Thursday, June 14, 2007

ராமர் பாலமும் அனுமார் கூட்டமும்!

கல்லைக் கடவுளென்று
காட்சியாக்கி
காசு பார்க்கும் கூட்டம்
கடல்
கொட்டிக் குவித்த
மணல் திட்டுகளைப்
பாலமென்று சொல்லுது...
சீதையை மீட்கச் சென்ற
பாதையென்றும் சொல்லுது!

இன்று
ராவணனும் இல்லை...
சீதையும் இல்லை...
அட,
ராமனும் கூட
கோர்ட்டுக்கு வரவில்லை...
சாட்சி சொல்ல!
யாரிடம் விசாரிக்க?
கேட்குது நீதிமன்றம்...
பதிலைக் காணோம்!

ஈழத்தமிழரை
மீட்க வழியில்லை...
இல்லாத சீதையை மீட்க
சொல்லுது புதுக்கதை!
நல்லவேளை...
இந்த நாசவலையில்
வீழவில்லை நாசா!

ராமனே
கட்டினால் தான் என்ன?
வெட்டியாய் இருப்பதை
வெட்டினால்தான் என்ன?
ராமாயண கதையில்
சுயநலமாக எழுந்ததை
மகாபாரதத்தின்
பொதுநலனுக்காக
குடைவது தவறா?

சீதையை காப்பாற்றிய
ராமன்...
இன்று மீண்டும்
யுத்தகளத்தில்...
ராஜபக்சேவை காப்பாற்ற!

அண்டைநாட்டுக்கு,
நம் வளர்ச்சியில்
பயம் கொண்ட
அயல்நாட்டுக்கெல்லாம்
ஆகாத திட்டம்...
இவர்களுக்கும்
ஆகாமல் போனதில்
வியப்பில்லை!
செவிகிழியக் கேட்குது
இவர்களின்
கோஷமும் வேஷமும்...
பாரத் மாதாகீ ஜே!

Monday, March 19, 2007

பருத்தி வீரனும் பொணந்திண்ணியும்

பருத்திவீரன் படம் நேற்று பார்த்தேன். இயல்பான கிராமத்து வாழ்க்கைமுறைகளை வெளிப்படுத்தும் மிகச்சில படங்களின் வரிசையில் பருத்திவீரனும் அமைந்துள்ளது. "ரோஜாப்பூ ரவிக்கைக்காரி" படத்தில் சிவகுமாருக்கு கிடைத்த நல்ல கதாபாத்திரம், சிவகுமாரின் மைந்தர் கார்த்திக்கு முதல் படத்திலேயே கிடைத்திருப்பது நல்ல தொடக்கம்.

ரோ.ர. படத்திற்கும் பருத்திவீரனுக்கும் சில ஒற்றுமையை என்னால் உணரமுடிந்தது. இரண்டு படமுமே பொருந்தமில்லாத ஜோடிகளின் தோல்வியைத்தான் காட்டுகின்றன. முன்னது, திருமணமானபின் மணவாழ்க்கையின் தோல்வியென்றால், பின்னது காதலின் தோல்வி. முன்னதில், மனதிற்கு பிடிக்காத கணவனைவிட்டு விலகி தவறான உறவில் வீழும் மனைவியையும், பின்னதில், காதலைப் புரிந்துகொள்ளாத காதலன், தறிகெட்டு, முறைகெட்டுத் திரிவதையும் காட்டுகிறார்கள்.

சிவகுமாரின் கதாபாத்திரம், வெளிஉலகம் தெரியாத, கிடைத்ததை உண்டு உறங்கும் அப்பாவியை வெளிப்படுத்தும். கார்த்தியின் கதாபாத்திரமும் கிடைத்ததை அனுபவித்து ஒரு வரையரையின்றி காலத்தை கடத்தும் ஒருவனின் வாழ்க்கைதான். ஆனால் இவன் அப்பாவிக்கு நேர் எதிரான முரடன். இவனிடம் கள்ளங்கபடம் நிறைய உண்டு.

