Wednesday, November 9, 2011

அவளோடு நான் - கவிதைச் சரம்!



அவளோடு நான் - 1

அவளைச் சிந்திப்பதற்கு முன்
சிந்தித்த பின் என்றே
எனக்கான வரலாறு எழுதப்பட வேண்டும்!

அவளோடு நான் - 2

அவளைப் பற்றி
சிந்திக்கத் தொடங்கிய பின்பே
என்னைப் பற்றி
சிந்திக்கத் தொடங்கியது உலகம்!


அவளோடு நான் - 3

இப்போதெல்லாம்
அவள் மனதிலிருந்து
அவளின் உதடுகளால்
வடிகட்டித் தரும் வார்த்தைகளை
சுவைப்பதற்காகவே
காத்திருக்கிறேன் தினமும்!


அவளோடு நான் - 4

அவள் பேசும்போது
உதடுகளை எட்டியெட்டிப் பார்க்கும்
அவளது முன்நெற்றியின்
சிறு கற்றை முடிகளை
அடிக்கடி விலக்கி விடும்
விரல்களைப் போலவே
என் கண்களும் மனதும்!

அவளோடு நான் - 5

எனக்கென அவள் சிந்திய
மெல்லிய நூல் சிரிப்பிலே
நாளெல்லாம் பறக்கிறேன்
உலகினின்று விடுபட்ட
காற்றாடியாக!

அவளோடு நான் - 6

அவளால் எழுதிய கவிதையை
சொல்லித் திரிகிறேன்
எனது கவிதையென!

அவளோடு நான் - 7

எங்கள் காதுகளுக்கும்
கேட்காமல் தான்
ரகசியங்கள் பரிமாறுகிறோம்
உதடும் உதடும்
ஒட்டிய மாதிரி!

அவளோடு நான் - 8

மருதாணி பூசிக் கொள்கிறாள்
முகப்பூச்சு பூசிக்கொள்கிறாள்
நகப்பூச்சு பூசிக்கொள்கிறாள்
என்னையறியாமல்
மகிழ்ச்சியை பூசிக்கொள்கிறேன்
அவளைப் பார்த்ததுமே!

அவளோடு நான் - 9

அவளைச் சந்திக்கும்போதெல்லாம்
ஏதேனும் சிறு அன்புப் பரிசை
வாங்கித் தருகிறேன்;
அவளும்
முதல்முறை பார்க்கும்
பரவசத்துடன் தான்
ஒவ்வொருமுறையும் பார்க்கிறாள்;
பரிசையும், என்னையும்!

அவளோடு நான் - 10

என்னுள் வாசம் செய்யும்
அவளின் அருகாமை
தினம்தினம்
என்னை வசப்படுத்தும்
அவளின் வாசத்தால்!

அவளோடு நான் - 11

அவளுக்காக காத்திருந்த
நிமிடங்களின் நொடிகளுக்குள்
போட்டி நடக்கும்;
ஏதோ ஒரு நொடி
அவளை அழைத்து வந்து
என் முன் நிறுத்தும்!

Tuesday, October 25, 2011

தீபாவளிக் கவிதைகள்



கம்பி மத்தாப்பின் பொறிகளை
ரசிக்கப் பிடிக்கும்,
அந்த வெளிச்சத்தில்
அவள் முகம் காணும்போது!
லட்சுமி வெடியைப் பற்றவைக்கையில்
உதறும் கைகள், பதறும் நெஞ்சம்
சிதறியோடும் துள்ளல்
அத்தனையையும் ரசிக்கலாம்
அவள் வெடிக்கும் வரையில்!
********

முதல்முறை அணைந்தது;
முனை கிள்ளிப் பற்றவைக்க
மறுபடி அணைந்தது;
தீக்குச்சி கொளுத்த
புசுபுசுவெனப் பொறிந்து
முடிவில் அணைந்தது;
அடுப்பிலே விட்டெறிந்தும்
இறுதிவரை வெடிக்கவேயில்லை
இனாமாய் கிடைத்த பட்டாசு!
********

தற்காத்து
தற்கொண்டார் பேணும் இயற்கை
விட்டுவிட்டு மழை பொழிந்து
ஓசோனையும் ஓலைக்குடிசையையும்
பொசுங்காமல் காத்தபடி!
********

கல்யாணக்கல் காணாமப் போச்சு;
காளை அடக்குவதையும்
கட்டுப்படுத்தியாச்சு;
வீரத்தைக் காட்ட
வேறு வழியில்லை இளைஞர்க்கு,
உள்ளங்கையில் பிடித்து
அணுகுண்டு வெடிப்பதைத் தவிர!
********

பாதுகாப்பான தீபாவளி
பாதுகாப்பான தீபாவளி
அனல் பறக்கும்
காவல்த்துறை பிரச்சாரம்
காணாமல் போகும்
பட்டாசு தயாரிக்கும்
தொழிலாளர் பாதுகாப்பில்!

