Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Thursday, January 19, 2012

நீயில்லாத பக்கத்து வீடு!



எங்கள் வீட்டிற்கு
அடுத்த வீட்டின் முகவரியே
நீ வந்த பிறகுதான்
எனக்கு அறிமுகம்!
உன் வீட்டு முகவரியால்
என் வீட்டுக்கும்
முகவரி கொடுத்தாய் நீ!

கூடுடைத்து வரும்
கோழிக்குஞ்சைப் பார்க்கும்
பரவசம்தான்
உன் வீட்டை விட்டு
ஒவ்வொருமுறை
நீ வெளிவரும்போதும்!

இழுத்துச் செருகிய தாவணி
துப்பட்டா போர்த்திய சல்வார்
முழுக்க மூடிய முந்தானை
அத்தனையிலும்
கண்ணியமாகத்தான்
வலம் வருவாய்;
கண்ணியமாக
நீ வைத்த கண்ணியில்தான்
என் கன்னி வீழ்ச்சியே
தொடங்கியது!

பேசத் துடிக்கும் வாய்
கோர்க்கத் துடிக்கும் கரங்கள்
அருகாமை தேடும் பாதங்கள்
அத்தனை உறுப்புகளும்
உன்னால் ஒருமித்திருக்க
இதயமும் உடன்சேர்ந்து
துடிக்காமல்
சிலநேரம் சிரிக்கும்!

நீ எதிர்ப்படும்போதெல்லாம்
என்னுள்ளே
பாரதப்போரே நடக்கும்;
வழக்கம்போல்
உன் முன் தோற்று
நிராயுதபாணியாகி
எனக்கு நானே
சமாதானமாகிப் போவேன்!

என் வீட்டுச் சுவற்றின்
மறுபக்கத்தில்தான்,
மிகவும் பக்கத்தில்தான்
நீயென்றாலும்
ஒருமுறை கூட
உன்னோடு பேசியதில்லை!

உன் பார்வை
என்னைச் சந்திககாத வேளைகளில்
உன்னைச் சந்தித்து வருவதே
தினசரி வேலையாக
உன்னைப் பின் தொடரும்
என் பார்வை!
மவுனப்பார்வையால்கூட
உன் பார்வையைச் சந்திக்கும்
சக்தி வாய்த்ததில்லை!

உனக்காக பலமுறை
தெருப் பசங்களோடு
சண்டையிட்டிருக்கிறேன்
அதுவும்
உனக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை!

வாடகை வீடுகளின் சந்திப்பும்
ஒருவித ரயில் சினேகமென்பதை
புரிந்திருந்தாலும்
நீ வீடு மாறியபோதுதான்
முதல்முறை உணர்ந்தேன்
புரியாத ஏதோவொன்றை!

நானுமில்லாத அந்த தெருவிற்கு
இப்போது சென்றாலும்கூட
நீயில்லாத பக்கத்து வீட்டையும்
நீயில்லாத தெருவையும்தான்
பார்க்க முடிகிறது!

Wednesday, November 9, 2011

அவளோடு நான் - கவிதைச் சரம்!



அவளோடு நான் - 1

அவளைச் சிந்திப்பதற்கு முன்
சிந்தித்த பின் என்றே
எனக்கான வரலாறு எழுதப்பட வேண்டும்!

அவளோடு நான் - 2

அவளைப் பற்றி
சிந்திக்கத் தொடங்கிய பின்பே
என்னைப் பற்றி
சிந்திக்கத் தொடங்கியது உலகம்!


அவளோடு நான் - 3

இப்போதெல்லாம்
அவள் மனதிலிருந்து
அவளின் உதடுகளால்
வடிகட்டித் தரும் வார்த்தைகளை
சுவைப்பதற்காகவே
காத்திருக்கிறேன் தினமும்!


அவளோடு நான் - 4

அவள் பேசும்போது
உதடுகளை எட்டியெட்டிப் பார்க்கும்
அவளது முன்நெற்றியின்
சிறு கற்றை முடிகளை
அடிக்கடி விலக்கி விடும்
விரல்களைப் போலவே
என் கண்களும் மனதும்!