கார்த்திக்கு ஜோடியாக வரும் பிரியாமணி தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மேக்கப் இல்லாமல் முகத்தைக் கட்டியிருப்பதற்காகவே பாராட்டலாம். சரிக்குச்சரியாக தகப்பனோடு வாதம் செய்யும்போது நடிப்பில் எகிறுகிறார்!

மற்றபடி, ஜாதியைத் தோளில் சுமக்கும் பொன்வண்ணன் கதாபாத்திரமும், சித்தப்பாவாக வரும் சரவணனின் கதாபாத்திரமும், பல படங்களில் பார்த்ததுதான். இதில் குறிப்பிடும்படியான இன்னும் இருவர், அம்மாவாக வரும் பெண்ணின் பதைபதைப்பும், பொன்வண்ணனுக்கு ஆலோசனை சொல்லும் பொணந்திண்ணியின் நடிப்பும்.

பொணந்திண்ணி, பெயர்க்காரணமே வித்தியாசமாக உள்ளது. நானும்கூட எனது கிராமத்தில் இதுபோன்ற சொந்த பெயர் மறந்து, பட்டபெயர் மட்டுமே நிலைக்க வாழும் பலரைப் பார்த்திருக்கிறேன். பொணந்திண்ணி போன்ற ஆலோசனை சொல்லும் பெரிய மனிதர்களை எல்லா சமூகத்திலும் நாம் காணலாம். இவர்கள், தன்னால் வெல்லமுடியாத காரியத்தை, அடுத்தவரை உசுப்பேற்றி வெற்றிபெற முயற்சிக்கும் ரகம். பெரிய மனிதனாக காட்டிக்கொள்ளும் குள்ளநரிகள்!

மொத்தத்தில், இந்த படத்தில் கதை சொல்லியிருப்பதை விட, கிராமங்களில் இன்னமும் வாழும் சில மறக்கமுடியாத கதாபாத்திரங்களை கண்முண் நிறுத்தியிருப்பது இயக்குனரின் பார்வையைக் காட்டுகிறது.

கதையிலும் கூட வழக்கம்போல, தேவர் சமூகத்தையே கிராமமாகக் காட்டியிருந்தாலும், ப்ளாஷ்பேக்கில், தேவர் சமூகத்து வாலிபன், தனது சமுகத்தின் எதிர்ப்பைமீறி, உறவுகளை ஒதுக்கி, தன்னை முன்னுக்குக் கொண்டுவந்த குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆதரவற்ற பெண்ணை மணப்பதாகக் காட்டியிருப்பது வித்தியாசமான முயற்சி.

பருத்திவீரனை ஹீரோ என்று போற்றாமல் போக்கிரித்தனமானவனாகத்தான் இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இப்போது வருகின்ற ஹீரோயிசத் திரைப்படங்களில் இதுபோன்ற போக்கிரிகளைத்தான் ஹீரோ என்று சொல்லி பஞ்ச் வசனங்களைப் பேசவைக்கிறார்கள்!!

Saturday, March 17, 2007

டாக்டர் ராமதாஸின் உணர்வுப்பூர்வமான பேட்டி!

இந்த வார ஆனந்த விகடன், குமுதம் இரண்டிலுமே டாக்டர் ராமதாசின் பேட்டி வந்திருந்தது. உண்மையிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பேட்டி.

"சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் 5000 ஏக்கர் விவசாய நிலத்தை அந்நிய நாட்டு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு, அந்த பரப்பளவிற்குள் அவர்களின் ராஜ்ஜியம் மட்டுமே நடக்க வழிவகுப்பதை எடுத்துச் சொல்லியிருந்தார். விவசாயத்தை ஒழித்து, விவசாயிகளை ஒழித்து பொருளாதார மண்டலம் வருவதை எதிர்த்து களமிறங்கி போராடுவேன் என்று கூறியிருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளை நசுக்கி, கீரைக்கட்டு விற்கும் பெரியம்மாவின் வயிற்றிலடித்துவிட்டு, ரிலையன்ஸ் போன்ற திமிங்கலங்களிடம் சில்லறை வணிகத்தை கொடுப்பதை கடுமையாக எதிர்த்துள்ளார்."யார் சொன்னார் என்பதைப் பார்க்காமல், என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தால் நாட்டுப்பற்றுள்ள அனைவருக்கும் அவரது பேட்டியில் வெளிப்படும் உண்மை புரியும்.