Monday, October 10, 2011

வேண்டாம் இன்னொருமுறை!


அலைகளும் பலமுறை வந்து
ஏமாந்து திரும்பி விட்டன
... உனக்காகக் காத்திருந்த நிமிடங்களில்!

காணும் வரை இறுகிய முகம்
நீ நெருங்கவும் நொறுங்கியது
கடற்கரையில் மணலாய்!

சின்னச் சிணுங்களில்
சின்னாபின்னமாகி போனது
சேமித்து வைத்திருந்த கோபமெல்லாம்!

திட்டித் தீர்க்க வேண்டுமென்ற
திட்டமும் தவிடுபொடியானது
செல்லத் தீண்டலில்!

கொட்டிக் குவிக்க வைத்திருந்த
வர்த்தைகளெல்லாம்
முடிச்சே அவிழ்க்கப்படாமல்!

என் கோபமே
என்னைக் கேலி செய்கிறது
உன்னோடு சேர்ந்துகொண்டு!

இனியொரு முறை தவிக்க விடாதே
தோற்றே பழகிப்போன
வீராப்புகளை என்னோடு!
See more

பேருந்து நிமிடங்களில்...

திருவிழா அரங்க முகப்பில்
குலை தள்ளிய வாழைகளாக
வாயில்களில் தொங்கும் கூட்டம்!
---

டிக்கெட்டுக்காகக் கொடுத்தனுப்பும் பணம்
நல்வாய்ப்பாக ஆசிர்வதிக்கப்படும்
அழகிய பெண்ணின் கரத்தால்!
---

பறக்கவில்லை
ஊர்ந்துதான் செல்கிறது
சிக்னல்கள்தோறும் கவுண்ட் டவுன்!
---

வழிநெடுக ஒட்டப்பட்ட போஸ்டர்களும்
சிறுநீர் கழிக்காதே எச்சரிக்கையும்
திரும்பத் திரும்ப வாசிக்கப்படும்!
---

பயணச்சீட்ட்டு வங்கிய குற்றவாளிகளால்
தள்ளப்படும்
மா"நகரா"ப் பேருந்துகள்!
---

பக்கத்து இருக்கையில் அமர்ந்து
தூங்கிச் சரிபவரின்
கனவைக் கலைத்தபடி நான்!

Thursday, October 6, 2011

ஹைக்கூ சரம்!

மதுபானக் கூடுதல் விற்பனையில்
அள்ளப்படுகிறது
கிள்ளிக் கொடுத்த போனஸ்!

அதிகாலையில் ஓடுபவர்களை
துரத்தும்
நாய் நோய் பயம்!

நடுத்தெருவில் உடைத்த பூசணிகளும்
சிதறிய சில்லறைகளும்
கண்ணகிகள் அரியணையில்!

Tuesday, October 4, 2011

ஹைக்கூ சரம்!

பாகற்காயினுள்ளிருந்த புழு
எட்டிப் பார்க்கவேயில்லை
விலைபேசி வாங்கி முடிக்கும்வரை!
-----------------------------------

மெல்ல ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி
தங்கம் விலை
வற்ற வற்ற!
-------------------------------

மழை நின்ற வெயிற்பொழுதில்
இலைகளைக் காய வைக்கும்
மரம்!
-------------------------------

மகிழ்ச்சியைத் தவிர
வேறொன்றுமில்லை
மழலையின் சிரிப்பில்!
--------------------------------

பந்திக்கு முந்தாமல் தடுக்க
கையில் திணிக்கப்பட்டது
அட்சதை அரிசி!
--------------------------------

ஊருக்கெல்லாம் பெய்த மழையில்
என்னை நனைத்தன
எனக்கான மழைத்துளிகள்!
---------------------------------

இரவு வரும்போதெல்லாம்
பீதியை போர்த்திக் கொள்ளும்
தூங்காத அசைவுகள்!
---------------------------------

ஊனமுற்ற பிச்சைக்காரரை
கடக்கையில் ஊனமாகிறேன்
பையில் சில்லறையில்லாத போது!