அவளோடு நான் - 5

எனக்கென அவள் சிந்திய
மெல்லிய நூல் சிரிப்பிலே
நாளெல்லாம் பறக்கிறேன்
உலகினின்று விடுபட்ட
காற்றாடியாக!

அவளோடு நான் - 6

அவளால் எழுதிய கவிதையை
சொல்லித் திரிகிறேன்
எனது கவிதையென!

அவளோடு நான் - 7

எங்கள் காதுகளுக்கும்
கேட்காமல் தான்
ரகசியங்கள் பரிமாறுகிறோம்
உதடும் உதடும்
ஒட்டிய மாதிரி!

அவளோடு நான் - 8

மருதாணி பூசிக் கொள்கிறாள்
முகப்பூச்சு பூசிக்கொள்கிறாள்
நகப்பூச்சு பூசிக்கொள்கிறாள்
என்னையறியாமல்
மகிழ்ச்சியை பூசிக்கொள்கிறேன்
அவளைப் பார்த்ததுமே!

அவளோடு நான் - 9

அவளைச் சந்திக்கும்போதெல்லாம்
ஏதேனும் சிறு அன்புப் பரிசை
வாங்கித் தருகிறேன்;
அவளும்
முதல்முறை பார்க்கும்
பரவசத்துடன் தான்
ஒவ்வொருமுறையும் பார்க்கிறாள்;
பரிசையும், என்னையும்!

அவளோடு நான் - 10

என்னுள் வாசம் செய்யும்
அவளின் அருகாமை
தினம்தினம்
என்னை வசப்படுத்தும்
அவளின் வாசத்தால்!

அவளோடு நான் - 11

அவளுக்காக காத்திருந்த
நிமிடங்களின் நொடிகளுக்குள்
போட்டி நடக்கும்;
ஏதோ ஒரு நொடி
அவளை அழைத்து வந்து
என் முன் நிறுத்தும்!

Monday, October 10, 2011

வேண்டாம் இன்னொருமுறை!


அலைகளும் பலமுறை வந்து
ஏமாந்து திரும்பி விட்டன
... உனக்காகக் காத்திருந்த நிமிடங்களில்!

காணும் வரை இறுகிய முகம்
நீ நெருங்கவும் நொறுங்கியது
கடற்கரையில் மணலாய்!

சின்னச் சிணுங்களில்
சின்னாபின்னமாகி போனது
சேமித்து வைத்திருந்த கோபமெல்லாம்!

திட்டித் தீர்க்க வேண்டுமென்ற
திட்டமும் தவிடுபொடியானது
செல்லத் தீண்டலில்!

கொட்டிக் குவிக்க வைத்திருந்த
வர்த்தைகளெல்லாம்
முடிச்சே அவிழ்க்கப்படாமல்!

என் கோபமே
என்னைக் கேலி செய்கிறது
உன்னோடு சேர்ந்துகொண்டு!

இனியொரு முறை தவிக்க விடாதே
தோற்றே பழகிப்போன
வீராப்புகளை என்னோடு!
See more

Thursday, September 29, 2011

பாடுபொருள் படும்பாடு!

பாடுபொருள் காதலாகிப் போனால்
சிக்கல் வந்துசேரும் கவிஞனுக்கு!
பாடப்படுபவள் யாரென்றறியும் ஆவல்
இயல்பாகவே எழுந்துவிடும் வாசிப்பவருக்கு!
எழுதும்போதெல்லாம் யோசித்ததில்லை
யோசிக்கிறேன் கேள்வியெழும்போதெல்லாம்!
எந்த உருவமும் சரியாகப் பிடிபடவில்லை
"அவங்க உங்க மனைவி தான?"
பொய்யுரைக்கத் தூண்டும் கேள்விகளும் அவ்வப்போது!
கவிஞன் ஊற்றெடுக்கும் தலைக்காவிரியாக
காதல் கவிதைகள் வழிந்தோடும் ஊரில்
மீசை அரும்புமுன் அரும்பிடுமே இந்த ஆசை!
நிஜத்தைக் காதலிக்கும் தைரியமற்று
கற்பனையில் காதலிக்கும் ஜாதியில் வளர்ந்து
கூடாமல் கூடிக் கலந்த காதலில்
கரு கூடாமல் போன சோகமும்,
கலைந்துபோன கர்ப்பத்தின் வலியும்,
குறைமாதக் குழந்தையின் பதைபதைப்பும்,
வழிமறக்கச் செய்த சுகப் பிரசவமுமாய்
அத்தனை அனுபவத்தையும் பிரசவித்தாலும்
காரணம் யாரென்றறியும் ஆர்வம் குறைவதில்லை!
காதலை உணர்த்தி, வரிகளில் வழிந்து,
கவிதையாய் நிறைந்து ஓடுபவளின் உருவம்
காண முடியாததை எப்படிச் சொல்வேன்?
தாகம் தணிக்கும் தண்ணீரின் உருவம்
இப்படித்தான் இருந்ததென்று!