நம் நாட்டின் வளர்ச்சி, எதிர்கால திட்டம் அனைத்தையும் உலகமயமாக்கலுக்கு முன், உலகமயமாக்கலுக்கு பின் என பிரித்துப் பார்த்துதான் இனி நாம் மதிப்பிட வேன்டும்.
வெள்ளைக்காரன் கொள்ளையடித்துச் சென்று முழுதாக நூறு ஆண்டுகள்கூட ஆகவில்லை... அதற்குள் மீண்டும் அவர்களை அழைத்துவந்து நீங்கதான் எங்க நாட்டு பொருளாதாரத்தை சரி செய்யணும், உங்களுக்கு நிலமும் தர்றோம், நிலத்தடி நீரும் தர்றோம். தயவுசெய்து வாங்க... வாங்க... வாங்க... என்று ஒவ்வொரு மாநிலமும் போட்டிபோட்டு கூப்பிடத்தொடங்கி விட்டன.

"படிச்சவனை வேலை தர்றதா சொல்லி வளைச்சுப் போட்டுக்கோ... பெரிய மனுஷங்கள பங்காளியாக்கிக்கோ!" என்ற தத்துவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நூற்றுக்கணக்கான கம்பனிகள் இந்தியாவை நோக்கி படை நகர்த்தி வருகின்றன. நம்மவர்களும் தினமும் பூரணகும்ப மரியாதை தந்து இழுத்து வந்து கையெழுத்துப் போட்டு "இதோ பார்! எனது மாநிலத்திற்காக எங்கள் ஆட்சியில் இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய நாட்டு முதலீட்டைக் குவித்திருக்கிறோம்!" என்று மார்தட்டிக்கொள்கிறார்கள்!

குளிர்பான வியாபாரத்தைத் தொலைத்தோம்! துட்டு தந்து தண்ணீர் வாங்கப் பழகிக் கொண்டோம்! அடுத்து "மொத்த வியாபார"ங்களைத் தொலைத்தோம்! இப்போது சில்லரை வியாபாரத்தையும் தொலைத்துக்கொண்டு இருக்கிறோம்! இவை அனைத்தையும், நமது நம்பிக்கை நட்சத்திரங்களாக, காலங்காலமாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் எந்த கட்சியும் தட்டிக்கேட்காமல் கைதட்டி வரவேற்பதில்தான் முன்னின்றன. தமிழ்நாட்டு சிறுபான்மை கம்யூனிஸ்ட்டுகளும்கூட ஒன்றும் செய்வதறியாது நிற்கும் நிலையில் ராமதாசின் பேட்டி நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது.

மேற்கு வங்க அரசாங்கமே தனது போக்கை மாற்றிக்கொண்டு விவசாயத்தைப் புறக்கணிக்கும் இக்காலகட்டத்தில் தமிழக அரசியல் கட்சி ஒன்றிடமிருந்து அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு வந்திருப்பது பாராட்டுக்குரியது!

அப்படியே கொக்ககோலா நிறுவனம் நம்நாட்டு நீர்வளத்தை சுரண்டுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தால் நல்லது... இவ்விஷயத்தில் அன்புமணிக்கு மணிகட்ட ராமதாசால் தான் முடியும்!

Friday, March 16, 2007

அந்நியப்பட்ட பூமி!

ஊரில் எல்லாமே மாறிப்போச்சு!
முண்டியடிச்சு டிக்கெட் வாங்கின
தியேட்டருல
இப்போ
பத்து பேருக்காக படம் ஓடுது...
பேருக்காக படம் ஓடுது!

கந்து வட்டி புல்லட் மணி
ஹார்ட் அட்டாக்ல போயிட்டானாம்...
சந்தோசமா பேசிக்கிறாங்க!

