Thursday, March 15, 2007

கூவம் - திரைவிமர்சனம்

நாயகன் விஷால் நடித்து வெற்றிபெற்ற தாமிரபரணி படத்தை அடுத்து அவர் நடித்து வெளிவந்துள்ள படம் "கூவம்". தூத்துக்குடிக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஏழை விவசாயி விஜயகுமாருக்கு மகனா விஷாலைக் காட்டுறாங்க. கிராமத்துல பிழைக்க முடியாமல் வேலை தேடி சென்னைக்கு வர்றார் விஷால். அங்கயும் நிறைய கம்பெனிகளில் வேலைகேட்டு கிடைக்காமல் நொந்துபோய் கூவம் கரையோரமா நடந்து வர்றார். அப்பொ கால்தடுக்கி கூவத்துக்குள்ள விழுந்த விஷாலை தன்னோட துப்பட்டாவைப்போட்டுக் கைகொடுத்து தூக்கி காப்பாத்துறாங்க ரீமாசென்!

கூவம் கரையோரமா காதல் மலர சுவிட்சர்லாந்துல ஒரு டூயட்!

கூவம் இவ்ளோ நாற்றம் அடிப்பதை அனுபவத்தால் உணர்ந்த ஹீரோ விஷால் இதைப் பற்றிய விவரங்களை ரீமாசென்கிட்ட கேட்கிறார். நல்ல ஆறாக ஓடிக்கிட்டிருந்த கூவத்தை தொழிற்சாலைக் கழிவுகளால அசுத்தமாக்கிய தொழிலதிபர்களைப் பற்றி ரீமாசென் எடுத்துச் சொல்றாங்க. அந்த தொழிலதிபர்களை எப்படி பழி வாங்கறார்ங்கறது தான் மீதி கதை!

இந்த படத்துல ரீமாசென் கொஞ்சம் குண்டா இருக்கறதப் பார்த்தால் அவங்கள "பீமா"சென் அப்படீன்னு சொல்லலாம்னு தோணுது!

விஷால் கூவத்துல மீன்பிடிக்கறதுக்காக தூண்டில் போட்டு மணிக்கணக்கா உட்கார்ந்திருக்கறது நம்மை சிரிக்கவைத்தால், அதைப்பார்த்த ரீமாசென் தூண்டில் போட பெரிய ஆறா காட்டுறேன்னு சொல்லி மெரினா பீச்சுக்கு கூட்டிட்டு போய் தூண்டில் போடவைப்பது மேலும் சிரிக்கவைத்து நம் வயிற்றைப் புண்ணாக்குது!

நாற்றமெடுக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலையை சென்னைக்கு மத்தியில் மவுண்ட்ரோட்டுக்கு அருகிலேயே பல ஆண்டுகளாக அரசாங்கத்திற்குத் தெரியாமல் வில்லன் பிரகாஷ்ராஜ் நடத்தி வருவதும், அதன் கழிவு நீரை அண்டர்கிரவுண்ட் பாதை மூலமாக கூவத்தில் கலக்க வைப்பதும் புதுமையான வில்லத்தனம்! விஷால் அதனை தனது மூக்கினாலேயே மோப்பம் பிடித்து கண்டுபிடித்து ஆலையை இழுத்துமூட வைப்பது த்ரில்லிங்!

இறுதிக் காட்சியில் அனைத்து தொழிலதிபர்களையும் ஒட்டுமொத்தமாக பிடித்துவந்து கூவத்திலுள்ள நேப்பியர் பாலத்திற்கடியில் ஒருநாள் முழுக்க சிறைவைத்து கூவத்தின் நிலையைப் புரியவைத்து திருத்துவது பரபரப்பான கிளைமாக்ஸ்!

கடைசியில் மீண்டும் சுத்தமான கூவத்தில், நாயகன் விஷால் தூண்டில் போட்டு மீன்பிடிப்பதோடு படம் முடிகிறது! கூவம் - வாசம்!

................................................................................................................................................................................................விஜய டி.ஆர். நடித்து இயக்கிய "கீரைச்சாமி" விமர்சனம் விரைவில்...

No comments: