Thursday, January 19, 2012

நீயில்லாத பக்கத்து வீடு!



எங்கள் வீட்டிற்கு
அடுத்த வீட்டின் முகவரியே
நீ வந்த பிறகுதான்
எனக்கு அறிமுகம்!
உன் வீட்டு முகவரியால்
என் வீட்டுக்கும்
முகவரி கொடுத்தாய் நீ!

கூடுடைத்து வரும்
கோழிக்குஞ்சைப் பார்க்கும்
பரவசம்தான்
உன் வீட்டை விட்டு
ஒவ்வொருமுறை
நீ வெளிவரும்போதும்!

இழுத்துச் செருகிய தாவணி
துப்பட்டா போர்த்திய சல்வார்
முழுக்க மூடிய முந்தானை
அத்தனையிலும்
கண்ணியமாகத்தான்
வலம் வருவாய்;
கண்ணியமாக
நீ வைத்த கண்ணியில்தான்
என் கன்னி வீழ்ச்சியே
தொடங்கியது!

பேசத் துடிக்கும் வாய்
கோர்க்கத் துடிக்கும் கரங்கள்
அருகாமை தேடும் பாதங்கள்
அத்தனை உறுப்புகளும்
உன்னால் ஒருமித்திருக்க
இதயமும் உடன்சேர்ந்து
துடிக்காமல்
சிலநேரம் சிரிக்கும்!

நீ எதிர்ப்படும்போதெல்லாம்
என்னுள்ளே
பாரதப்போரே நடக்கும்;
வழக்கம்போல்
உன் முன் தோற்று
நிராயுதபாணியாகி
எனக்கு நானே
சமாதானமாகிப் போவேன்!

என் வீட்டுச் சுவற்றின்
மறுபக்கத்தில்தான்,
மிகவும் பக்கத்தில்தான்
நீயென்றாலும்
ஒருமுறை கூட
உன்னோடு பேசியதில்லை!

உன் பார்வை
என்னைச் சந்திககாத வேளைகளில்
உன்னைச் சந்தித்து வருவதே
தினசரி வேலையாக
உன்னைப் பின் தொடரும்
என் பார்வை!
மவுனப்பார்வையால்கூட
உன் பார்வையைச் சந்திக்கும்
சக்தி வாய்த்ததில்லை!

உனக்காக பலமுறை
தெருப் பசங்களோடு
சண்டையிட்டிருக்கிறேன்
அதுவும்
உனக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை!

வாடகை வீடுகளின் சந்திப்பும்
ஒருவித ரயில் சினேகமென்பதை
புரிந்திருந்தாலும்
நீ வீடு மாறியபோதுதான்
முதல்முறை உணர்ந்தேன்
புரியாத ஏதோவொன்றை!

நானுமில்லாத அந்த தெருவிற்கு
இப்போது சென்றாலும்கூட
நீயில்லாத பக்கத்து வீட்டையும்
நீயில்லாத தெருவையும்தான்
பார்க்க முடிகிறது!

2 comments:

Rathnavel Natarajan said...

கவிதை கதையாகிறது.
வாழ்த்துகள்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

விமர்சனத்திற்கு நன்றி!