கூடப் படிச்சவனுங்க எவனும்
இப்போ ஊருக்குள்ள இல்ல...
"கூட"ப் படிச்சதால
என்னைப் போலவே
ஏதோவொரு பட்டணத்தில்...
ஊருக்குள்ள ஒரே நண்பன்
பழனிக்கும் கல்யாணமாயிடுச்சு;
அடிக்கடி பார்க்க முடியல...

ஒரு காலத்துல
பசங்கள அலையவிட்ட கனகாவுக்கு
இப்போ ரெண்டு பசங்களாம்!
பழனி சொன்ன ஒரே
உருப்படியான தகவல்!

கிணற்று போரிங்
என்னோட சம்பளம்
எல்லாத்தியும் பேசினதுபோக
பஸ் ஸ்டாண்டு வரைக்கும்
அப்பாவும் நானும்
யோசிச்சி யோசிச்சி
இப்படிப் பேசியபடியே...

பஸ் ஸ்டாண்டு புதுசு;
நெறய பஸ்சு புதுசு;
பஸ்சுக்குள்ள
வடிவேலும் பார்த்திபனும்
வீடியோவுல கலாய்க்கிறாங்க!

எனக்கான பஸ்சும் வந்திடுச்சு
ஜன்னல் வழியே
அப்பாவைப் பார்க்கிறேன்...
எல்லாம் மாறிப்போன ஊரில்
அப்பாவின் கண்கள் மட்டும்
வழக்கம் போல...
என்னையே பார்த்தபடி...
பேருந்து மறையும் வரை!

மனசு என்னும் அதிசயம்!

திரும்பத் திரும்ப முயற்சிக்கிறேன்...
வறண்டு போன நாக்கு,
மருண்ட பார்வை,
இருண்டு போன முகம்
அனைத்தையும் கழற்றி
சிரிப்பினை அணிய
தொடர்ந்து முயற்சிக்கிறேன்...
இருக்கையில் நான் அமர்ந்தாலும்
அமராத மனசு
பழகாத பொதிமாடு போல
நிலைகொள்ளாமல்
இங்குமங்குமாய் அலைந்தபடி...
நேர்முகத்தேர்வு புதிதல்ல,
தேர்வாகாதுபோவதும் புதிதல்ல!
இருந்தும் புரியாதபுதிராய்
எனக்கான அழைப்பினை
எதிர்நோக்கும்வேளையிலே...
எதிர்வரிசையிலே
புதிதாக ஒரு பெண்முகம்...
பார்த்ததும் மனதில் பதிந்தது;
பொதிமாடு அடங்க...
என் முகத்திலும் புன்னகை!
தேர்வறைக்குள் நுழையுமுன்
என் மனசு வேண்டியது
"அவளுக்குமிங்கே வேலை கிடைக்கட்டும்!"

Thursday, March 15, 2007

கூவம் - திரைவிமர்சனம்

நாயகன் விஷால் நடித்து வெற்றிபெற்ற தாமிரபரணி படத்தை அடுத்து அவர் நடித்து வெளிவந்துள்ள படம் "கூவம்". தூத்துக்குடிக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஏழை விவசாயி விஜயகுமாருக்கு மகனா விஷாலைக் காட்டுறாங்க. கிராமத்துல பிழைக்க முடியாமல் வேலை தேடி சென்னைக்கு வர்றார் விஷால். அங்கயும் நிறைய கம்பெனிகளில் வேலைகேட்டு கிடைக்காமல் நொந்துபோய் கூவம் கரையோரமா நடந்து வர்றார். அப்பொ கால்தடுக்கி கூவத்துக்குள்ள விழுந்த விஷாலை தன்னோட துப்பட்டாவைப்போட்டுக் கைகொடுத்து தூக்கி காப்பாத்துறாங்க ரீமாசென்!

கூவம் கரையோரமா காதல் மலர சுவிட்சர்லாந்துல ஒரு டூயட்!

