Showing posts with label தந்தை. Show all posts
Showing posts with label தந்தை. Show all posts

Friday, January 20, 2012

தந்தையாகிறேன்...

தந்தையின்
திடீர் மரணச் செய்தியை சுமந்தபடி
அவசர ரயில் பயணம்;
நான் ரசித்த
முதல் ஆண்மகன்,
முதல் அறிவாளி,
முதல் சாகசககரன்,
முதல் எல்லாம் தெரிந்தவன்,
தன் இயலாமையை உணர்ந்த
முதுமையிலும்கூட
எனக்குத் தெரியாத
இன்னும் பலவற்றை
ஓயாமல் கற்றுத் தந்தவன்
ஓய்ந்திருப்பதை காணச் செல்கையில்
ஜன்னல்வழி விரியும் உலகில்
எதிர்ப்படும் பசுமைகள்
என் ரசிப்புக்காகக் காத்திராமல்
ஒன்றன்பின் ஒன்றாக வந்துவந்து
துக்கம் விசாரித்து அகன்றபடியிருந்தன;
அவ்வப்போது முட்டிவரும் கண்ணீரை
என் கரம் துடைக்குமுன்னே
ஆறுதலாய் துடைத்துவிட்டு
சட்டென மறைகிறது எதிர்க்காற்று;
என் தந்தையைக் காயப்படுத்திய
குஷிப்படுத்திய
அத்தனை நினைவுகளையும்
மீட்டெடுத்தபடியே
என் தந்தையின் வயதொத்த
சக பயணிகளிடமும்
தேனீர், முறுக்கு வியாபாரிகளிடமும்
அவரைத் தேடிக்கொண்டே பயணிக்கிறேன்;
நினைவுச் சுழலில் சிக்கிய
என் தொடையில்
தன் பிஞ்சுக் கரத்தால் தட்டி
"அப்பா ஒண்ணுக்கு"
என்றழைக்கும் பையனிடம்
என் பால்யம் வந்து ஒட்டிக்கொள்ள
என் தந்தையாகிறேன் நான்!