Sunday, March 15, 2009

தேர்தல் வந்திடுச்சு!

வெள்ளித்திரை விலக்கி
"பிரச்சார பீரங்கி" பவனி!
கையசைக்கிறார்...
புன்னகைக்கிறார்...
வியர்வை துடைக்கிறார்...
சூட்டிங் முடிந்ததும்
கூட்டம் கலைகிறது
"நல்ல கலருடா!"
கொள்கை பேசியபடி!
------------------------

ஈழப் பிரச்சனைக்காக
தெருவில் நின்று
போராடிய பட்டியல்
போகுமிடமெல்லாம்
பறையடிக்கப்படும்!
தானே தமிழனென்றும்
தானைத் தலைவனென்றும்
திரும்பத்திரும்ப
நினைவுபடுத்தப்படும்!
------------------------

தேர்தல் பிரச்சாரத்தில்
யாராவதொரு
"அடுத்த பிரதமர்"
"நன்றி வணக்கம்"
என்று தமிழில் பேச,
ஒரு வரி மட்டும் புரிந்ததில்
புல்லரித்துப் போகும்
கூட்டி வந்த கூட்டம்!
------------------------

தேர்தல் கமிஷனின்
கடுமையான விதிகள்...
கெடுபிடிகள்...
கட்டுப்பாடுகளையெல்லாம்
உடைத்தெறிந்துவிட்டு
எப்பாடுபட்டாவது
காப்பாற்றப்படுகிறது
இந்திய இறையாண்மை!
------------------------

சுவற்றில் இடம்பிடிக்க
போட்டா போட்டி!
யாருக்கும் நம்பிக்கையில்லை...
மக்கள்
மனதில் இடம்பிடிக்க!
------------------------

வரிசையாகப் பலரும்
தேடித்தேடி
பொத்தானை அழுத்தினாலும்
சரியான பொத்தான்
இன்றுவரை
யாருக்கும் அகப்படவேயில்லை!
------------------------

தேர்தலன்று
நாம் செய்யும் தவறு
சில நாட்களாவது உறுத்துகிறது
கரும்புள்ளியாக!
சிலர்
வெட்கமில்லாமல்
துடைத்தபடி...
மீண்டும் கரும்புள்ளி குத்த!
------------------------

காந்தி
மறைந்தும் வாழ்கிறார்...
மறைந்து மறைந்து
வாழ்கிறார்;
ஆரத்தித் தட்டிலும்
வாழை இலைக்கடியிலுமாக!
அர்த்தம் புரிகிறது
காந்தியின் புன்னகைக்கு!

2 comments:

ஆண்ட்ரு சுபாசு said...

வரிசையாகப் பலரும்
தேடித்தேடி
பொத்தானை அழுத்தினாலும்
சரியான பொத்தான்
இன்றுவரை
யாருக்கும் அகப்படவேயில்லை!//

இந்த முறை கண்ணை மூடிக்கொண்டு கடைசி பொத்தான் தான்..

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

உங்கள் எண்ணம் புரிகிறது வாழ்த்துக்கள்!