கூவம் இவ்ளோ நாற்றம் அடிப்பதை அனுபவத்தால் உணர்ந்த ஹீரோ விஷால் இதைப் பற்றிய விவரங்களை ரீமாசென்கிட்ட கேட்கிறார். நல்ல ஆறாக ஓடிக்கிட்டிருந்த கூவத்தை தொழிற்சாலைக் கழிவுகளால அசுத்தமாக்கிய தொழிலதிபர்களைப் பற்றி ரீமாசென் எடுத்துச் சொல்றாங்க. அந்த தொழிலதிபர்களை எப்படி பழி வாங்கறார்ங்கறது தான் மீதி கதை!

இந்த படத்துல ரீமாசென் கொஞ்சம் குண்டா இருக்கறதப் பார்த்தால் அவங்கள "பீமா"சென் அப்படீன்னு சொல்லலாம்னு தோணுது!

விஷால் கூவத்துல மீன்பிடிக்கறதுக்காக தூண்டில் போட்டு மணிக்கணக்கா உட்கார்ந்திருக்கறது நம்மை சிரிக்கவைத்தால், அதைப்பார்த்த ரீமாசென் தூண்டில் போட பெரிய ஆறா காட்டுறேன்னு சொல்லி மெரினா பீச்சுக்கு கூட்டிட்டு போய் தூண்டில் போடவைப்பது மேலும் சிரிக்கவைத்து நம் வயிற்றைப் புண்ணாக்குது!

நாற்றமெடுக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலையை சென்னைக்கு மத்தியில் மவுண்ட்ரோட்டுக்கு அருகிலேயே பல ஆண்டுகளாக அரசாங்கத்திற்குத் தெரியாமல் வில்லன் பிரகாஷ்ராஜ் நடத்தி வருவதும், அதன் கழிவு நீரை அண்டர்கிரவுண்ட் பாதை மூலமாக கூவத்தில் கலக்க வைப்பதும் புதுமையான வில்லத்தனம்! விஷால் அதனை தனது மூக்கினாலேயே மோப்பம் பிடித்து கண்டுபிடித்து ஆலையை இழுத்துமூட வைப்பது த்ரில்லிங்!

இறுதிக் காட்சியில் அனைத்து தொழிலதிபர்களையும் ஒட்டுமொத்தமாக பிடித்துவந்து கூவத்திலுள்ள நேப்பியர் பாலத்திற்கடியில் ஒருநாள் முழுக்க சிறைவைத்து கூவத்தின் நிலையைப் புரியவைத்து திருத்துவது பரபரப்பான கிளைமாக்ஸ்!

கடைசியில் மீண்டும் சுத்தமான கூவத்தில், நாயகன் விஷால் தூண்டில் போட்டு மீன்பிடிப்பதோடு படம் முடிகிறது! கூவம் - வாசம்!

................................................................................................................................................................................................விஜய டி.ஆர். நடித்து இயக்கிய "கீரைச்சாமி" விமர்சனம் விரைவில்...

Monday, March 12, 2007

மெளனம்

கூச்சலான போர்க்களத்தில்
தலையை கூட்டுக்குள்ளிழுக்கும்
இயலாமையாய் நாவின்
கூர் மழுக்கிய மெளனம்...
பேசாமல் பேசி,
அசையாமல் அணைத்து,
உள்ளச்சூட்டினில்
பொறுமையை அடைகாக்கும்;
என்றாவது
கூடுகள் உடைய
அக்கினிக்குஞ்சுகள் வெளியேறும்;
அனலில்
கூச்சல்கள் அலறிப் பொசுங்கும்!

Wednesday, February 28, 2007

3 மாநில தேர்தல் முடிவுகளும் - தமிழக அரசியல் ஜோதிடமும்

பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு நெருக்கடி இல்லையென்று சொல்கிறார் மன்மோகன்சிங். அவரோட கஷ்டம் அவருக்கு!

இந்த தேர்தல் முடிவு தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துமா? கண்டிப்பாக.