உனக்காக...

முந்த முயற்சித்து
முட்டிமோதிச் சிதறும் எழுத்துக்கள்
வார்த்தைகளில்
இடைபுகுந்தும், இடம்மாறியும்
பெரும்பாலும் தப்பும் தவறுமாகவே
உனக்காக
நான் எழுதும் கவிதைகள்!

துளித் துளியாய் கவிதைகள்!

மெல்லத் தலை நகர்த்திப் பிறந்து
விழி திறவாமல் சிரித்து
தானே தவழ்ந்து எழுந்து
நடைபயிலும் குழந்தை
ஒவ்வொரு விடியலிலும்!
--------------------------

எதாவது குழந்தையின் வீட்டில்
ஒதுங்கியிருக்கும் நிலவு
மழை நேரத்தில்!
--------------------------

எந்நேரமும் மவுனம் உடைபடலாம்
சிறு தீண்டல் போதும்
காத்திருகும் கார்மேகங்கள்!
--------------------------

தோகை விரித்தாடும் மயில்
தேடிக் களைந்த வாடைக்காற்று
வீடு நுழையும் அந்தி!
--------------------------

அகிம்சை போர்த்தித் திரியும்
இம்சைகள்
காந்தியின் பெயராலே!

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜையில்
அண்ணனின் பங்காக
அஞ்சாம் வகுப்புப் புத்தகங்களும்
தங்கையின் பங்காக
ஒண்ணாம் வகுப்புப் புத்தகங்களும்
அம்மாவின் பங்காக
சமையல் குறிப்புப் புத்தகங்களும்
வரிசைகட்டி நின்றன;
அப்பாவின் பங்காக வைக்க
வேறொன்றுமில்லை...
கல்விக் கட்டண ரசீதுகளைத் தவிர!
------------------------------------------------

சரஸ்வதி பூஜைக்கு
பள்ளியில் மாணவர் சேர்க்கை
லட்சுமி பூஜை!

Thursday, September 29, 2011

பாடுபொருள் படும்பாடு!

பாடுபொருள் காதலாகிப் போனால்
சிக்கல் வந்துசேரும் கவிஞனுக்கு!
பாடப்படுபவள் யாரென்றறியும் ஆவல்
இயல்பாகவே எழுந்துவிடும் வாசிப்பவருக்கு!
எழுதும்போதெல்லாம் யோசித்ததில்லை
யோசிக்கிறேன் கேள்வியெழும்போதெல்லாம்!
எந்த உருவமும் சரியாகப் பிடிபடவில்லை
"அவங்க உங்க மனைவி தான?"
பொய்யுரைக்கத் தூண்டும் கேள்விகளும் அவ்வப்போது!
கவிஞன் ஊற்றெடுக்கும் தலைக்காவிரியாக
காதல் கவிதைகள் வழிந்தோடும் ஊரில்
மீசை அரும்புமுன் அரும்பிடுமே இந்த ஆசை!
நிஜத்தைக் காதலிக்கும் தைரியமற்று
கற்பனையில் காதலிக்கும் ஜாதியில் வளர்ந்து
கூடாமல் கூடிக் கலந்த காதலில்
கரு கூடாமல் போன சோகமும்,
கலைந்துபோன கர்ப்பத்தின் வலியும்,
குறைமாதக் குழந்தையின் பதைபதைப்பும்,
வழிமறக்கச் செய்த சுகப் பிரசவமுமாய்
அத்தனை அனுபவத்தையும் பிரசவித்தாலும்
காரணம் யாரென்றறியும் ஆர்வம் குறைவதில்லை!
காதலை உணர்த்தி, வரிகளில் வழிந்து,
கவிதையாய் நிறைந்து ஓடுபவளின் உருவம்
காண முடியாததை எப்படிச் சொல்வேன்?
தாகம் தணிக்கும் தண்ணீரின் உருவம்
இப்படித்தான் இருந்ததென்று!

காதலுடன்...


பேனாவைக் கவிழ்த்தியதுமே
காகிதமெங்கும் கொட்டியது
உனக்கான என் மனது!

நீ வாசிப்பாயென்ற நப்பாசையில்

தானாகவே வந்து
கோர்த்துக் கொண்டன எழுத்துக்கள்
உனக்கான கவிதையில்!

உன் அழகை வர்ணித்து

எதுவும் எழுதவில்லை
இயல்பான அழகுக்கு
வர்ணனைப்பூச்சு தேவையில்லை!

உன் மீதான காதலை

இக்கவிதையில் சொல்லவில்லை
உன் பெருமையை
உன்னிடமேவா சொல்லிக்காட்டுவது?

இப்படித்தான்

குழம்பிப் போகிறேன்
என் சிந்தனையில் உன் முகம்
பட்டுத் தெறிக்கும்போதெல்லாம்!

நீ பிரித்துப் படித்தால்

மகிழ்வேன்!
நாமிருவரும் சேர்ந்து படித்தால்
இக்கவிதை மகிழும்!

காதல் சொன்ன பருவம்!



முற்றிலும் அவள் நினைவாகவே
திரிந்து போனது என் மனது
நொதிக்கச் செய்த முதல் துளியை
தேடிச் சுவைக்கத் துடிக்கிறேன்!

அவள் என்ன பேசினாலும்
யோசிக்காமல் ரசிக்கப் பிடிக்கிறது
இந்த ரசனை வந்து அப்பிக்கொண்ட
முதல் வரியைத் தேடிப் பார்க்கிறேன்!

அவளை மையமாகக் கொண்டே
சில காலமாகச் சுழலுது பூமி
சுழற்சி தடம்மாறிப்போன நொடி தேடி
கடிகாரத்தைப் பின்னோக்கிச் சுழற்றுகிறேன்!

பக்குவமாய்ப் பேசி மொட்டவிழ்த்து
மெல்லிதழ் தோகை விரியச் செய்து
சுவாசமெல்லாம் அவள் வாசத்தால்
நிரப்பிய பொழுதைப் புரட்டிப் பார்க்கிறேன்!

உந்தி உதைத்து, சிறுகச் சரிந்து
உருண்டு உடல் நழுவி, மெல்ல நகரும்
மழலையின் முதன்முயற்சியாய்
அவள் மனதை எட்டிப் பிடித்த பரவசத்தை
உணரத் துடிக்கிறேன் மீண்டும் குழந்தையாகி!

துளிப்பா கோவை!

பந்திக்கு முந்தாமல் தடுக்க
கையில் திணிக்கப்பட்டது
அட்சதை அரிசி!
-----------------------------------

ஊருக்கெல்லாம் பெய்த மழையில்
என்னை நனைத்தன
எனக்கான மழைத்துளிகள்!
----------------------------
இரவு வரும்போதெல்லாம்
பீதியை போர்த்திக் கொள்ளும்
தூங்காத அசைவுகள்!
-------------------------------
ஊனமுற்ற பிச்சைக்காரரை
கடக்கையில் ஊனமாகிறேன்
பையில் சில்லறையில்லாத போது!
--------------------------------
இன்னமும்
தூங்காத குழந்தையின் சிணுங்கல்
விழித்தபடி நிலவு!
-------------------------------
வீட்டு உரிமையாளருக்குத் தெரியாமல்
மீன் சமைக்கும்போது
காவல் காத்தது பூனை!
-------------------------------
குழந்தைகள் தூக்காததால்
உயிர்ப் பெறாத
கொலு பொம்மைகள்!
-------------------------------
யாரோ ஒருவனை அணைத்தபடி
யாரோ ஒரு வசீகரமான பெண்
தினமும் கடந்து செல்கிறாள்
போக்குவரத்து நெரிசல்களில்!
-------------------------------------------
குட்டிக் குட்டிக் கார்களும்
அமுக்கினால் கத்தும் பொம்மைகளும்
மட்டுமே போதுமாயிருக்கிறது
என் மகனுக்கு;
நாள் முழுக்க சந்தோசமாய் கழிக்க!
-------------------------------------------
பறவைகளில்லாத நேரம்
வத்தி வைத்துச் செல்கிறது
காற்று!

Wednesday, September 21, 2011

தெருவிளக்கு எரியவில்லை
இருளில் மூழ்கியது
காக்கையின் கூடு
கோவிலில் பார்க்குமிடமெல்லாம்
உபயம் எழுதியிருக்கிறது;
எப்படி நம்பிக்கை வரும்?
சில்லறை போடக்கூட
வக்கில்லாத எனக்கு!

Monday, September 19, 2011

கூரை ஓட்டை வழியே
உறங்கும் இடந்தேடி வந்தது
நள்ளிரவின் கனத்த மழை!

Thursday, September 15, 2011

சேகரிப்பதற்கு யாருமில்லையென்றாலும்
வெண்மை நிறப் பன்னீர்ப் பூக்களை
உதிர்த்துக் கொண்டேயிருக்கிறது!

Thursday, September 8, 2011

உடைக்காத காதல்!

மனதுள் நீயே நிறைந்துவிட்டாய்
படிக்கட்டில் தொற்றியபடி
என் பயணம்!

எனக்காகத் துடித்த இதயம்
தடம் மாறித் துடிக்கிறது
சில நேரம் சிரிக்கிறது!

உன்னை விரும்பும் என்னை
உனக்கும் பிடிக்க வேண்டுமென்று
விரும்புகிறேன்!

எத்தனையோ பேரைப்போல
கடந்து செல்ல முடியவில்லை
வெறும் வழிப்போக்கனாய்!

உனக்கான என் காதல்
இன்னமும் பல்லிடைக் கடுகாக
சொல்லவும் முடியாமல்!

நம்பிக்கையோடு இருக்கிறேன்
முட்டை உடையாமலேயே
குஞ்சு பொறிக்குமென!

Tuesday, September 6, 2011

இன்னமும் மடித்து வைக்கப்படாத
அந்த இறுதிக்கட்டத் தூக்கம்
அலாதியானது...
கனவறுந்து போன பொழுதுகளில்
பகற்பொழுதின் அவசரங்கள் வந்து
அப்பிக்கொள்ளக் காத்திருக்கையில்
செல்லக் குழந்தையென
தலையணையை மெல்ல அணைத்து
இருளுக்கும் புலர்வுக்குமிடைப்பட்ட
அதிகாலையைப் பிழிந்தெடுத்து
தன்னை மறக்க வைத்த உறக்கத்தை
விழிமூடி சிலநொடிகள் அனுபவித்து
விடியலில் வழியனுப்புகையில்
இன்னும் சில கணங்கள்  நீட்டிக்கும்படி
கோரிக்கை எழுப்பத் தோன்றும்
சிணுங்கிடும் கடிகாரம் பார்த்து!

பள்ளிப்பருவம் - 1

அதே காதுகிழிக்கும் மணியோசைதான்
பள்ளி விடும்போது மட்டும்
மனதுக்கினிய இசையாக!

பள்ளிப்பருவம் - 2

எத்தனை முறை ஒடித்தும்
ஒருபோதும் திருந்தியதில்லை
பிரம்புடன் திரியும் மணி வாத்தியார்!

பள்ளிப்பருவம் - 3

கருப்பசாமிக்கு
ஆட்டுக்குட்டியை நேர்ந்துவிட்ட
எங்கப்பனின்
ஆயிரத்தெட்டு வேண்டுதல்களோடு
அஞ்சாப்பு "பி" செக்சன் வாத்தியாராக
சுப்ரமணி வாத்தியார் வரக்கூடாதென்ற
என்னோட வேண்டுதலும் அடக்கம்!

பள்ளிப்பருவம் - 4

"ஜனகணமண" அர்த்தம் விளங்கியதில்லை
தினமும் கால்கடுக்க ரசிப்பேன்...
ரமா, சந்திரா பாடும்போது!

பள்ளிப்பருவம் - 5

மூச்சடக்கி முங்கு நீச்சலடித்தவன்
சுவாசத்தைச் சுவைக்கும் மகிழ்ச்சிதான்
விளையாட்டுப் பாடவேளை நேரத்தில்!

Monday, August 29, 2011

செங்கொடி உயரட்டும்!

அன்று
ஒரு முத்துக்குமார் பற்றவைத்தான்
இன்று பற்றவைத்திருக்கிறாள்
செங்கொடி!
செங்கொடியேந்திப் போராடும்
மனிதரிடையே
செங்கொடியே போராடி
வீழ்ந்திருக்கிறது!
கொடிகாத்த குமரனின் கூட்டமோ
எள்ளி நகையாடுகிறது!

படுகொலையைத் தடுக்க
தன்னையே தொலைத்திருக்கிறாய்...
ஆம்;
"என்னுயிரை எடுத்துக்கொண்டு
என் மகனைக் காப்பாற்று"
என வேண்டும் தாய்க்கும்
உனக்கும் வித்தியாசமில்லை!
இந்திய ஜனநாயகத்தின் கோரப்பசிக்கு
இன்னொரு உயிர் கிடைத்ததே
மிச்சம்!

நம் தமிழ்நாட்டிலேயேதான்
பாதுகாப்பாக இருக்கிறது...
நம் தமிழர்களை
கொல்லக் காத்திருக்கும்
தூக்குக் கயிறு!
அறுத்தெரியவும் முடியாமல்
எரிக்கவும் முடியாமல்
தன்னையே எரித்துவிட்டாயே!
உன் மனது
எவ்வளவு தூரம் எரிந்திருக்கும்?

அன்னாஹசாரேக்களால்
இருட்டடிக்கப்பட்ட
சகோதரர்களின் உயிர்ப்பிரச்சனையில்
ஊடக வெளிச்சமில்லாததால்
உன்னையே வெளிச்சமாக்கி
மாய்ந்தாயோ?

அறிவாளித்தனமாக
ஒதுங்கிச் செல்ல மட்டுமே
பழகிப்போன கூட்டம்,
முட்டாள்த்தனமென்று
எளிதாகச் சொல்லிவிடுகிறது...
துருப்பிடித்த
இரும்பு மனதோடு!

தமிழகத்தில் வாழும்
இந்திய காங்கிரஸ்வாதிகளே!
உங்கள் அரசியல் நலன்வேண்டி
பணிவான வேண்டுகோள்;
"ராஜீவ்காந்தி படுகொலை!
ராஜீவ்காந்தி படுகொலை!"
என்றே இனியும்
அரசியல் நடத்துவதற்காகவாவது
விட்டு விடச்சொல்லுங்கள்
எங்கள் சகோதரர்களை!

இன்று,
தங்களைத் தாங்களே
மாய்த்துக்கொள்பவர்கள்,
மாற்றி யோசிக்க நேரம் பிடிக்காது!

Wednesday, August 24, 2011

என்னை நனைத்த மழைத்துளிகள்

தேங்கிய நீரை
வாரியிறைத்தபடிதான்
வாகனங்கள் நகர்கின்றன
இருந்தும் குறைவதாயில்லை
மழைநீர்க் குட்டை!

சவ ஊர்வலம்போலதான்
போக்குவரத்து ஊர்ந்து செல்லும்
ஊர்வலத்தின் முன்னே
உண்மையிலேயே
செத்துக்கிடந்தாலும் கிடக்கும்
எதாவது அரசு பேருந்து!

தேரைகள், பாம்புகள், எல்லாமே
சொல்லாமல் கொள்ளாமல்
வந்து குடியேறும்
கண்ணுக்கு அகப்படாத மூலைகளில்...
வாடகை பயம் போல!


என் சமாதானத்தை
கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது
என் மனதுக்கு;
எனக்காகவே
சமாதானமானதுபோல
நடிக்கவும் கூட...
இன்னமும்
நடிக்கப் பழகாத அவளுக்காகவே
நானும் என் மனதும்
ஒவ்வொரு நொடியும்!
என்னை வழிநடத்தும்
கைத்தடியின்
முனை பற்றிய கரத்தில்
மெலிதாய் கிளம்பிய நடுக்கத்தில்
அவளிடம்
காதல் கடிதத்தை நீட்டிய பொழுது
மீண்டும் மலர்ந்தது!
மிகுந்த எச்சரிக்கையுணர்வோடு
சிந்தித்துத் திட்டமிட்டு
திரும்பவும் அது நடக்காமல்
மனதை
பக்குவப்படுத்தியே வந்தாலும்
ஏதோ ஒரு நொடியில்
எனை மறந்த சிந்தனையில்
கடித்தே விடுகிறேன்
உதடு தீண்டும் மீசையை!

Tuesday, August 16, 2011

எண்ணிலடங்கா வாகனங்கள்
கடந்துகொண்டேயிருக்கின்றன
எந்த வண்டும் வரவில்லை;
சாலையோரப் பூச்செடிகள்!

Tuesday, August 9, 2011

வெற்றிலை!

குளித்ததுமுடித்து, தலைசீவி
முகப்பூச்சு பூசி,
பொட்டுவைத்து, பூ வைத்து
அலங்காரமாய் வீதியில் திரிகிறது...
பீடாக்காரனுக்கு வாக்கப்பட்ட
வெற்றிலை!