காதலுடன்...


பேனாவைக் கவிழ்த்தியதுமே
காகிதமெங்கும் கொட்டியது
உனக்கான என் மனது!

நீ வாசிப்பாயென்ற நப்பாசையில்

தானாகவே வந்து
கோர்த்துக் கொண்டன எழுத்துக்கள்
உனக்கான கவிதையில்!

உன் அழகை வர்ணித்து

எதுவும் எழுதவில்லை
இயல்பான அழகுக்கு
வர்ணனைப்பூச்சு தேவையில்லை!

உன் மீதான காதலை

இக்கவிதையில் சொல்லவில்லை
உன் பெருமையை
உன்னிடமேவா சொல்லிக்காட்டுவது?

இப்படித்தான்

குழம்பிப் போகிறேன்
என் சிந்தனையில் உன் முகம்
பட்டுத் தெறிக்கும்போதெல்லாம்!

நீ பிரித்துப் படித்தால்

மகிழ்வேன்!
நாமிருவரும் சேர்ந்து படித்தால்
இக்கவிதை மகிழும்!

காதல் சொன்ன பருவம்!



முற்றிலும் அவள் நினைவாகவே
திரிந்து போனது என் மனது
நொதிக்கச் செய்த முதல் துளியை
தேடிச் சுவைக்கத் துடிக்கிறேன்!

அவள் என்ன பேசினாலும்
யோசிக்காமல் ரசிக்கப் பிடிக்கிறது
இந்த ரசனை வந்து அப்பிக்கொண்ட
முதல் வரியைத் தேடிப் பார்க்கிறேன்!

அவளை மையமாகக் கொண்டே
சில காலமாகச் சுழலுது பூமி
சுழற்சி தடம்மாறிப்போன நொடி தேடி
கடிகாரத்தைப் பின்னோக்கிச் சுழற்றுகிறேன்!

பக்குவமாய்ப் பேசி மொட்டவிழ்த்து
மெல்லிதழ் தோகை விரியச் செய்து
சுவாசமெல்லாம் அவள் வாசத்தால்
நிரப்பிய பொழுதைப் புரட்டிப் பார்க்கிறேன்!

உந்தி உதைத்து, சிறுகச் சரிந்து
உருண்டு உடல் நழுவி, மெல்ல நகரும்
மழலையின் முதன்முயற்சியாய்
அவள் மனதை எட்டிப் பிடித்த பரவசத்தை
உணரத் துடிக்கிறேன் மீண்டும் குழந்தையாகி!

Thursday, September 8, 2011

உடைக்காத காதல்!

மனதுள் நீயே நிறைந்துவிட்டாய்
படிக்கட்டில் தொற்றியபடி
என் பயணம்!

எனக்காகத் துடித்த இதயம்
தடம் மாறித் துடிக்கிறது
சில நேரம் சிரிக்கிறது!

உன்னை விரும்பும் என்னை
உனக்கும் பிடிக்க வேண்டுமென்று
விரும்புகிறேன்!

எத்தனையோ பேரைப்போல
கடந்து செல்ல முடியவில்லை
வெறும் வழிப்போக்கனாய்!

உனக்கான என் காதல்
இன்னமும் பல்லிடைக் கடுகாக
சொல்லவும் முடியாமல்!

நம்பிக்கையோடு இருக்கிறேன்
முட்டை உடையாமலேயே
குஞ்சு பொறிக்குமென!