தமிழக பாஜக - 50% மகிழ்ச்சி: குருபார்வை மீண்டும் கிடைக்க வாய்ப்பிருக்குது! அதிமுகவுடன் தேர்தல் கூட்டணிக்கு தயார் என்று தமிழக பாஜக அறிவித்துள்ள நிலையில் வெளிவந்துள்ள முடிவு, இன்னமும் இந்தியாவில் பாஜகதான் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதுவே தமிழ்நாட்டில் அனாதையாக நிற்கும் பாஜகவை அணிசேர வைக்க உதவுமென்று நம்பலாம்! நிச்சயமா நம்பலாம்!

அதிமுக - 50% மகிழ்ச்சி: மேற்கூறிய காரணங்கள் தவிர வைகோ என்ற பியூஸ் போன பல்பை நம்புவதைவிட பாஜக போன்ற அரிக்கேன் விளக்குகளை நம்பலாம் என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்திருப்பார். 60ஆவது வயதை நெருங்கும் காலத்தில் இந்திய அளவில் அரசியலில் நுழைந்தால் பிரதமராக மாறலாம் என்ற எண்ணமும் தோன்றலாம்! நிச்சயமா தோன்றலாம்! அதோட தொல்லை பண்ற ஆந்திர காங்கிரஸ் அரசையும் கொஞ்சம் அதட்டிப் பார்க்கலாம்!

திமுக - 50% மகிழ்ச்சி: சனியோட உக்கிரம் குறைய வாய்ப்பிருக்குது! காமராஜர் காலத்துக்குப் பிறகு கொஞ்சம்கொஞ்சமாக வட மாநிலத் தலைவர்களிடம் மதிப்பிழந்து வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு கூட்டணி மந்திரிசபை கனவு சில காலமாக அடிக்கடி வந்து திமுகவை இம்சை பண்ணுகிறது. பத்திரிக்கையில் பேட்டி அளிக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கூட்டணி மந்திரிசபை பற்றி பேசி சந்தோசப்பட்டுக்கொள்ளும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இனி மறந்தும் அதுபற்றி வாய்திறந்து பேசமாட்டார்கள். இவர்கள் பேச, சோனியாவிடம் தயாநிதிமாறன் போட்டுக்குடுக்க யார் டோஸ் வாங்குவது?!

தமிழக காங்கிரஸ் - 50% வருத்தம்: மேற்கூறிய காரணங்கள் தான்! சனி வழக்கம்போல உச்சத்துலயே இருக்குது!

Saturday, February 24, 2007

தலைக்கவசம் - மூளைக்கு மரியாதை!

குழியினுள் புதைந்தும்
மேடாக உயர்ந்தும்
ஓடாகத் தேய்ந்தும்
இலைமறைகாயாக
மாநகரச் சாலைகள்!

திரும்பிய திசையெல்லாம்
கண்களைக் கவர்ந்து
கவனத்தைச் சிதறடிக்கும்
கவர்ச்சி விளம்பரங்களும்
விளம்பர நடிகைகளும்
வழிநெடுக... வானுயர பேனர்களில்!


அலுவலக அவசரத்தில்
பறந்து வருவதும்
குறுக்கே புகுந்து வருவதும்
சிக்னலில் சிக்கி வருவதும்...
குழம்பிய குட்டையாய்
சாலைப் பாதுகாப்பு!

சாலை விதிகள்
நமக்குத் தெரியும்
எதிரே வருபவருக்கு?
மோதினால்தான் தெரியும்...
தெரியாதென்பது!

அன்று
போருக்கு மட்டுமே தலைக்கவசம்
மற்ற நாளெல்லாம்
பேருக்கு... அலங்காரமாய்!
இன்றோ
சாலைப்பயணமே
போருக்குச் சமம்!
நேருக்கு நேர்,
கெரில்ல யுத்தம்,
விழுப்புண்
அனைத்துமே உண்டு...
கப்பமும் கட்டலாம்!

இன்னுமென்ன தயக்கம்?
தலைக்கவசமணிவதே உன்னதம்!
இது சுமையல்ல...
மூளைக்கு மரியாதை!