Thursday, September 29, 2011

துளிப்பா கோவை!

பந்திக்கு முந்தாமல் தடுக்க
கையில் திணிக்கப்பட்டது
அட்சதை அரிசி!
-----------------------------------

ஊருக்கெல்லாம் பெய்த மழையில்
என்னை நனைத்தன
எனக்கான மழைத்துளிகள்!
----------------------------
இரவு வரும்போதெல்லாம்
பீதியை போர்த்திக் கொள்ளும்
தூங்காத அசைவுகள்!
-------------------------------
ஊனமுற்ற பிச்சைக்காரரை
கடக்கையில் ஊனமாகிறேன்
பையில் சில்லறையில்லாத போது!
--------------------------------
இன்னமும்
தூங்காத குழந்தையின் சிணுங்கல்
விழித்தபடி நிலவு!
-------------------------------
வீட்டு உரிமையாளருக்குத் தெரியாமல்
மீன் சமைக்கும்போது
காவல் காத்தது பூனை!
-------------------------------
குழந்தைகள் தூக்காததால்
உயிர்ப் பெறாத
கொலு பொம்மைகள்!
-------------------------------
யாரோ ஒருவனை அணைத்தபடி
யாரோ ஒரு வசீகரமான பெண்
தினமும் கடந்து செல்கிறாள்
போக்குவரத்து நெரிசல்களில்!
-------------------------------------------
குட்டிக் குட்டிக் கார்களும்
அமுக்கினால் கத்தும் பொம்மைகளும்
மட்டுமே போதுமாயிருக்கிறது
என் மகனுக்கு;
நாள் முழுக்க சந்தோசமாய் கழிக்க!
-------------------------------------------
பறவைகளில்லாத நேரம்
வத்தி வைத்துச் செல்கிறது
காற்று!

2 comments:

Rathnavel Natarajan said...

அழகு கவிதைகள்.
வாழ்த்துக்கள்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

தங்கள் விமர்சனத்திற்கு நன்றி!