைத் தேடிப் பார்க்கிறேன்!

அவளை மையமாகக் கொண்டே
சில காலமாகச் சுழலுது பூமி
சுழற்சி தடம்மாறிப்போன நொடி தேடி
கடிகாரத்தைப் பின்னோக்கிச் சுழற்றுகிறேன்!

பக்குவமாய்ப் பேசி மொட்டவிழ்த்து
மெல்லிதழ் தோகை விரியச் செய்து
சுவாசமெல்லாம் அவள் வாசத்தால்
நிரப்பிய பொழுதைப் புரட்டிப் பார்க்கிறேன்!

உந்தி உதைத்து, சிறுகச் சரிந்து
உருண்டு உடல் நழுவி, மெல்ல நகரும்
மழலையின் முதன்முயற்சியாய்
அவள் மனதை எட்டிப் பிடித்த பரவசத்தை
உணரத் துடிக்கிறேன் மீண்டும் குழந்தையாகி!

3 comments:

முனைவென்றி நா சுரேஷ்குமார் said...

மென்மையான காதல். அருமை.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!